Bio Data !!

28 March, 2010

சந்தேகக் கேடு

நவீனும் கவிதாவும் கைக்கெட்டும் தூரத்தில், கடலல்ல அவர்கள் கை எட்டும் தூரத்தில் கடற்கரையில் இருந்தார்கள். நவீன் கல்லூரி விரிவுரையாளர். கவிதா அவர் மாணவி. கவிதாவின் கல்லூரி வாழ்க்கை நாளையோடு முடிகிறது.

"ரொம்ப நேரமா எதுவும் பேசாம இருக்கிறது போர் அடிக்கிது. ஏதாவது பேசுங்க" கவிதா

அவன் பார்வை போகும் திசையை பார்த்தாள். ஒரு இளைஞனும் இளைஞியும் தலையோடு தலை முட்டிக் கொண்டு அமர்ந்திருந்தார்கள். கண்ணுக்கு எதிரே கடல் , அலைகளை வைத்து விளையாட்டுக் காட்டி கொண்டிருக்க, அவர்கள் மணலில் எதையோ தேடிக் கொண்டிருந்தார்கள்.

"சொல்லுங்க நவீன். நாளைக்கு நான் ஊருக்குப் போகணும். எத்தனையோ நாள் நாம வெளியில மீட் பண்ணி இருக்கோம். ஆனா நீங்க அதிகம் பேசினதே இல்லை. என்னை கல்யாணம் பண்ணிக்குவீங்க தானே? "
எதிரில் ஒருவன் அவளையே வெறித்துக் கொண்டிருக்க நவீன் முகமெல்லாம் சிவக்க எட்டி அவன் சட்டையைப் பிடித்தான். "டேய்" "நீ முன்ன பின்ன பெண்களைப் பார்த்ததில்லை? "அவன் நமட்டுச் சிரிப்பால் நவீனை எரிச்சல் படுத்தினான். கவிதாவுக்கு பெருமை பிடிபடவில்லை. "நம்மை ஒருவன் பார்ப்பதையே பொறுத்துக்கொள்ள முடியலியே, இவர் நிச்சயமாக பத்திரமாக பார்த்துக் கொள்வார்னு" அவளாகவே முடிவெடுத்துக் கொண்டாள்.
" ஏன் கவி, இத்தனை பேர் இருக்கும் போது உன்னை ஏன் பார்த்துக் கொண்டே வந்தான்? நீ ஏதாவது ரியாக்க்ஷன் கொடுத்தியா? "திடுக்கிட்டு நிமிர்ந்தாள், "இல்ல ஒரு மாதிரி நமட்டு சிரிப்பு சிரித்தான். அதான் கேட்டேன்."
"விளையாடாதீங்க. நான் கல்லூரியில சேர்ந்த முத நாளே என்னை நீங்க இப்படித்தானே வெறித்துப் பார்த்தீங்க. நான் ஏதாவது ரியாக்க்ஷன் கொடுத்தேனா? உமா வந்து "உங்க மனைவி தீப்பிடித்து இறந்து போய்ட்டாங்க. அதிலிருந்து நீங்க இப்படித்தான்னு சொன்னா. "

அதுக்கு அப்பறம் கமலும் சிம்ரனும் "....யாரு நீயா நானா?" னு பாடுவாங்களே அது மாதிரி யார் காரணம்னே தெரியாம ரெண்டு பெரும் ரொம்ப நெருங்கிட்டோம். "சொல்லுங்க எப்போ நம்ம கல்யாணம்? "
கவிதா கேட்டாளே ஒழிய சரியான பாதையில் தான் போய்க் கொண்டிருக்கிறோமானு அவளுக்கே சந்தேகம் தான். ஆனால் ஏனோ இன்று அவள் பேசுவது எதுவும் அவள் கட்டுப்பாட்டில் இல்லை. நவீன் மிகச் சிறந்த ஆங்கில விரிவுரையாளன். அவன் காதல் கதைகளை விவரிக்கும் போது மயங்கிப் போய் கதாநாயகி இடத்தில் தன்னை பொருத்திக் கொள்வாள். ஹீரோ சொல்லுவதை எல்லாம் அவன் தன்னிடம் சொல்லுவதாகவே கற்பனை செய்வாள். இந்த கிறுக்குத் தனத்தை எல்லாம் யாரிடமும் கூறாமல் அவனிடம் மட்டுமே கூறியதால் இன்று முற்றிப் போய் இருக்கிறது.
"நான் யோசித்து முடிவு எடுக்க நினைச்சேன். ஆனா நீ ரொம்ப சொல்றதால
நாளை திருச்செந்துர்ல போய் சாமி மின்னாடி தாலி கட்டிறேன் . அப்படியே விடுமுறை முழுவதும் கொடைக்கானல் , ஊட்டி னு சுற்றிட்டு வருவோம். வந்து உன் பெத்தவங்களை சமாதானம் செய்ய முடியுதான்னு பார்ப்போம். இப்போவும் சொல்றேன் கவி நீ சொல்றதால தான் இந்த கல்யாணம்."

கவி ஒருவித பரவச நிலைக்கு வந்து விட்டாள். காதல் என்பது, தான் நம்புவதை மட்டும் காட்டி மற்றதை மறைத்து கண்ணாம்பூச்சி ஆட்டம் ஆடி விடுகிறதே. இப்பொழுது கை எட்டும் தூரத்தைக் கடந்து விட்டாள். நவீன் அருகில் நெருங்கி அவன் தோளில் தலை சாய்ந்தாள். எந்த அசைவும் இல்லாமல் நவீன் இருப்பதைப் பார்த்ததும் தோளில்சாய்ந்தபடி கண்களை உயர்த்தினாள். ஆனால் அவன் கண்களோ சுற்றி சுற்றி எந்த இளைஞனாவது அவளைக் கவனிக்கிறானா என்பதிலேயே இருந்தது. வழக்கமான சந்தேகம் அவளுக்கு இப்பொழுதும் தலை தூக்கியது "தான் எடுத்த முடிவு சரி தானா?"

மறு நாள் தேவதை போல் வந்திருந்த கவிதாவை கண் கொட்டாமல் பார்த்தான். நவீனும் ஆண்மை நிறைந்தவன் தான். தன்உரிமையைக் காட்டும் விதமாக அவள் நெற்றியில் விழுந்த ஒற்றை முடியை ஒதுக்கி ஒதுக்கி விட்டுக் கொண்டிருந்தான். கோவிலில் பூசாரி மந்திரித்துக் கொடுத்த தாலியை கையில் வாங்கியவன் இன்னும் தன் கழுத்தில் கட்டாமல் என்ன செய்து கொண்டிருக்கிறான், குனிந்திருந்த கவி மெல்ல நிமிர்ந்து அவன் கண் போன திசையில் நோக்கினாள். அங்கே ஒரு இளைஞன் கண்களை மூடி சாமி கும்பிட்டுக் கொண்டிருந்தான். நவீன் மெல்ல முணு முணுத்தான், "ராஸ்கல் இவ்வளவு நேரம் உன்னைத் தான் பார்த்துக் கொண்டிருந்தான். நான் பார்த்ததும் சாமீ கும்பிடுற மாதிரி நடிக்கிறான்."அவன் குரலில் தீ பறந்துக் கொண்டிருந்தது. அவள் மனக் குரல் மெல்ல கேட்டது "நீ சரியான பாதையில் தான் போய்க் கொண்டிருக்கிறாயா?" கவி நடுங்கும் குரலில் மெல்ல " நீங்க முதல்ல தாலியக் கட்டுங்க." என்றாள். கட்டிவிட்டான்.

அடுத்த இரண்டு மாதங்களும் எப்படியோ ஓடி விட்டன . கல்லூரி முடிந்து மகள் வீட்டுக்கு வரவில்லை என்று பெற்றோர் கல்லூரிக்கு சென்று விசாரிக்க அவள் உரிய நாளில் விடுதியைக் காலி செய்து சென்றது தெரிந்ததும், பதற்றம் அதிகரித்து அவளின் தோழிகளிடம் விசாரித்தனர். துப்பு கிடைக்காமல் வேறு வழி இன்றி போலீசிடம் சரணடைய போலீஸ் விசாரணையில் ஒரு தோழி சொன்னாள் 'அவ எதுவும் என்னிடம் சொன்னதில்ல ஆனா நவீன் சார் கிளாசில மட்டும் அவ ஒரு பதற்றத்திலேயே தான் இருப்பா. சார் அவ இருக்கிற பக்கமே பார்க்கமாட்டார். நாங்க பேசினா சார் நல்லா ஜாலியா பேசுவாங்க ஆனா கவி எதாவது சந்தேகம் கேட்டாக் கூட பதிலே சொல்ல மாட்டாங்க. "

போலிசுக்கு இது போதுமே. விசாரித்து கொடைக்கானல் போய் சேர்ந்தார்கள்.
அப்பொழுது நவீனும், கவியும் ஊட்டி ஏரி சுற்றிப்பார்க்க புறப்பட்டுக் கொண்டிருந்தார்கள். " ஹேய், இன்னும் கொஞ்சம் மாடர்னா டிரஸ் பண்ணிக்கலாமே." நவீன் அவளை வளைத்த படி கன்னத்தில் மெதுவாக மீசையால் கூச்சம் ஊட்டினான். கவி இந்த பத்து நாட்களில் மிகுந்த குழப்பத்தில் இருந்தாள். தனியே இருக்கும் போது இவனைப் போல் ஒரு கணவன் இருக்க முடியுமா என்னும்படி அன்பைப் பொழிகிறான். வெளியே போனால் ஒரு நாளும் சண்டை ஏதும் இல்லாமல் திரும்ப முடிவதில்லை.

தன் மார்பு வரை மறைத்திருந்த shawl சுருக்கி தன் கழுத்தை ஒட்டிப் போட்டாள். ஒரு நொடியில் sleeveless சுரிதாரில் glamour girl ஆகி இருந்தாள். "போலாமா"
ஒரு சாதாரண நிகழ்ச்சி TV இல் ஓடிக் கொண்டிருக்க, 'போலாம்' என்றான்.
நிமிட முள் ஆறு எண்களைக் கடந்த பின்னும் அசையாதிருந்தான்.

"என்னங்க, போலாமே,"

"ம்ம்ம், ஏன் கவி, நாம இன்னைக்கு ஊட்டி ஏரிக்கு போறது உன் நண்பர்கள் யாருக்காவது தெரியுமா? "

"இல்லையே , நமக்கு திருமணம் ஆனதே நான் இன்னும் யாருக்கும் சொல்லல. ஏன் கேட்கிறீங்க?"

" சொன்ன உடனே ஸ்டைலை மாத்திக்கிற மாதிரி டிரஸ் பண்ணி இருக்கியே. என் முன்னாடி ஒரு மாதிரி நான் இல்லாதப்ப ஒரு மாதிரி இருக்கலாம்னு தானே."

"ச்சே ! இதுவே உங்களுக்கு வழக்கமா போயிடுச்சு. எதாவது நீங்க சொன்னா உங்களுக்கு பிடிக்கிற மாதிரி இருக்கலாமேனு மாத்தினா சந்தேகத்தோட பேசுறீங்க. ரெண்டுல எதை சுய நினைவில செய்றீங்கன்னு தெரியல. "

"என்னடி சொன்னே?"

தாட்டியான உருவமானவன், உள்ளங்கைகளை விரித்து அவள் கழுத்தை நெருக்கி தலையை சுவரோடு அழுத்தினான்.

மூச்சுத் திணற இருமினாள், "Be careful. யாரைப் பார்த்து சந்தேகப் படுறேன்னு சொன்னே. "

அவன் உதடுகளின் நடுக்கம் அவனை சந்தேகத் தீ தான் தகித்துக் கொண்டிருக்கிறது என்றது. கைகளை உதறி தண்ணீர் பாட்டிலை வாயில் சாய்த்தான். பாதி வாயினுள்ளும் மீதி அவன் உடலை நனைத்தும் வழிந்து கொண்டிருந்தது. விருட்டென்று வெளியேறினான்.

அவன் மீதி வைத்த நீரை கொஞ்சம் கொஞ்சமாக குடித்தாள். அவனைப் போல் வழிய வழிய குடிக்க முடியாது. தண்ணீருக்காக ரூம் பாயை வரச் சொன்னால் அவனை வரச் சொல்லி என்ன செய்தாய் என்று கூசாமல் கேட்பான்.
அவளுக்கு அழுகை வரும் போல இருந்தது. அம்மா மடியில் படுத்து சத்தம் வராமல் அழ வேண்டும். தன் உடல் அதிர்வை வைத்தே தன் அழுகையைக் கண்டு பிடித்து மெல்ல தட்டிக் கொடுப்பாள். அம்மாவை உடனே பார்க்கணும் போல் இருந்தது.
(இன்னும் வரும் )

12 comments:

  1. ச‌ரியான‌ லூசுப்ப‌ய‌லா இருப்பான் போல‌!

    ReplyDelete
  2. சந்தேகம்ங்க்றதே லூசுத்தனம் தான் ரகு. அதைப் பதிய வைக்கிறதுக்காக கொஞ்சம் அதிகப் படியான கற்பனை.

    ReplyDelete
  3. நாய்க்குட்டிக்கு மனசு இப்படித்தான் இருக்குமா?
    அப்ப அது பேசினா நம்மாலெ தாங்க முடியமா?

    ReplyDelete
  4. தங்கள் முதல் வரவு நல் வரவு ஆகுக அய்யா ,
    நாய்க்குட்டி மனசு நல்ல மனசு ஐயா, விரட்ட விரட்ட விலகிச் செல்லாத மனசு. சந்தேகப் படுறவன் தன் நடவடிக்கை எவ்வளவு அசிங்கமானதுன்னு புரிய வைக்க எழுதிய கதை.

    ReplyDelete
  5. சந்தேக கோடு..அது சந்தோஷ கேடு

    ReplyDelete
  6. பார்வையாளன் தங்கள் முதல் வரவு நல்வரவு ஆகுக.
    அதை வலியுறுத்தத்தான் இந்த கதை, நல்லா இருக்குதா

    ReplyDelete
  7. நுணுக்கமாக உன்றசிகளை பதிவு செய்து இருக்கிறீர்கள்...

    அன்பு என்ற விஷயத்தை, பல பேர் தவறாக புரிந்து கொண்டு இருக்கிறார்கள்... நேசித்தல் என்பது ஒருவரை அப்படியே , அவராகவே ஏற்று கொள்வது...

    இதை எல்லாம் , தத்துவம் போல் சொல்லாமல், இயல்பாக சொல்லி இருக்கிறீர்கள்....

    அறிவுரையோ, உங்கள் கருத்தையோ சொல்லமால், ஒரு நிகழ்ச்சியை அபாரமாக படம் பிடித்து இருப்பது, படிப்பவரை யோசிக்க வைக்கும்

    " தன் உடல் அதிர்வை வைத்தே தன் அழுகையைக் கண்டு பிடித்து மெல்ல தட்டிக் கொடுப்பாள்"

    " ஒரு நொடியில் sleeveless சுரிதாரில் glamour girl ஆகி இருந்தாள்"
    " தன்உரிமையைக் காட்டும் விதமாக அவள் நெற்றியில் விழுந்த ஒற்றை முடியை ஒதுக்கி ஒதுக்கி விட்டுக் கொண்டிருந்தான்"

    வார்த்தைகளில், சித்திரம் வரைகிறீர்கள்... மிக மிக ரசித்து படித்தேன் ....

    ReplyDelete
  8. இந்தத் தொடருக்குள் நான் இணைந்து விட்டேன்.. பருவத்தின் உந்துதலால் நல்லது கெட்டது ஏது என்றெல்லாம் நினைக்காமல் அவசரப் படும் பெண்கள் மற்றும் ஆண்களின் நிலை இது தான்.. தொடர்ந்து இதே போல எழுதுங்கள்... உங்கள் ஓட்டம் மிக அருமை..

    வாழ்த்துகள்..

    நன்றி..

    ReplyDelete
  9. காதலை உணரத் தெரியா மூடர்கள்..
    கதைதான் எனினும் படித்ததும் ஏனோ அந்தப் பெண்ணின் மேல் இரக்கம் பிறந்தது..
    இதைக் கேள்விப் பட்டால் மீண்டும் அவன் அவளைத் துன்புறுத்தக் கூடும்.. :)
    நல்ல முயற்சி..

    ReplyDelete
  10. நன்றி பிரகாஷ், தங்கள் முதல் வரவு நல்வரவு ஆகுக.
    தங்களைப் போன்றவர்களின் உற்சாகப் படுத்துதல் எழுதத் தூண்டுகிறது.

    ReplyDelete
  11. நன்றி மணிகண்டன், வாசித்த எல்லோரும் தமில்ஷ்ல ஒரு vote போடுங்கப்பா,

    ReplyDelete
  12. இப்போதான் முதல் பாகம் படிச்சேன்.. கதை அருமைங்க... அடுத்த பாகம் ரெடியா இருக்கிறதால் அதையும் படிச்சிட்டு மறுமொழியிடுறேன்.

    ReplyDelete

தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!