Bio Data !!

06 December, 2011

மந்திர விளைவுகள் !!

இன்று ஒரு சின்ன தகவல் சொல்லணும்னு தோணுச்சு.

எல்லோரும் பிள்ளைங்கள வளர்க்கிறாங்க, நாமும் வளர்க்கிறோம். ஆனால் புத்திசாலித்தனம் இல்லாத சாதாரண பெற்றோர்களின் குழந்தைகள் "நமக்கு உதவிக்கு யாரும் இல்லை நாமே தான் முன்னேறி கணும்   " என்ற நிலையில் தன்னம்பிக்கையோடு யாரை அணுகணுமோ அவர்களை அணுகி முன்னேறுகிறார்கள். ஆனால் புத்திசாலித்தனமாக தன்னை எண்ணிக் கொள்ளும் பெற்றோர்கள் தனது ஐம்பது வயது அனுபவத்தை மறந்து குழந்தைகளை விட தாம் அதி புத்திசாலிகள் என்பதை விளம்பரப் படுத்தும் நோக்கில் அவர்களை மட்டம் தட்டுகிறார்கள். அவர்கள் தன்னம்பிக்கையை சிதைக்கிறார்கள்.

ஏற்கனவே  தன்னம்பிக்கை குறைவாக உள்ள குழந்தை மேலும் மட்டம் தட்டப் பட்டால் இன்னும் உள்ளே அமிழ்ந்து போகும். பல வருடங்களுக்கு முன் நான் வாடிக்கையாளர் சேவை மையத்தில் பணி புரியும் போது என் அதிகாரியின் மகன் எட்டு வயது இருக்கும். என்னுடன் வந்து அமர்ந்திருப்பான். அவன் சொன்ன ஒரு வார்த்தையை அங்கே வந்திருந்த ஒரு வாடிக்கையாளர் திருத்தினார். அதற்கு அவன்  " எனக்கு மொட்ட நாக்கு அது அப்படித் தான் வரும்"  என்றான். "சொல்லிப்பாரு சரியா வரும் " என்றார்.
அதற்கு அவன் " இல்ல எங்க அப்பா எனக்கு மொட்ட நாக்குன்னு தான் சொல்வாங்க " என்றான். நான் அதற்காக என் அதிகாரியிடம் சண்டை போட்டதாக கூட ஞாபகம். அவன் இருபது ஆண்டுகள் தாண்டிய பின்னும் இன்னும் ஏதும் வேலையில் நிலைப்பட வில்லை.

கொஞ்சம் உறுதியான குழந்தைகள், தான் மட்டம் தட்டப் படுவதையே எதிர்மறை இன்சென்டிவ் ஆக எடுத்து முன்னேறிவிடும். "உன்னால் முடியாது  என சொல்ல , சொல்ல முடித்துக் காட்ட வேண்டும் என்ற வெறி ஏறும். ஆனால் அநேகம் குழந்தைகள் அப்படி இருப்பதில்லை. அதனால்  கூடிய வரை அடுத்தவரை தாழ்த்தி பேசும் பழக்கத்தை விட்டொழிப்போம்.விளையாட்டாக பேசுவதாக நினைத்துக் கொண்டால் கூட அடிக்கடி அப்படி பேசும் போது கேட்பவருக்கு ஒரு வெறுப்பு தான் வளரும். 


எங்க வீட்டு செல்ல குட்டி இப்போ ஒரு மாதத்துக்குள் ஏகப்பட்டது படித்திருக்கிறது. அது படித்த விஷயங்களை அவனுடைய அம்மா எனக்கு செய்து  காட்ட சொன்னால் செய்ததும் "ஹேய்" என்று கத்திக் கொண்டு இரு கைகளையும் தட்டிக் கொள்ளும். கூட சேர்ந்து எல்லோரும் தட்டினாலும் தட்டாமல் வேறு ஏதாவது வேலை பார்த்துக் கொண்டிருந்தால், ஓடிச் சென்று அவர்கள் இரு கைகளையும் சேர்த்து தட்டச் சொல்லும். இந்த சின்ன வயசுக்குள்ளேயே அதற்கு தன்னை தானே உற்சாகப் படுத்திக்கொள்ள தெரிகிறது. 

நமது வார்த்தைகள் வலிமை நிறைந்தவை. அதை அளவாக, அழகாக பிரயோகிப்போம். பணி இடங்களில் கூட ஒரு சின்ன சொல் பல மந்திர விளைவுகளை ஏற்படுத்தும்.   செய்யும் வேலைகளில் எல்லாம் குறை கண்டு பிடித்துக் கொண்டே இருந்தால் செய்பவர்கள் கூட செய்யாமல் போகும் வாய்ப்புண்டு. இதன் இன்னொரு பக்கமாக மற்றவர் தன்னை பாராட்ட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அதிகம் வைத்துக் கொள்ள வேண்டாம். சின்ன குழந்தை செய்வதை போல் நம்மை நாமே உற்சாகப் படுத்திக் கொள்வோம். ஏதாவது சிறப்பாக செய்து முடித்து விட்டேன் என்றால் எனக்கு நானே ஏதாவது பரிசு அளித்துக் கொள்வேன். அது மெகா சைஸ் ஐஸ் கிரீமாக இருக்கலாம். நெடு நாள் வாங்க நினைத்திருக்கும் ஒரு புத்தகமாக இருக்கலாம், ஒரு புடவையாக இருக்கலாம். பட்ஜெட் க்கு தக்க படி ஒரு சின்ன கிளிப் பாக கூட இருக்கலாம். 

நமக்கு நாமே ஒளியாக இருந்தால் வெளிச்சத்தை வெளியே தேட வேண்டியதில்லை .

10 comments:

  1. சரியாய் சொன்னீர்கள்.

    ReplyDelete
  2. ரொம்ப சரியா சொன்னிங்க.

    ReplyDelete
  3. ஆமாம்,சிந்திக்கவேண்டிய விஷயம்.நல்ல பகிர்வு.

    ReplyDelete
  4. நன்றி சண்முகவேல் , இந்த விஷயத்தை உங்க பாணியில் ஒரு பதிவு போடுங்க நிறைய பேரை சென்று சேரும்

    ReplyDelete
  5. ஒரு அருமையான சிந்தனையை பதிவின் மூலம்
    அனைவருக்குள்ளும் மிக அழகாக
    விதைத்துப் போகிறீர்கள்
    பயனுள்ள அருமையான பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. நமக்கு நாமே ஒளியாக இருந்தால் வெளிச்சத்தை வெளியே தேட வேண்டியதில்லை //

    நீயே ஒளியாக இருக்கிறாய் என்ற வேத வாக்கியத்தை அருமையாய் பகிர்ந்த பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..வாழ்த்துகள்..

    ReplyDelete
  7. நன்றி ரமணி சார், உங்கள் வார்த்தைகள் உற்சாகம் தருகிறது.

    ReplyDelete

தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!