Bio Data !!

29 December, 2025

Gen Z குழந்தைகளின் பாய்ச்சல்

எங்க அப்பாவின் மாணவர் திரு பாப்பையா அவர்கள் ஒருவரைத் தான் அறிந்திருந்தேன் ஆதலால் அவரை மட்டும் நினைவஞ்சலி நிகழ்ச்சிக்கு அழைத்திருந்தேன். மற்றும் ஒரு மாணவர் " மேலும்" சிவசு ஐயா. இவரும் தூய சவேரியார் கல்லூரியில் பணி புரிந்து ஓய்வு பெற்ற பேராசிரியர். இந்த நிகழ்ச்சி பற்றி பாப்பையா சார் மூலம் அறிந்ததும் என்னை அழைத்துப் பேசினார். "அவ்வளவு அழகா உடை உடுத்தி வருவாரும்மா உங்க அப்பா ( என் உடை நேர்த்தியின் நதித் தலையணை அது தான் போல) " என்று சொன்னதோடு எங்க தாத்தா கணிதப் பேராசிரியர் சந்தியாகு அவர்களையும் நினைவு கூர்ந்தார். "வெள்ளை வேட்டி , ஜிப்பா, கழுத்தில் ஒரு சின்ன துண்டு, வகுப்புக்கு வெளியே காலணியைக் கழற்றி விட்டு வரும் அழகு" என அவரைப் பற்றியும் சொல்லி விட்டு தன் பேரன் எழுதிய ஆங்கில கவிதைத் தொகுப்பு வெளியீட்டுக்கு என்னை அழைத்தார். அங்கே போன பின் தான் தெரிந்தது அவர் பேரன் அனிருத்தின் அம்மாவைப் பெற்ற அம்மாவும் ஆதி மூலமும் நானும் தொலைத் தொடர்புத் துறையில் ஒன்றாகப் பணி புரிந்திருக்கிறோம். சிறப்பான நிகழ்வும் , ருசியான இரவு உணவும் மனதையும் வயிற்றையும் நிறைக்கத் திரும்பினேன். முதலில் இந்த GenZ குழந்தைகளின் பாய்ச்சல். மேடையில் மூன்று குழந்தைகள். செல்வன் அனிருத், செல்வி பார்கவி ரமேஷ், செல்வன் விஷ்ணு வெங்கடேஷ். அனிருத் எழுதிய புத்தகத்தின் பெயர் "The Shimmering joy of writing" ஈர்க்கும் பெயரும் , அழகான மேலட்டையும், கனக்கும் கவிதைகளுமாக அந்த புத்தகம் இருந்தது என்றால், நளினமான ஆடலோடு கூட அனிருத்தின் ஒரு கவிதையை அழகான ஆங்கிலத்தில் வாசித்தாள் பார்கவி. செல்வன் விஷ்ணு மற்றுமொரு கவிதையை மனதில் உருவேற்றி அழுத்தமான குரலில் பாராமலே சொன்னான். நமக்குத் தேவையான சில கருத்துகளும் சொல்லக் கிடைத்தன. தொடர்கிறேன்.

No comments:

Post a Comment

தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!