Bio Data !!

17 December, 2011

ஜோதி ஆம்க்.


"உலகில் உயிரோடு உள்ள மிகக் குள்ளமான பெண் என்கிற கின்னஸ் சாதனை படைத்த இந்தியரான ஜோதி ஆம்க். இவர்தான் உலகில் உயிரோடு உள்ள மிகக் குள்ளமான சிறுமி என்கிற கின்னஸ் சாதனைக்கு சொந்தக்காரி. 

இவரின் உயரம் 24.3 அங்குலம் மாத்திரம். இந்தியாவின் நாகப்பூர் நகரத்தைச் சேர்ந்தவர்.
கடந்த ஆண்டு தனது 17 ஆவது பிறந்த தினத்தைக் கொண்டாடினார். ஆனால் இநத ஆண்டு இச்சிறுமி தனது பிறந்த நாளுடன் யுவதி என்கிற ஸ்தானத்தை அடைந்தார். உலகின் மிக குள்ளமான யுவதியாக கடந்த ஆண்டு இருந்தவர் துருக்கி நாட்டைச் சேர்ந்தவர். அவரின் உயரம் 28.6 அங்குலம். ஜோதி அவரை விட 4.3 அங்குலம் குள்ளமான பெண்ணாக உள்ளா். எனவே, உலகின் மிகக் குள்ளமான யுவதி என்கிற நாளை அடைந்த மகிழச்சியில் தற்போது அவர் இருப்பதாக தெரிகிறது."

இந்த  செய்தி என்னைக் கவர்ந்ததற்கு ஒரு முக்கிய காரணம் உண்டு. கொஞ்ச நாட்களுக்கு முன் விஜய் டி வி யின் "நீயா? நானா? " நிகழ்ச்சியில் பெண்கள் அலங்காரம் செய்வதைப் பற்றிய விவாதம். அதில் Dr. ஷாலினி பெண்கள் தன்னை அழகு படுத்திக் கொள்வதே ஆண்களை கவர்வதற்காகத் தான் என்று சொன்னார். எல்லா விலங்கினங்களுக்கும் பறவைகளுக்கும் இந்த குணம் உண்டு என்றார். ஆனால் விலங்கினங்களையும் பறவைகளையும் தாண்டி நமக்கு ஆறாவது ஒரு அறிவு இருக்கிறது என்பதை மறந்து விட்டார் போலும். 



இந்த படத்தை பார்த்ததும் எனக்கு அது தான் நினைவுக்கு வந்தது. "உலகத்திலேயே" குள்ளமான பெண். அதைப் பற்றிய எந்த தாக்கமும் இன்றி அழகான ஒரு பார்பி டால் போல எவ்வளவு அழகாக, நேர்த்தியாக உடை உடுத்தி, அலங்காரம் செய்து, நிற்கிறது பாருங்கள். இந்தப் பெண்ணின் அலங்காரத்திற்கும் Dr .ஷாலினி இதே காரணம் தான் சொல்வாரா? 

ஒரு அலுவலகத்தில் ஆண்களோடு ஒற்றை ஆளாய் பணி புரிவதை விட பல பெண்களோடு பணி புரியும் போது தான் ஆடை அணிகலன்களில் அதிகம் கவனம் செலுத்துகிறார்கள். சில பெண்களுக்கு இயல்பாகவே தங்களை அழகு படுத்திக் கொள்வதில் ஆர்வம் அதிகம் இருக்கும். இன்று ஆண்களும் போட்டிக் களத்தில் இறங்கி விட்டார்கள். எனவே அலங்காரம் செய்வது என்பது ஒவ்வொரு தனிப்பட்ட ஆளின் இயல்பே அல்லாமல் பொதுவான ஒரு குணத்தில் வகைப்படுத்துவது தவறாகும். 

நான் சொல்வதை கவனித்துப் பாருங்கள். பத்து பேர் பணி புரியும் ஒரு இடத்தில் பத்து பேரும் உடையில் அதிக அக்கறை இல்லாதவர்களாக இருக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். பதினோராவதாக
ஒரு பெண் (அல்லது) ஆண் நன்கு உடை உடுத்தி புதிதாக வந்து சேர்கிறார் என்றால் அதன் பின் அந்த பத்து பேரிடமும் உடையில் ஒரு மாற்றம் ஏற்படும். ஆனால் அந்த மாற்றம் நிரந்தரமானதல்ல. கொஞ்ச நாள் ஆனதும் அவரவர் இயல்பான நிலைக்கு போய் விடுவார்கள். எனவே உடை உடுத்துவதிலும் அலங்காரத்திலும் அதிக கவனம் செலுத்துவது என்பது தனிப்பட்ட நபரின் இயல்பே அல்லாமல் கவரும் நோக்கத்தில் அல்ல. 

பொதுவாகவே நம் மக்களிடம் ஒரு எண்ணம் இருக்கிறது. அலங்காரத்தில் அதிக முக்கியத்துவம் காட்டும் பெண் நிச்சயமாய் நடத்தையில் நேர்மையாய் இருக்க வாய்ப்பு குறைவு என்று.  அது மிகவும் தவறான கருத்து. பார்ப்பதற்கு சுமாராய் , கவர்ந்திழுக்காதவராய் இருவர் பேசிக் கொண்டிருந்தால் நாம் ஜஸ்ட் லைக் தட் கடந்து விடுவோம். இதுவே கொஞ்சம் பளிச்சென்று உடை உடுத்தி இருந்தார்கள் என்றால் கற்பனை குதிரையை தட்டி விடுவோம். இங்கே தான் கோளாறு இருக்கிறதே தவிர உடை உடுத்துவதில் இல்லை.

 பதிவர் கௌசல்யா Dr  .ஷாலினியின் கருத்தைப்  பற்றி பதிவு எழுதி வைத்துக் கொண்டு "ரொம்ப நாள் ஆயிடுச்சே அக்கா போடலாமா?" என்று முன்பு கேட்டிருந்தார். நல்ல சந்தர்ப்பம் இது கௌசல்யா. அலங்காரம் செய்வது தொடர்பான உங்கள் எண்ணங்களை பதிவு செய்யுங்களேன்.

17 comments:

  1. நேத்துதான் டெக்கான் க்ரோனிக்கல்ல பார்த்தேன், அதுக்குள்ள தமிழ்நாட்டுக்கு வந்தாச்சா? செம ஸ்பீடுதான்

    ReplyDelete
  2. டிஸ்கவரி சேனலில் முன்பு இந்த பெண் பற்றி போட்டிருந்தார்கள். அதிசய பிறவி என நினைத்து அவரை துர்கா தேவியாக மக்கள் அவரை வழிபடுவதாக அதில் தெரிவித்திருந்தார்கள் (அவர் தான் இவரா??????)

    ஷாலினி சொன்னத நானும் தான் பார்த்தேன் ஹி...ஹி...ஹி...

    ReplyDelete
  3. நீங்கள் சொல்வது மிகச் சரி
    அந்தக்குள்ள யுவதி மிக நேற்த்தியாக உடையணிந்து
    எவ்வித தாழ்வு மனப் பான்மையும் இன்றி
    அசல் பொம்மைபோல் காட்சியளித்தது
    பார்க்கவே சந்தோஷமாக இருந்தது
    இது குறித்து நீங்கள் அழகான பதிவு கொடுத்து
    அதில் எழுப்பியுள்ள சிந்தனைகவனிக்கத் தக்கது
    பாராட்டுக்கள்

    ReplyDelete
  4. அந்தப்பெண் ஹாலிவுட்டிலும் நடிக்க விருப்பம் தெரிவித்திருக்கிறார்,அவருக்கும் அவரது நம்பிக்கைக்கும் ஒரு சல்யூட்,
    கண்ணை உறுத்தாத,மனதை சஞ்சலப்படுத்தாத எந்த அலங்காரமும் தவறல்ல.ஆனால் இது இடத்துக்கு இடம் வேறுபடும்.அதை புரிந்து நடந்தாலே போதுமே.

    ReplyDelete
  5. நன்றி சிபி தங்கள் முதல் வருகைக்கு

    ReplyDelete
  6. ஷாலினி சொல்வதை ஆமோதிப்பது போல தெரிகிறதே ஆமீனா

    ReplyDelete
  7. நன்றி ரமணி சார், உருவத்தில் ஒரு சின்ன குறைபாடு இருந்தாலே அதையே நினைத்து தன்னம்பிக்கை இழக்கும் மக்கள் மத்தியில் இந்தப் பெண் சிறப்பாக தெரிகிறது

    ReplyDelete
  8. மனதை சஞ்சலப் படுத்துவது ஆளுக்கு ஆள் அளவில் வேறுபாடும் என நினைக்கிறேன். ஜீன்ஸ் அணிந்த பெண் ஒரு கிராமத்தில் இருப்பவரை சஞ்சலப் படுத்தும் அதுவே நகரத்தில் கவனிக்கப் படாமல் போகும். ஆக இடத்துக்கு தக்க உடை உடுத்துவது நல்லது சரியா கோகுல் ?

    ReplyDelete
  9. எங்களைப்போல ஸ்டார் ஹோட்டலில் வேலை செய்பவர்களுக்கு கோட் சூட் போட்டு மேக்கப் போட்டு கொள்வதற்கே ஒரு மணிநேரம் வேண்டும் ஹி ஹி...

    ReplyDelete
  10. என் மனைவியின் தோழி ஒரு மராட்டிகாரி, ஒரு எழுத்தும் படிக்காதவர், ஆனால் கட்டும் சாரியின் நேர்த்தி சூப்பராக இருக்கும், அதுபோல மேக்கப்பும் எடுப்பாக தூக்கலாக இருக்கும், அந்தப்பெண்ணை காணும் போதெல்லாம் கையெடுத்து கும்பிடதான் தோன்றும், பார்ப்பவர்களின் பார்வை எப்பிடியோ ஆனால் அவர்கள் வீட்டில் அவள்தான் குல குத்து விளக்காக இருந்து குடும்பத்தை கவனித்து கொள்கிறாள்...!!!

    ReplyDelete
  11. சரியா சொன்னீங்க மனோ. மராட்டிக் காரங்க மேக் அப் பற்றி கேட்கவா வேணும்.

    ReplyDelete
  12. உங்கள் பணி இடத்தில் பல வித அனுபவங்கள் கிடைக்கும் போலிருக்கே mano

    ReplyDelete
  13. அலங்காரத்தில் அதிக முக்கியத்துவம் காட்டும் பெண் நிச்சயமாய் நடத்தையில் நேர்மையாய் இருக்க வாய்ப்பு குறைவு என்று. அது மிகவும் தவறான கருத்து. >>>
    ரொம்ப சரியா சொன்னிங்க

    ReplyDelete
  14. ராஜி கவனித்து பார்த்தால் அலங்காரம் நேர்த்தியாக செய்பவர்கள், எந்த வேலையையும் நேர்த்தியாக செய்ய முயல்பவர்களாக இருப்பார்கள்

    ReplyDelete
  15. //பொதுவாகவே நம் மக்களிடம் ஒரு எண்ணம் இருக்கிறது. அலங்காரத்தில் அதிக முக்கியத்துவம் காட்டும் பெண் நிச்சயமாய் நடத்தையில் நேர்மையாய் இருக்க வாய்ப்பு குறைவு என்று. // இது ஆணிய வாதிகளால் பரப்பபடும் கருத்துக்களில் ஒன்றுதான்.

    ReplyDelete
  16. பெண்களுக்குள்ளும் இப்படி ஒரு எண்ணம் இருக்கிறது சாய், தங்கள் முதல் வரவு நல்வரவு ஆகுக

    ReplyDelete

தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!