29 March, 2025
# அழுகை பலமா பலவீனமா?
நம் அடிப்படைக் குணங்கள் சிறு வயதிலேயே வெளிப்பட்டு விடும். நான் பொதுவாகவே அவ்வளவு சீக்கிரத்தில் அழுது விட மாட்டேன். அழுகை நம் பலவீனம் என நினைப்பேன்.
என் சின்ன வயதில் , அனேகமா எனக்கு எட்டு அல்லது ஒன்பது வயது இருக்கும். அப்போ நடந்த ஒரு நிகழ்வைச் சொல்கிறேன். அதன் பின் நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள் அழுகை பலமா பலவீனமா என்று.
எங்க வீட்டுக்கு எதிரே ஒரு மாரி அம்மன் கோயில் உண்டு. தசரா சமயங்களில் அங்கிருந்து கிளம்பும் தேரை வேடிக்கை பார்க்க என் தோழிகளோட குடும்பந்தோட போவேன். என் தங்கை என்னை விட இரண்டு வயது இளையவள். மூத்தவர்களின் கொடுக்கு தானே இளையவர்கள். அவளும் என் கூடவே வருவாள்.
ஒரு நாள் தேரைப் பார்த்துக் கொண்டு பின்னாலேயே போய் விட்டோம். அது நாலு தெரு சுத்தி வரும். வீட்டுல ரொம்ப நேரம் தேடி இருக்காங்க. திரும்பி வந்ததும் அப்பா கதவைத் திறக்க மாட்டேன்னுட்டாங்க.
எனக்கு எப்படியும் திறந்து விட்டுடுவாங்கன்னு தெனாவட்டு. அது இரவு நேரம். என் தங்கை "அப்பா இனி செய்ய மாட்டேன்னு" ஒரே அழுகை. கொஞ்ச நேரத்தில் கதவைத் திறந்து அவளை மட்டும் உள்ளே கூட்டிக்கிட்டு" கல்லுளி மங்கி அழுகை வருதா பாரு" ன்னு என்னைப் பார்த்து ஒரு முறை முறைச்சு சொல்லிட்டு போயிட்டாங்க.
நான் வாசல்ல உட்கார்ந்து கூட்டத்தை வேடிக்கை பார்க்க ஆரம்பிச்சிட்டேன். அப்புறம் என்னையும் உள்ளே கூட்டிக்கிட்டாங்கன்னு வையுங்க. இப்போ சொல்லுங்க அழுகை பலமா பலவீனமான்னு.
என்ன நான் சொல்லணுமா? அது இன்னும் புரியாமத் தானேங்க தலைப்பே கொடுத்திருக்கிறேன்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!