05 January, 2026
திருப்பலியில முக்கியமான இடம் எழுந்தேற்றம் என்பது. அப்போது இயேசு சிலுவையில் தன் உடலையும் இரத்தத்தையும் நமக்காகக் கொடுத்து மரணித்த நேரம் நினைவுபடுத்தப்படும்.
இது சார்ந்த என் எண்ணங்கள்.
இந்த எழுந்தேற்ற நேரத்தில் எல்லோரும் ரொம்ப பய பக்தியோடு பிரார்த்திப்பார்கள். நான் நெற்றி நிலம் தொட வணங்குவேன். அந்த நேரத்தில் என் நிரந்தரப் பிரார்த்தனை என் இரு மகள்களின் முதுகுத் தண்டுவடம் பலப்பட வேண்டும் என்பதாக இருக்கும். அதன் உடன் அப்போதுள்ள தேவைகளும் இணைந்து கொள்ளும்.
ஒரு வயதான மூதாட்டி அப்போது மிகுந்த சத்தத்தோடு பிரார்த்திப்பார்கள். மற்றவர்களுக்கு இடைஞ்சலாகத் தான் இருக்கும். நான் வந்த புதிதில் அவர்களிடம் சொன்னேன். "அடுத்தவங்களுக்கு தொந்தரவில்லாமல் செபிக்க வேண்டாமா" என. அப்போ என் தோழி சொன்னார்கள் " எத்தனையோ பேர் சொல்லி பார்த்தாச்சு. நீங்க சொல்லியா மாத்தப் போறாங்க" என்று. இன்று வரை மாறவில்லை.
ஆரம்ப காலங்களில் நன்மையை நாவில் தான் வழங்குவார்கள். குருக்கள் மட்டுமே வழங்குவார்கள். இப்போது கன்னியரும் கொடுக்கிறார்கள்.
கொரோனா காலத்தில் நாவில் கொடுப்பது தடை செய்யப்பட்டது. இடது கையில் வாங்கி வலது கையில் எடுத்து நாமே உட் கொள்ள வேண்டும் எனக் கொண்டு வந்தார்கள். எனக்கு இடது கையில் வாங்குவது பிடிக்காது அதனால் வலது கையில் வாங்கி அப்படியே வாயில் இட்டுக் கொள்வேன்.
இப்போ கொரோனா காலம் முடிந்த பிறகு வாயில் கொடுக்கிறார்கள். இதில் குருக்களுக்கு என்ன சங்கடம் என்றால் ஒருவருக்கு வாயில் கொடுக்க வேண்டும் . அடுத்து வருபவர் கையை நீட்டுவர். அதற்கடுத்து வருபவர்களுக்கு கையில் கொடுக்க வேண்டும் என்று எண்ணும் போது திடீரென்று அவருக்கு நின்று வாங்குவது மரியாதைக் குறைவாகத் தெரியும் முழங்கால் போட்டு வாங்குவார். ரொம்ப பாவம் அவங்க. ஒவ்வொருத்தருக்கும் கிண்ணத்தில் எடுத்து கொடுத்தே கை விழுந்து போகும். இதில் இத்தனை வேறுபாடுகள். அதுவும் திருவிழா நாட்களில் மிகுந்த கூட்டம் இருக்கும். அசந்து போய் விடுவார்கள். அதனால் கன்னியாஸ்திரிகளும் கொடுக்கலாம் என்று வந்தது நல்லது தான்.
ஆனால் சொல்லி வைத்தது போல் அத்தனை பேருமே முக்காட்டை கழுத்தில் தான் போடுகிறார்கள். கிறிஸ்தவ முறைப்படி ஆலயத்தினுள் பெண்கள் தலை முடிய தெரிய இருக்கக் கூடாது. அப்படி இருக்க நன்மை வழங்குபவர்கள் இப்படி வருவது உறுத்தலாக இருக்கிறது.
ஒரு சின்ன ஆலோசனை. யாராவது உரியவர்கள் பார்வைக்கு சென்று சேருதா பார்ப்போம். நன்மை கொடுக்கும் போது புடவையை சரி செய்து கொண்டிருப்பது கடினம். ஒரு நெட் தலையில் போட்டு முடிச்சிட்டுக் கொள்ளலாமே.
உறுத்தாத மாற்றங்கள் வரவேற்கத் தக்கதே.!!
மாவட்டத் தலைவர் தமுஎச, திரு சேதுராம கிருஷ்ணன் அவர்கள் தலைமை தாங்க , தேவர்பிரான் வரவேற்புரை தொகுத்து வழங்கியவர் சத்யா. நிகழ்வு இளம்பிறை எழுதிய "யாழினியின் புத்தன்" புத்தக வெளியீடு.
புத்தகத்தை " தமிழ்ச் சுடர் "தீன் வெளியிட குழந்தைகள், குழலி, காயத்ரி , தன்யா பெற்றுக் கொண்டார்கள். இன்னும் பேசிய மற்றவர்கள் விவரம் அறிய இணைத்துள்ள அறிவிப்பைப் பாருங்கள்.
"யாழினியின் புத்தன்.
புத்தன் ஒருவருக்கு உலகம் போற்றும் ஞானியாய்த் தெரிவான். ஒருவருக்கு தன் பெண்டாட்டி பிள்ளைகளைத் தவிக்க விட்டுச் சென்ற பொறுப்பற்றவனாய்த் தெரிவான். ஒருவருக்கு ஆசைகளைத் துறக்க முடிந்த வல்லவனாய்த் தெரிவான். இந்த புத்தகம் யாழினியின் புத்தன் எத்தகையவன் என்பதைச் சொல்லும் என்று நினைத்துத் தொடங்கினேன்.
ஆசிரியர் இளம்பிறையின் தமிழ் வளம் நான் அவர்களோடு பேசும் போதே நன்கு அறிந்தது. அதே போல் அவர்கள் பேத்தி குழலிக்கு தன்னிடம் பேசுபவர் யாராய் இருந்தாலும் ஈர்க்கும் சக்தி உண்டு. அதுவும் நான் அறிவேன். இளம்பிறை பெரும்பான்மை பெண் சமூகம் நினைப்பதை மாற்றி யோசிப்பவர்.
சின்ன சின்ன நிகழ்வுகள் கதைகளாக கொடுத்திருக்கிறார்கள். அதுவும் நீதி சார்ந்த கதைகள். கார்த்திகா வரைந்திருக்கும் படங்களும் குழந்தைகளை ஈர்ப்பனவாக உள்ளன. எழுதப்பட்ட பகுதிகளுக்கு பொறுத்தமான தலைப்புகள். காலக் குழந்தைகள் பாட்டி கதைகள் கேட்டு நல்வழிப்பட வாய்ப்பு குறைவு. அதனால் இத்தகைய புத்தகங்களின் அவசியம் ஏற்படுகிறது.
இதில் தன் அப்பனுக்கு பாடம் சொல்லிக் கொடுத்த சரவணன் போல குழந்தைகள் பெரியவர்களுக்கு நல்ல பாடங்களைச் சொல்லிக் கொடுக்கின்றன. அது இன்னும் அவர்களை ஈர்க்கும்.
ஒவ்வொரு பக்கத்திலும் இறுதியில் கொடுக்கப்பட்ட நீதிக் கருத்துகள் எல்லா பக்கங்களிலும் கொடுத்திருக்கலாம். புத்தகத்தின் அளவு குழந்தைகள் பயன்படுத்துவதற்கு ஏற்றதாக உள்ளது. திரு நெல்லைக் கண்ணன் அவர்களின் " மீதமொரு முலை எறி" இருக்கும் வடிவில் இருக்கிறது.
அது சரி யாழினியின் புத்தன் யாரு. அவரவர் கற்பனைக்கு தோன்றுபவர் அவரவர் புத்தன். நல்லா இருக்குதுல்ல.அதே போலத் தான் இயேசுவும். இயேசு மாதா போன்றவர்களை வெளிநாட்டு வெள்ளைக் காரர்கள் போலவே ஏன் காட்டணும்னு சில இடங்களில் கருப்பு நிறத்திலும் சிற்பங்கள் செய்து வைக்கிறார்கள்.
குழந்தைகளுக்கான எழுத்தை அதிகப்படுத்துவோம். இன்னும் கொஞ்ச நாளில் அவர்களே அவர்களுக்காக அதிகம் எழுதத் தொடங்குவார்கள். இப்பவே தொடங்கி விட்டார்கள்.
Subscribe to:
Comments (Atom)
