27 February, 2025
#என் ஜன்னலுக்கு வெளியே
என் ஜன்னலுக்கு வெளியே நான். என்ன ஆச்சர்யமா இருக்குதா? ஒரு கால கட்டத்தில் எங்க வீட்டுக்கு எதிர் வீட்டு ஜன்னலில் அமர்ந்து எங்க வீட்டை அதாவது "என் ஜன்னலுக்கு வெளியே" இருந்து எங்க வீட்டை பார்க்க நேர்ந்தது.
சொல்றேன் சொல்றேன். இருங்க. என் காதல் திருமணத்தால் எங்க வீட்டுக்குள் எனக்கு அனுமதி இல்லை. இந்த இடைப்பட்ட காலத்தில் நான் கருவைச் சுமக்கத் தொடங்கி விட்டேன்.்
எல்லோருக்கும் மசக்கை காலத்தில் ஏதாவது சாப்பிடணும்னு தோணும்ல எனக்கு எங்க அம்மாவைப் பார்க்கணும் பேசணும்னு ஏக்கம் வந்திடுச்சு.
நானும் என் கணவரும் நாகர்கோவிலில் இருந்து பாளையங்கோட்டை வருவோம். என் கணவர் அவர் நண்பர் வீட்டுக்கும். நான் எங்க வீட்டுக்கு எதிர் வீட்டுக்கும் செல்வோம்.
நான் அமர்ந்திருக்கும் ஜன்னலுக்கு வெளியே எங்க அம்மா நடமாடுறது தெரியும். பார்த்துக் கொண்டே அழுதபடி அமர்ந்திருப்பேன். என் குழந்தை வயிற்றுக்குள் உருண்டபடி "அழாதே" ம்மான்னு எனக்கு ஆறுதல் சொல்லும்.
கொஞ்ச நேரத்தில் கிளம்பி என் கணவரின் நண்பர் வீட்டில் மதிய உணவை முடித்துக் கிளம்பி விடுவோம்.
எங்க அம்மா என்னைப் பார்க்கலைன்னு நான் நினைச்சிருந்தேன். ஆனால் பார்த்த அவர்கள் நான் போனதும் எதிர் வீட்டுக்குப் போய் " நானே வேணாம்னு ஒதுக்கின பிள்ளையை நீங்க எப்படி உள்ளே ஏத்துறீங்க" ன்னு சண்டை போட்டு இருக்கிறார்கள்.
எதிர் வீட்டு அம்மாவை சந்திரிகா அம்மான்னு அழைப்போம்.்மஞ்சள் பூசி நெற்றி நிறைய குங்குமம் வைத்து சுருள் சுருளான முடியில் எப்போதும் கோடாலி முடிச்சு போட்டு இருப்பார்கள். அவர்கள் ஒரே வார்த்தையில் " எங்க வீட்டுக்கு வர்ர பிள்ளையை நாங்க எப்படி வராதேன்னு சொல்ல முடியும். " னு முடிச்சிட்டாங்க.
ஒண்ணும் சொல்ல முடியாமல் எங்க அம்மா வீட்டுக்கு போயிட்டாங்க. இன்னொரு சந்தர்ப்பத்தில் ஜன்னலுக்கு வெளியே இருந்து பார்த்தவள் வீட்டுக்கு உள்ளேயே போனேன். அப்போதைய அனுபவம் திகில் அனுபவம். இதே போல் பொறுத்தமான தலைப்பு வரும் போது சொல்றேன்.
வர்ட்ட்டா!!!
நெஞ்சின் நினைவலைகள்
நான் நேற்று எழுதிய பதிவை தொடர்வதற்கு வசதியாய் தலைப்பு.
வயிற்றில் குழந்தை உருவாகி ஏழாம் மாத இறுதி. எனக்கென்னவோ இந்த பிரசவத்துக்கு அப்புறம் நம்ம கதைக்கு மங்களம் பாடிடுவாங்கன்னு ஒரு அழுத்தமான நம்பிக்கை.
அதனால் கடைசி முயற்சியாக சிங்கத்தை அதன் குகையில் சென்று சந்திக்க முடிவு செய்தேன். பெண் சிங்கம் தானே பார்த்துக்குவோம்னு ஒரு மெத்தனம்.
அப்பவும் என் கணவரும் அவர் நண்பரும் 'நீ அழுதுகிட்டே தான் வந்து நிற்கப் போறே போக வேண்டாம்னு ' தான் சொன்னாங்க. நான் தான் கேட்கலை. எங்க வீட்டுக் கதவை படுக்கும் போது தான் அடைப்போம். திறந்த வீட்டுல எதோ போல நுழைந்து விட்டேன்.
நேரா எங்க அம்மா கிட்ட போய் எங்க கிறிஸ்தவ முறைப்படி முழங்கால் போட்டு 'அம்மா என்னை மன்னிச்சுக்கோங்கன்னேன். அம்மா காலைப் பிடித்துக் கொண்டேன்.
அம்மா காலை உதறி நான் எது போல் நுழைந்தேனோ அதையே வசைச் சொல்லாக்கி வீட்டை விட்டு வெளியேறினார்கள். நான் அழ என் தங்கைகள் ஏதாவது சாப்பிட்டுட்டு போ என அழ நான் வீட்டை விட்டு வெளியேறினேன்.
இது தான் நடக்கும் என எதிர்பார்த்த என் கணவர் ' இதுவே கடைசி தடவையா இருக்கட்டும் ' என்றார். அவருக்கு அன்பு மனைவி அழுவதும் சகிக்க முடியவில்லை. இந்த நிலையில் மகளைப் பார்த்தும் மனம் இறங்கவில்லையே என்ற கோபம். வசதியான வீட்டுப் பிள்ளையை இந்த நிலைக்கு கொண்டு வந்து விட்டோமே என்று தன் மீதே கோபம். எல்லாம் சேர்ந்து என் மீதே கோபம் பட்டார்.
என் வயிற்றுப் பிள்ளைக்கு தாய் படும் பாடு சகிக்கவில்லை போலும். உரிய காலம் வரை உள்ளிருக்க பொறுமை இல்லை.
என்ன செய்தாள்?
நெஞ்சில் நினைவலைகள் ஆர்ப்பரிக்கின்றன .
15 February, 2025
# ரயில் பயணங்களில்.
நான் முதன் முறையாக பெங்களூருக்கு டிரெயினில் வந்தேன். கன்ட்டோன்மென்ட்டில் இறங்கினால் டிராஃபிக்கில் வீட்டுக்கு வருவது ரொம்ப சிரமம் என்பதால் ஹோசூரில் இறங்கி அங்கிருந்து Cab பிடித்து பெங்களூர் வந்தேன். பஸ் டிக்கெட்டை விட ரயில் டிக்கெட் குறைவு தான். அதனால் cab க்கு சேர்த்து எல்லாம் சரியாகத் தான் வரும். ஹோசூரில் இருந்து பஸ்ஸில் வந்து விடலாம். லக்கேஜ் அதிகம் என்பதால் சிரமப்படும் என்று மாற்றி யோசித்தேன்.
ரயிலில் எந்த ப்ளாட்ஃபார்ம் , நம்ம கோச் எங்கே நிற்கும் என பல சந்தேகங்கள் வரும் என்பதால் என் கணவருக்கு டிரெயின் பிடிப்பதில்லை. எனக்கு கண்ணைக் கட்டி காட்டில் விட்டது போல் இருப்பதாலும் நெடுந் தொலைவு நிறுத்தாமல் செல்வதால் சிறுநீர் அடக்குவது போன்ற தொந்தரவுகள் இருப்பதாலும் எனக்கு பஸ் பிடிப்பதில்லை. அதனால் நான் தனியா வரும் போது ரயிலைத் தேர்வு செய்தேன்.
இப்போ ரொம்ப வசதி வந்துட்டுது. Where is my train என்னும் ஒரு app ஐ பதிவிரக்கம் செய்து வைத்திருப்பதால். அது ஒரு சர்வ ரோக நிவாரணி. அதில் நாம் எங்கிருந்து எங்கு செல்கிறோம் என்பதைக் கொடுத்தவுடன் கீழே வரும் ரயில் எண்களில் நமக்கானதைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
அதில் பிளாட்ஃபார்ம் எண், நம்ம டிக்கெட்டில் உள்ள கோச் நிற்கும் இடம், இன்னும் எவ்வளவு நேரத்தில் ரயில் வந்து சேரும் என்பது போன்ற தகவல்கள் எல்லாம் வந்திடுது. ரயில் நிலையத்திலும் அறிவிப்பார்கள். இருந்தாலும் அங்கே இருக்கும் பேரிரைச்சல் ஒரு தொந்தரவு.
அப்படி ப்ளாட்ஃபார்ம் தேர்ந்தெடுத்து வந்த பிறகு ரயில் நிலையத்திலேயே ரயில் வருவதற்கு கொஞ்ச நேரம் முன்பு கோச் நிற்கும் இடத்தை டிஸ்பிளே செய்கிறார்கள். அதற்கு முன்னாலும் நாம் தெரிந்து கொள்ள ஒரு வசதி இருக்கிறது.
ப்ளாட்ஃபார்மில் தரையில் பார்த்தீங்கன்னா கொஞ்ச தூரத்துக்கு ஒரு இடத்தில் 10/18 இது போல் எண்கள் பெயின்ட் பண்ணி வச்சிருப்பாங்க. இதில் தண்டவாளம் தெற்கு வடக்காக இருந்தால் 10 என்பது தெற்கு நோக்கி செல்லும் ரயிலுக்கான கோச். 18 என்பது வடக்கு நோக்கி செல்லும் ரயிலுக்கான கோச் ( இதை எத்தனை பேர் கவனித்திருக்கிறீர்கள் கமென்ட்டில் சொல்லுங்கள் 1ஆஆ.) நிற்குமிடம் கொஞ்சம் முன்னப் பின்ன இருக்கலாம்.
ஏறிய பின்னே பார்த்தால் யாரும் யாருக்காகவும் பெர்த் மாற்றிக் கொள்ள முடியாத படி ஒரே மூத்த குடிமக்கள் கூட்டம். பாவம் பேரப் பிள்ளைகளைப் பார்த்துக் கொள்வதற்காக அலைகிறார்கள். ஏறிய கொஞ்ச நேரத்தில் அது ஏஸி கோச் என்பதால் ஒரு பெண் மருத்துவர் வந்து ரயிலில் எழுதி வைத்திருந்த எண்ணைக் காட்டி ஏதும் அவசரம்னா இதில் கூப்பிடுங்க என்று சொல்லிச் சென்றார்கள்.
இந்த app இல் கீழே ஒரு கேள்வி கேட்பார்கள். அதில் காட்டும் பிளாட் ஃபார்ம் எண் சரிதானா இல்லை மாறி இருக்கிறதா வென. அதில் ஆம் இல்லை என்பதைத் தேர்வு செய்தால் பிற பயணிகளுக்கு உதவியாக இருக்கும் எனச் சொல்கிறார்கள். ரயில் புறப்படப் போகும் நேரத்தில் ஓடி வந்து ஏறுபவர்கள் இருப்பார்கள். இவர்களுக்கு முன்னதாகவே வந்தவர்கள் சொல்லும் இந்தப் பதில் உதவியாக இருக்கும். சில நொடிகள் இதற்காக செலவு செய்யலாம்.
இறங்கு முன்னும் app இல் இன்னும் எவ்வளவு நேரத்தில் நாம் இறங்கணும் என்பதைத் தெரிந்து கொண்டு தயாராகிக் கொள்ளலாம். நம் பிள்ளைகள் அழைக்க வரணும்னா தகவல் சொல்லி விடலாம். அழைப்பதற்காக apo இலேயே அலார்ம். வைத்துக் கொள்ளலாம். பல வசதிகளையும் செய்து தந்திருக்கும் ரயில்வே துறைக்கு ஒரு "ஓ" போடுவோம்.
11 February, 2025
Happy hugs day
இன்று "அணைத்தல் தினமாம்"
மீட்டாவிடம் அணைத்தலுக்கு ஒரு படம் கொடு என்றால் இப்படி ஒரே நிறத்தில் உடை உடுத்தி அணைத்துக் கொண்டிருக்கும் இருவரின் படத்தைக் கொடுத்தது.
இது மட்டுமா அணைத்தல். நம்மைக் கண்டதும் ஓடி வந்து நம் கரங்களை இறுகப் பிடித்துக் கொள்வதும் ஒரு வகை அணைத்தல் தானே. உடல்கள் இணைவது மட்டுமா அணைத்தல் கரங்கள் இணைவதும் தானே. அது அன்பு கொண்ட இருவருக்கும் கொடுக்கும் பலமே அலாதி ஆனது.
நெருங்கி வர முடியாத தூரத்தில் பார்வைகள் ஒன்றோடொன்று பரிதவிப்போடு பற்றிக் கொள்வதும் அணைத்தல் தான். அது தரும் பலமும் நம்பிக்கையும் வேறு நிலை.
பார்க்கவும் முடியாத தூரத்தில் இருக்கும் போது குரல்கள் கவ்வுக் கொள்வதும் அணைத்தல் தான். அது ஒருவருக்கு கொடுக்கும் தைர்யம் சொல்லிப் புரியாது.
இதையெல்லாம் மறந்து பலரும் தலையோடு கால் வரை இணைவதை மட்டுமே அணைத்தல் என்கிறோம். ஐம்புலன்களாலும் அணைக்க முடியும். அணைப்போம்.
Happy hugs day.
06 February, 2025
அவர்களுன் பசிக்கு எங்கள் பெண் குழந்தைகளா இரை
நாங்க படிக்கிறப்போ ஆண்களுக்குத் தனிப் பள்ளி. பெண்களுக்குத் தனிப் பள்ளி. ஆண்கள் பள்ளியில் ஆண்கள் மட்டுமே ஆசிரியர்கள். பெண்கள் பள்ளிக்கு பெண்கள் மட்டுமே. அதில் சில நல்லதும் இருந்தது. கெட்டதும் இருந்தது.
நாங்கள் படித்த அந்த பள்ளிகள் இன்றும் அதே போல் தான் இருக்கின்றன. பெண்கள் பள்ளி முடிந்து வரும் பெண் குழந்தைகளைப் பார்க்க அத்தனை பேர் அணி வகுத்து நிற்பாங்க. நாம தனியா சாலையில் போறோம்னு வையுங்க. தூரத்துல நாம யாரென்றே தெரியாத ஐந்தாறு பையன்கள் நிற்கிறாங்கன்னா திடீர்னு அத்தனை பேரும் திரும்பிப் பார்ப்பாங்க. நம்ம பேரு கூட தெரியாது. என்ன சொல்லி எல்லோரும் ஒண்ணு போல திரும்புறாங்கன்னு ஆச்சர்யப்படுவேன்.
இப்பல்லா தெரியுது. பேர் எல்லாம் தெரிய வேண்டுவதில்லை. சைட் வருது, ஃபிகர் வருதுன்னு ஒன்றல்ல எத்தனையோ பேர் வச்சிருக்காங்கன்னு. அதில் யாரோ ஒருவன் திமிர் எடுத்து hurting ஆ கூட கமென்ட் சொல்லுவான். இன்னொரு ரசனை மிகுந்தவன் " இந்த ஹிப்புக்கும் லிப்புக்கும் சொத்த எழுதி கொடுக்கலாம்" னு சொல்லுவான். அவன் கொடுக்க முடிந்த சொத்து சாரி சொத்தை பல்லில் மட்டும் தான் இருக்கும். அத்தனையோட முடிஞ்சு போயிடும்.
நான் கேள்விப்பட்ட அதிக பட்ச வன்முறை தன்னை மதிக்காமல் முறைத்துக் கொண்டு half skirt இல் சைக்கிளில் சென்ற ஒரு பெண் குழந்தையின் தொடையில் ஒருவன் புது ப்ளேடால் சைக்கிளில் பக்கத்தில் போய் கீறி விட்டான் என்பது தான்.
ஆனால் இன்று வன்முறை பெண் குழந்தைகள் மேல் தலை விரித்தாடுகிறது. நான் மேலே சொன்னவன் ரவுடி என்று அறியப்பட்டவன். இன்று ஆசிரியர்கள் என்றழைக்கப்படுபவர்கள் மாணவர்கள் என்றழைக்கப்படுபவர்கள் கூட்டு சேர்ந்து இழைக்கும் அநீதி சொல்லி மாளாது. படிப்பறிவில் முன்னேறி இருக்கும் நாம் ஏனோ நாகரீகத்தில் பின் தங்கிப் போய்க் கொண்டு இருக்கிறோம்.
பழையபடியே ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனியாய் பள்ளிகள் அமைத்து அவரவர் இனத்தைச் சேர்ந்தவர்களையே ஆசிரியர்களாகப் போடுங்கள். இரண்டு பெண் குழந்தைகளைத் தாங்கிய வயிறைப் பெற்றவளாய் சொல்கிறேன். ஆண்களின் பசிக்கு எங்கள் பெண் குழந்தைகளை இரையாக்காதீர்கள்.
புண்ணியமாகப் போகும்.
05 February, 2025
#மீண்டு வந்தேன்.
சொர்க்கம், நரகம் என்ற இரண்டு இருக்கிறது என்பதை பலர் நம்புகிறோம். நாங்கள் கிறிஸ்தவர்கள் அந்த ரெண்டுக்கும் நடுவில் உத்தரிக்கிற ஸ்தலம்னு ஒண்ணு இருப்பதாகவும் நம்புகிறோம். இங்கே இருப்பவர்கள் தன் தவறுகளுக்கான பரிகார காலம் முடிந்ததும் மோட்சம் செல்வார்கள் என்பது நம்பிக்கை. சிலர் அந்த நம்பிக்கை இல்லாமலும் இருக்கிறோம். அப்படியே இருந்தாலும் "கண்டவர் விண்டிலர். விண்டவர் கண்டிலர்"
ஒரு பன்னிரண்டு வருடங்கள் இருக்கும். அப்போ எனக்கு சர்க்கரை வியாதி கண்டுபிடிக்கப் படவில்லை. மிக அதிகமாக இருந்திருக்கும் போல. இரண்டு கால் பாதங்களும் தீயாய் எரியும். வெறெந்த தொந்தரவும் இல்லாததால் இதற்கான காரணத்தைத் தேடாமல் பெரிய துவர்த்தை (டவலை) நனைத்து காலைச் சுற்றி வைப்பேன். கொஞ்சம் எரிச்சல் குறையும்.
வெளியூரில் இருக்கும் என் மகளை இரவு நேரத்தில் போனில் அழைத்து " என்னால தாங்க முடியல. செத்துடலாமான்னு இருக்கு " ன்னு அழுதிருக்கிறேன். அப்போ என்னை பலப்படுத்திக்க இப்படி நினைத்தேன். " வாழும் காலத்தில் நாம் செய்த தவறுகளுக்கு , இறந்த பிறகு நரகம் என்ற ஒன்று இருக்கிறதா அதற்கு போய் விடுவோமோ என்பது நிச்சயமாகத் தெரியாது. ஆனால் நாம் செய்த தவறுகளுக்கான தண்டனையாக இதை ஏற்றுக் கொள்வோம். " இப்படி நினைத்த பின் எனக்குத் தாங்க சக்தி கிடைத்தது.
ஒவ்வொரு முறை உடல் நோவால் அவதியுறும் போதும் " நான் செய்யும் சின்ன சின்ன தவறுகளுக்குப் பரிகாரமாக இந்த வேதனையை ஒப்புக் கொடுக்கிறேன். என்னையும் என் குடும்பத்தையும் என் பிள்ளைகளையும் அவர்கள் குடும்பத்தையும், என் பேரப் பிள்ளைகளையும் காப்பாற்று" என்று பிரார்த்திப்பேன். போதும் போதும்லிஸ்ட் பெருசா போகுதுன்னு சொல்றீங்களா?
மீண்டு விடுவேன்.
உடல் நோவைத் தாங்க பலம் கிடைக்கும். இது முதல் முறை மீளல். இதன் பின் பல முறை விழுவதும் எழுவதுமாக வாழ்க்கை ஓடிக் கொண்டு இருக்கிறது.
03 February, 2025
#நம்பிக்கை
என் வாழ்வு கட்டமைக்கப்பட்டதே நம்பிக்கை என்னும் சாளரங்களால் தான். எத்தனை எத்தனை செயல்கள். வாழ்வின் எல்லாவிதமான ஏற்ற தாழ்வுகளையும் கடந்து இன்று ஒரு வெற்றிகரமான பெண்மணியாக ஓய்வை நிம்மதியாக கழித்துக் கொண்டு இருக்கிறேன்.
கொஞ்சம் கொஞ்சமாக சந்தர்ப்பம் கிடைக்கும் போது சொல்கிறேன். நான் எழுதுவதைத் தொகுத்தால் ஒரு புத்தகமே போட்டு விடலாம். அவ்வளவு நிகழ்வுகள்.
நான் பிறந்த தினத்தன்று அடைந்த மகிழ்வின் உச்சத்தில், ஒரு வீடு வாங்கி தன் பெயரில் பத்திரம் பதிந்திருக்கிறார் எங்க அப்பா. இதைச் சொல்வதற்கு காரணம் இருக்குது. கடைசியில் சொல்றேன். எங்க அப்பாவுக்கு ரொம்ப பிடித்த மகள் நான். மூன்றும் பெண்ணாய்ப் போனதால் என்னை ஆண் பிள்ளை போலவே வளர்த்தார்கள்.
என் அப்பா கல்லூரிப் பேராசிரியர் . அம்மா பள்ளி ஆசிரியை. அம்மா, அப்பா இல்லாம தனியா வெளியே போக மாட்டாங்க. அது அவர்களது முப்பத்தெட்டு வயது வரை தான். ஏன்னா அதன் பிறகு தனியே மட்டு்ம் தான் போனாங்க.
ஆம் அப்போ அம்மாவுக்கு 38. அப்பாவுக்கு 41. இருவரும் மயங்குகிறாள் ஒரு மாது படம் பார்த்திட்டு வந்து படுத்தாங்க. எங்களை அதிகம் அழைத்துச் செல்ல மாட்டாங்க. நடு இரவு மூன்று மணிக்கு ப்ரெயின் ஹெமரேஜ் ஆகி மருத்துமனைக்கு எடுத்துச் சென்ற ஒரு மணி நேரத்தில் இறந்து போனாங்க எங்க அப்பா.
அந்த இறப்பை "அப்பாவுக்கு அஞ்சலி" என்று பதிவாக்கி இருக்குறேன். வேறொரு சந்தர்ப்பத்தில் அதைப் பதிகிறேன்.
எங்க அம்மாவுக்கு கண்ணைக் கட்டி காட்டில் விட்டது போலாயிற்று. நடு வயதுப் பெண்மணி மூன்று பெண் குழந்தைகளுடன். தன் வேலையை மட்டுமே ஊன்றுகோலாய் பிடித்து மூவரையும் வளர்த்தார்கள். அப்பா இறக்கும் போது அம்மா கணிதத்தில் B.Sc. B Ed.
அதன்பிறகு M A(Eng) M.Sc ( maths) M. Ed என்ற மூன்று முதுகலைப் பட்டம் பெற்றார்கள். மூன்று பெண் குழந்தைகளுமே வளர்ந்து அரசு உத்யோகத்துக்கு வந்தோம்.
அது எழுதிய அளவிற்கு எளிதானதல்ல. அம்மா எண்பது வயது வரை சந்தோஷமாக வாழ்ந்து இறந்து போனார்கள். ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் எங்கள் வீட்டை வாங்கி விட வேண்டும் என்று பக்கத்து வீட்டுக்காரர் முயற்சி செய்தார். ஆண்கள் இல்லாத குடும்பம் என்று ஒரு இளக்காரம். அம்மா இறக்கும் வரை, அந்த வீட்டை அவர் வாங்கும் நிலைக்கு கொண்டு வந்திடாதீங்கன்னு சொல்வாங்க. அதற்கு காரணம் இருந்தது. ஒரு பொதுச் சுவர் சார்ந்த தகராறில் அவர் பயன்படுத்திய கடினமான வார்த்தைகள்.
அம்மா இறந்து ஏழாண்டுகள் கழித்து வீட்டுக்கான மதிப்பை மூன்று பாகங்களாக்கி என் ஓய்வில் கிடைத்த பணத்தை இரு தங்கைகளுக்கும் பகிர்ந்து கொடுத்து அவர்கள் சம்மதத்தோடு வீட்டை என் பெயரில் பதிவு செய்தேன். அம்மா காலத்துக்கு பிறகு எப்படியும் வீட்டை வாங்கி விடலாம். பெண் பிள்ளைகள் தானே. ஆளுக்கொரு பக்கம் இருப்பார்கள் என்ற ஆசையில் இருந்தவர் ஏமாந்து போனார்.
எங்க அப்பா எனக்கு என்னுடைய பதினைந்து வயதுக்குள் என் வாழ்நாளுக்குத் தேவையான தன்னம்பிக்கையை கொடுத்துப் போயிருந்தார்கள்.
நம்பிக்கை தானேங்க வாழ்க்கை. அது ஒண்ணைமட்டும் இறுகப் பற்றிக் கொள்ளுங்கள். வெற்றி பெற்று விடலாம்.
02 February, 2025
# எண்ணச் சிதறல்கள்
சில நேரங்களில் சிலர் சொல்லும் சில வார்த்தைகள் நமக்கு ரொம்ப பிடித்துப் போகும். அதே வார்த்தைகள் வேறொருவர் சொல்லும் போதோ வேறு சந்தர்ப்பத்தில் சொல்லும் போதோ அந்த அளவு பாதிப்பை உண்டாக்காது போகலாம். அப்படியான ஒரு விஷயம் இதோ!!
ஒரு பேட்டி. பிக் பாஸ் அருண் ( இவர் கண்ணம்மா புருஷன் என்றும் குறிப்பிடப்படுகிறார் பாரதி கண்ணம்மாவில் நடிப்பதால் 😀) , அவருடைய பெற்றோர் அவர் மணக்கப் போகும் அர்ச்சனா இவர்கள் பங்கேற்கிறார்கள்.
அருண் தன் பெற்றோரிடம் தான் அர்ச்சனாவை அவர்கள் சம்மதத்தோடு மணக்க விரும்புவதாகச் சொல்கிறார். இதை உணர்வு பூர்வமாக கவனிக்கும் அர்ச்சனா " நாம் விரும்பும் ஒருவரிடம் ஒரு நாளைக்கு 30 செகன்ட் பேச முடிந்தால் கூட அந்த நாளின் மீதி நேரத்தை ( அதாவது 23 மணி 59 நிமிடம் 30 நொடி) அடுத்த நாளின் அந்த 30 நொடியை நினைத்துக் கடந்து விடலாம். ஆனா பிக் பாஸ் போனா அது கூட முடியாதே என்பது தான் என்னை ரொம்ப வருத்தியது" னு சொன்னாங்க.
காதலின் வலிமையை இதை விட அழகா சொல்ல முடியாதுன்னு தோணுச்சு. அந்த 30 நொடி கிடைக்கப் பெற்றவர் அதிர்ஷ்டசாலிகள்.
அருணின் அப்பாவும் கலகக்காரராகவே இருக்கிறார். "அவர் காதலைப் பற்றி என்ன நினைக்கிறீங்க" ன்னு கேட்டதும் " எந்தக் காதலைப் பற்றி என்றார். அதற்கு அருணும் அர்ச்சனாவும் கொடுத்தது ரொம்ப க்யூட் expression.
Subscribe to:
Posts (Atom)