08 September, 2026
நான் பொதுவாக அரசியல் பேசுவதில்லை. ஆனால் ஓரளவு அரசியல் தெரியும். என் தனிப்பட்ட கருத்தை நண்பர்களிடம் தனியாகப் பகிர்ந்து கொள்வேன்.
எந்தக் கட்சியின் கண் மூடித் தனமான தீவிர ஆதரவாளரும் இல்லை நான். கலைஞர் காலத்தில் அவர் பேசும் தமிழ் , வயதான காலத்திலும் அவருடையதான கடும் உழைப்பு பிடிக்கும். ஆனாலும் செல்வி ஜெ உடனான மோதலில் அவருடைய செயல்பாடு ரொம்ப அதிருப்தியைக் கொடுத்தது. எங்கள் வீட்டுக்குள்ளேயே எதிரெதிர் அணியாக நிறைய வாக்குவாதங்களைக் கொண்டு வந்தது.
ஆனால் திரு ஸ்டாலின் அவர்கள் முதல்வர் பதவியேற்ற பின் விமர்சனங்களுக்கு எதிர்வினை ஆற்றாமல் மக்களுக்கு நல்லது செய்வது மட்டுமே குறியாக முன்னேறியது ரொம்பப் பிடித்திருந்தது . எவ்வளவோ நல்லது செய்தும் அவரது தொகுதியில் தோற்கடிக்கப் பட்டது மன உளைச்சலைத் தந்தது.
தற்போதைய சூழல் எல்லார் மேலும் அதிருப்தியைத் தருகிறது. பாவப்பட்ட பொது ஜனங்களுக்கு நமக்கு நல்லது நடக்கும் என்ற நம்பிக்கையைப் போக்குகிறது்
ஒரு சாரார் கூச்சலிடுவதும். அந்தச் சத்தத்தை மீறி பேசுபவர் பேசுவதும், தனது கை அசைவுகளாலேயே கூச்சலிடுபவர்களை மேலும் கூச்சலிட வைப்பதும் அயர்வைத் தருகிறது. ஒரு விதமான எதிர் மறை வைப்ரேஷன் பரவும். அது நல்லதில்லை. நாட்டுக்கும் தனிப்பட்ட மனிதர்களின் உடல் நலத்துக்கும்.
இது வரை நடந்ததைக் கூட அப்பாவி பொது ஜனம் அனுபவமின்மை என மறந்து போக வேண்டுமென்றால் ஒழுங்கைக் காக்க வேண்டியவர் கையறு நிலையில் அமர்ந்திருக்காமல் தலையிட வேண்டியது அத்தியாவசியம். வெளி நடப்பு என்பது நாகரீகமான முறையில் காட்டும் எதிர்ப்பு. பேசும் அத்தனை பேருமே கண்ணியம் காக்க வேண்டியது அத்தியாவசியம். அரசியல் மாற்றம் வேண்டும் என்று களமிறங்கிய 30+ 40+ காரர்களுக்கு ஒரு தவறான முன்னுதாரணம் ஆகி விடக் கூடாது.
இது தவிர்க்க முடியாமல் வந்த அரசியல் பதிவு தான்.
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment
தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!