Bio Data !!

29 April, 2025

#குழந்தை ஓவியர்கள்

"இன்று பல குழந்தைகள் திறமை மிகுந்தவர்களாக இருக்கிறார்கள். முக்கியமாக ஓவியத் திறமை. ஆனால் பெற்றோர்கள் உடனே ஒரு வகுப்பில் கொண்டு சேர்க்கத் துடிக்கிறோம். அதனால் இயல்பான கற்பனை வளர்ச்சி தடைப்பட்டு விடுகிறது. அவர்களுக்கு வாய்ப்பு கொடுப்பது என்பதே குழந்தைகளை குழந்தைகளாகவே இருக்க விடுவது தான். பூ தன் சந்தோஷத்துக்காகப் பூப்பது போல " என்றார் குழந்தைகள் புத்தகங்களில் ஓவியம் வரையும் தோழர் கார்த்திகா. ஓவியர் கார்த்திகா " குழந்தை வரைவது முதலில் தன் சொந்த சந்தோஷத்துக்காக. பத்து வயது வரையில் தன் போக்கில் வரைய விட்டு விட வேண்டும். பின் டெக்னிக் பழகிக் கொள்ளும். வண்ணங்கள் கொடுக்கும் அதே மகிழ்வை கருப்பு வெள்ளையும் குழந்தைகளுக்கு கொடுக்கும். ஓவியங்கள் தொடங்குவது கிறுக்கல்களில். " என்றார். " குழந்தைகளுக்கான சங்கம் ஒரு காலத்தில் பொது சமூகத்தில் பெரும் பங்கு ஆற்றிக் கொண்டு இருந்தன. இப்பொழுது தொய்வடைந்துள்ளன. குழந்தை இலக்கியம் எழுதுபவர்கள் பெரும் பொறுப்புணர்ச்சியோடு எழுதணும். தவறான தகவல்களைச் சொல்லி விடக் கூடாது. குழந்தைகளை விமர்சிக்கப் பழக்கணும். அந்த விமர்சனங்களை பெரியவர்கள் பொறுணர்வோடு ஏற்றுக் கொள்ள வேண்டும்." என்றார் எழுத்தாளர் உதய ஷங்கர். (தொடரும்)

28 April, 2025

# குழந்தைகளுக்கு இலக்கியம் படைப்பவர்கள் படிப்பவர்கள்

மாநிலச் செயலாளர்.சாலை செல்வம், பாண்டிச்சேரி. மாநில செயற்குழு உறுப்பினர் கமலாலயன், மாநில துணைப் பொருளாளர். கார்த்திகா கவின் குமார். எழுத்தாளர் உதய ஷங்கர் முன்னெடுக்க நிகழ்வு நடந்தது. நாறும்பூநாதன் , கரிசல் குயில் இருவருக்கும் அஞ்சலி செலுத்துவதோடு நிகழ்வு தொடங்கியது. வாண்டு மாமா நம் சிறு வயதில் கேள்விப்பட்ட பெயர். அவரது நூற்றாண்டு இந்த ஆண்டு. இரண்டு புத்தகங்கள் வெளியிடப்பட்டன. அவை 1) வாண்டு மாமாவைக் கொண்டாடுவோம் 2) தலை சிறந்த நூறு சிறார் புத்தகங்கள். இந்த வரிசை பிபிசி தொகுத்து அளித்தது. Alice in wonderland இதில் இரண்டாவது புத்தகமாக உள்ளது. நூற்றைம்பது வருஷங்களுக்கு முன் நடந்த கதை. அப்போதைய அரசை எதிர்த்து இந்த கதையில் வருகிறது. இந்த புத்தகங்களை பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ளது. தமிழ் ஹிந்துவில் பணியாற்றும் ஆதி வள்ளியப்பன் மிகச் சிறந்த உரை ஆற்றினார். " கண்ணை மூடிக் கொண்டு நான் எழுதுவது தான் சிறந்ததுன்னு நினைச்சோம்னா நாம் தொடங்கின இடத்திலேயே தான் நிற்போம்.முன்னேற வாய்ப்பில்லை" என்று அழுத்தமாகச் சொன்னார். வாண்டு மாமா, தான் கதைகள் எழுத எடுத்துக் கொண்ட விஷயங்களுக்கு back ground work நிறைய பண்ணி இருக்கிறார். கிட்டத்தட்ட 200 புத்தகங்கள் எழுதி இருக்கிறார் .இவர் ஒரு சிலவற்றைத் தவிர்த்து, கை வைக்காத விஷயமே இல்லை எனலாம் . பாட்டில் மட்டும் கை வைக்கவில்லை. புதினம் அபுதினம் ரெண்டும் எழுதி இருக்கிறார். சரியாக ஆவணப்படுத்தப்படாததால் இன்றைய குழந்தைகளுக்கு வாண்டு மாமா பற்றி தெரியாமல் போய் விட்டது. அடுத்து ஆர் வெங்கட்ராமன் இளையோருக்கான விஷயங்களை நிறைய எழுதினார். இவர் எழுதிய "ஒரு நாள் போதுமா" என்ற கதை கலைமகளைச் சேர்ந்த " கண்ணன்" பத்திரிகையில் வெளி வந்த்தாகச் சொன்னார் . பேராசிரியர் ப்ரியதர்ஷினி அருமையான ஒரு வாழ்த்துரை வழங்கினார். பள்ளி, கல்லூரிகளில் உடை, கட்டி இருக்கும் கயிறு போன்றவற்றின் மூலமே ஜாதியம் எப்படி வளர்கிறது என வருத்தத்தோடுசொன்னார். அவர் சொன்னதில் ஒரு கருத்துஎனக்கு ரொம்ப பிடித்தது. நாம் ஒரு பட்டம் வாங்குறோம்னா அதில் 30 க்கு மேற்பட்டோர் பங்கு உண்டு. ஆசிரியர், பள்ளியில் பணி புரிபவர், பள்ளி டிரைவர் உட்பட. நாம் பெற்றது பல. அதை எவ்வழியிலாவது திருப்பிக் கொடுக்கணும் என்றார். அதற்கு இந்த கதை சொல்லல் ஒரு வழிமுறை. (தொடரும்)
நாம சின்ன பிள்ளைகளா இருக்கிறப்போ நிறைய கதை கேட்டிருப்போம். எனக்கு குமார்னு ஒரு அண்ணன் உண்டு. பெரியப்பா பையன். திருச்சி. வங்கிப்பணி். கொரோனா பாதிப்பால் இரண்டாம் அலையில் இறந்து போனாங்க. எனக்கு சின்ன வயசுல அவங்களைப் பார்த்ததை நினைச்சால் பாண்ட் ஷர்ட் வெள்ளையில் போட்டு இடையில் கருப்பு பெல்ட்டுடன் அழகான தோற்றம் தான் ஞாபகம் வரும். வாசற் படியில் உட்கார்ந்து , சவுண்ட் எஃபெக்ட்டோட அவங்க சொன்ன கதைகள் அவ்வளவு இனிக்குது இப்போ நினைச்சா? இப்போ குழந்தைகளுக்கு கதை சொல்ல யாருக்கு ஆர்வம் இருக்குது. ஆனால் அந்த கதைகள் அவர்கள் வாழ்க்கையை எவ்வளவு செம்மைப் படுத்தும் . அதனால் அந்த பணியை நாங்கள் ஒரு சிலர் கையில் எடுத்திருக்கிறோம். தமிழ்நாடு அளவில் பல மாவட்டங்களிலும் நடக்கிறது. மறுபடியும் வீடியோ எடுத்தால் குழந்தைகளின் கண்ணுக்கு சிரமம் அளிக்கும் என்பதால் ஆடியோவில் கதை சொல்லி பதிந்து வாட்ஸ் அப் குழுவில் அனுப்புவோம். இதில் சேரச் சொல்லி என் அன்புத் தம்பி அருண் எனக்கு அழைப்பு விடுத்த போது இது இவ்வளவு சந்தோஷம் தரும் அனுபவமாக இருக்கும் எனத் தெரியாது. நம் நேரத்தைப் பயன்படுத்த கூடுதலாய் ஒரு வழி என்று நினைத்துத் தான் சரி என்று சொன்னேன். இது தொடங்கி மூன்று வருடங்கள் ஆகின்றன. சமீபத்தில் தான் நெல்லைக் கிளை புத்துணர்வுடன் இயங்கத் தொடங்கி இருக்கிறது. தம்பிகள் தேவர்பிரான், அருண் பாரதி, சேது பாலா, தங்கை ப்ரியதர்ஷினி நெல்லையில் முக்கிய பொறுப்பு எடுத்து நடத்துகிறார்கள். இந்த ஆண்டு மாநில மாநாடு நெல்லையில் நேற்று நடந்தது. "சிறார் எழுத்தாளர், கலைஞர்கள் மாநில மாநாடு" இந்த கலைஞர்களில் கதை சொல்லிகள், குழந்தை புத்தகங்களுக்கு படம் வரைபவர்கள் எனப் பலர் இருக்கின்றனர். சமீபத்தில் நெல்லையில் வன்முறை பள்ளி மாணவர் அளவில் புகுந்து விட்ட நிலையில் இது அவசியத் தேவையாகிறது. குழந்தைகள் அளவிலேயே வாழ்வை நேர்ப்படுத்தி விட்டோம் என்றால் இளைஞர்கள் ஆன பின் கவலைப்பட வேண்டியதில்லை. இதை வாசிக்கும் உங்களில் யாருக்காவது உங்கள் குழந்தைகளையோ பேரப் பிள்ளைகளையோ (எந்த மாவட்டம் ஆனாலும் சரி) சேர்த்து விட நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள். இரவு படுக்கப் போகும் முன் செல்லிலிருந்து கண்களுக்கு விடுதலை கொடுத்து செவிகளுக்கு வேலை கொடுக்கலாம். நிகழ்வை பகுதி பகுதியாக பகிர்கிறேன். (தொடரும்)

22 April, 2025

அனைவருக்கும் இனிய புத்தக தின நல் வாழ்த்துகள்.!! என்னைப் பொறுத்த வரை இது என் பிறந்த நாளை ஒத்தது. இன்று ஒரு நல்ல விஷயம் ஒன்று உங்களுக்குச் சொல்கிறேன். என்னைப் பல நாள் தொடர்பவர்களுக்கு என் தோழி சுபாவை நன்குத் தெரிந்திருக்கும். நெல்லையைச் சேர்ந்தவர். நான் படித்த பள்ளியிலேயே எனக்குப் பல ஆண்டுகளுக்குப் பின் படித்தவர். ஹலோ FM எனக்கு ஒரு சில கண் பார்வை அற்றவர்களை அறிமுகம் செய்தது. அதில் நிலைத்து இருக்கும் நட்பு இவர்களுடையது மட்டுமே. பல விஷயங்களைப் பற்றி பேசுவோம். அன்றைய நாட்டு நிலவரம் அவர்களுக்கு அத்துபடி. பல நேரங்களில் எனக்கு ஒரு இயல்பான தோழியிடம் பேசும் உணர்வே இருக்கும். அவர்களிடம் ஒரு சிறந்த பழக்கம் இருந்தது. தனக்கு தோன்றும் பல கருத்துகளை சிலவற்றை உரை நடையிலும் சிலவற்றை கவிதை நடையிலும் சிந்தித்து யாரோடய உதவியோடாவது அதை நோட்டில் எழுதி வைத்துக் கொள்வார்கள். இது பல வருடப் பழக்கம். இரண்டு ஆண்டுகளுக்கு முன் நான் என் கவிதைகளை புத்தக வடிவில் கொண்டு வந்த போது அவர்களுக்கும் அதை செய்யலாமே என்று தோன்றியது. ஆனால் ISBN எல்லாம் இல்லாத ஒருவர் என் சொந்த தேவைக்காக போட்டுக் கொடுத்ததால் , இன்னும் சிறப்பாக செய்யலாம் என யோசித்தார்கள். அது இப்போது ஒரு பதிப்பகம் மூலம் நிறைவேறி இருக்கிறது. முதலில் E- book ஆக வந்தப்போ நான் முக நூலில் தெரிவித்தேன். இப்போ hard copy ஆக புத்தக வடிவில் வந்து விட்டது. இதில் வெள்ளுவன் அவர்கள் அணிந்துரை எழுத நான் முன்னுரை எழுதி இருக்கிறேன். பின் பக்க அட்டையில் பதிய சுபாவைப் பற்றியும், இந்த புத்தகத்தைப் பற்றியும் எழுதிக் கொடுத்து இருக்கிறேன். இவர்கள் இரண்டாவது மகன் பிறந்த பிறகு கண் பார்வை இழந்ததால் ப்ரெயிலி முறை அறியாதவர்கள். அறிவியல் வளர்ந்த இந்தக் காலத்தில் புத்தகம் போடுவது இன்னும் கொஞ்சம் சுலபமாகலாம். தொடர்ந்து எழுதுங்கள். என்னால் முயன்ற உதவி செய்கிறேன் என்று ஊக்குவித்திருக்கிறேன். "எனக்குத் தெரிந்ததெல்லாம் இருட்டு மட்டும் தான். நான் புரிந்மு கொண்ட அளவில் கருத்துக்களைச் சொல்லி இருக்கிறேன்" என்று சொன்னார்கள்.்இவர்கள் தன்னம்பிக்கையும் விடா முயற்சியும் எனக்கு ரொம்ப பிடித்த ஒன்று. இந்த செய்தியை " உலக புத்தக தினமான" இன்று உங்களுக்குச் சொல்வதில் எனக்கு பெரு மகிழ்ச்சி. உலக புத்தக தின நல் வாழ்த்துகள்.

21 April, 2025

புத்தகத்தின் பெயர்: கா நா சு நாவல்கள் . மீடியா மாஸ்டர்ஸ் மூலம் வெளியீடு விலை 150 ரூபாய் முதல் பதிப்பு 2011 காநா சு படைப்புலகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய படைப்பாளி. குறைந்த அளவிலேயே எழுதினாலும் அவை தவிர்க்க முடியாதவை. தன் முன்னுரையில் நூறு பக்கங்களில் எழுத முடியாதவற்றை ஐந்நூறு பக்கங்களில் எழுத முடியாது என்கிறார். நான்கு குறுநாவல்களின் தொகுப்பு. முதல் நாவல் "பெரிய மனிதன்" இதில் வருபவன் உலகம் தன்னை வெற்றி பெற்றவனாக நினைத்தாலும் தான் தோல்வியுற்றதாகவே எண்ணுகிறான். " தன் கதையை கருப்பு மசியில் நல்ல காகிதத்தில் தங்கக் குல்லா அணிந்த பேனாவினால் எழுத உட்கார்ந்ததாகச்" சொல்கிறார். தன்னைப் பற்றிய உண்மை தனக்கே கசந்தாலும் தன் வாழ்க்கையை சொல்லத் தொடங்குகிறார். வாழ்க்கையில் வெற்றி என்பது அவரவர் மனதுக்கு தக்கபடி வியாக்கியானம் செய்து கொள்ளலாம் என்கிறார் ஓட்டை காரில் பயணித்தாலும் நடந்து செல்பவனை விட அவன் வெற்றி பெற்றவன் தானே. தன்னைவிட வயதில் மூத்த , ஒரு குழந்தையுடன் இருக்கும் விதவைப் பெண்ணை இளவயதில் மணந்து கொள்கிறார் . மந்தையில் ஆடாக இருப்பது சுலபம் என்று பலர் நினைத்துக் கொள்கின்றனர். ஆனால் தன் தனித்தன்மையை நிரூபித்துக் கொள்ள எந்த திருமணம் செய்தோமோ அதனாலேயே தன் வாழ்க்கையை தானே பாழ் செய்து கொண்டோமோ என பின்னாளில் வருந்துகிறார் அந்த பெரிய மனிதர். ஆனால் மீனாட்சி தன் சூட்சும புத்தியால் அவரே அறியாத மனோபாவத்தை, அவர் தன்னை காதலித்து மணக்கவில்லை என்பதை கண்டுபிடித்து விடுகிறாள். உலகத்தில் உள்ள பணத்துக்கு எல்லாம் ஈடானது காலத்தின் ஒரு துளி . இதைச் சரிவர புரிந்து கொண்டால் வாழ்வில் வெற்றி பெறலாம். வேண்டாதோர் அதிகரிக்க அதிகரிக்க ஊரில் ஒரு மனிதனின் பெரிய மனிதத் தன்மை வளரத் தொடங்கி விடுகிறது என்கிறார். Vice Versa என்றொரு வார்த்தை பிரயோகம் உண்டு. இதனால் அது. அதனால் இது . அப்படித்தான் எனக்குத் தோன்றுகிறது. பெரிய மனிதத் தன்மை அதிகரிக்க வேண்டாதோரும் அதிகரிப்பர். வேண்டாதவர் அதிகரிக்க பெரிய மனிதத் தன்மை அதிகரிக்கும். அனுபவத்தால் வரும் வார்த்தைகள் அங்கங்கே அழகாக வந்து விழுகின்றன. " தண்டனையிலிருந்து தப்பி விட்டவன் குற்றத்தின் சுமையை இரண்டு மடங்காக அனுபவிக்கிறான் என்று தான் தோன்றுகிறது " "வாழ்ந்தவர் கெட்டார்" என்ற இரண்டாவது நாவலில் மனிதனின் சராசரி மனநிலையை மண்டையில் தட்டியது போல் சொல்லி இருப்பார். "சாளரத்தின் வழியாக தர்மப் பத்தினிகள் தங்கள் நாயகர்களைத் தான் பார்த்தார்களோ அல்லது ஆசை கண்களோடு கள்ளக்காதலர்களைத் தான் பார்த்தார்களோ. தம் சொந்த நாயகர்களைத் தான் பார்த்தார்கள் என்று நினைத்துக் கொள்வோமே அதில் நமக்கென்ன நஷ்டம்" என்கிறார். ஆனால் பெரும்பாலும் மனிதர்கள் அடுத்தவரை தவறு இழைப்பவர்களாக நினைத்துப் பார்த்துத் தானே திருப்திப்பட்டுக் கொள்கிறார்கள் . கதையில் மம்மேலியார்கள் என்ற ஒரு குறிப்பிட்ட இனத்தைப் பற்றிச் சொல்கிறார். ஆடம்பரமாக பெரிய மனிதர்கள் மாதிரி வாழப் பழகிய பின் வறுமையில் மாட்டியும் அந்த பழக்கத்தை விட முடியாதவர்கள். ஏதோ ஒருவர் இருவர் இதிலிருந்து தப்பிக்கலாம். ஆனால் அவர்களும் ஏதோ குற்றம் செய்தவர் போல் பதுங்கி இரவில் வாழ்வார்கள். ஒரு காட்சியில் ரகு, ரகுவின் தோழன் மம்மேலியார். மம்மேலியார் தனது அன்றைய குடித் தேவைக்கு தன்னை எதிர் பார்க்கிறார் என்று தெரிந்தே உடன் சென்று வாங்கிக் கொடுக்கும் ரகுவின் தோழன். தன் தந்தை சேர்த்து வைத்த சொத்தை முழுவதும் அழித்து பழம் பெருமை பேசித் திரியும் மம்மேலியார். தனக்கு மம்மேலியார் மேல் உள்ள கோபத்தில் " நீ வாழவே தகுதியற்றவன்" என்ற சொற்களை உதிர்க்கும் ரகு. அந்த நேரத்தில் அங்கு வந்த ரயிலின் முன் குதித்து உயிர் துறக்கிறார் மம்மேலியார். அவருடைய சாவுக்கு யார் காரணம். பொறுப்பற்ற வாழ்க்கை வாழ்ந்த மம்மேலியாரா? கெடுதல் என்று தெரிந்தே அவரை அளவுக்கு அதிகமாக குடிக்க அனுமதித்த ரகுவின் தோழனா? கடுமையான வார்த்தைகளை உதிர்த்த ரகுவா? நிகழ்வு நடந்த இடமா? சாவின் நேரம் வரும்போது எல்லாம் கூடி வரும். " ஆட்கொல்லி" என்றொரு குறு நாவல். பணக்காரரிடம் பணம் சேருகிறது. ஏழைகளிடம் படிப்படியாக பணம் குறைகிறது. ஆனால் இந்த ஏழைமை மனிதனாக ஏற்படுத்திக் கொண்டதுதான். கிட்ட நெருங்கினால் ஒட்டிக்கொள்ளும் என்பது போல் பயப்படுகிறான். கதை சொல்லி தன் மாமா ஆசிரியராக இருந்த பள்ளியிலேயே படித்தாலும் எந்த பாடமும் மாமாவிடம் படித்ததில்லை. தனக்கு எந்த விஷயத்தில் சந்தேகம் வந்தாலும் மாமாவுக்கும் அதே இடத்தில் சந்தேகம் வந்துவிடும் என்கிறார். ஆசிரியர் மாமா எத்தகைய ஆசிரியர் என்பது தெள்ளத் தெளிவாகி விடுகிறது. " பணத்தாசை இல்லாமல் கடவுள் பக்தி மட்டும் உடையவர்கள் பரம ஏழைகளாக இருப்பதை பார்க்கிறோம்" என்கிறார். உண்மைதானா என்ற கேள்வி எழும்புகிறது. பரம ஏழை எப்படி பணத்தாசை இல்லாமல் இருக்க முடியும். வெங்கடாசலம் என்ற கதை நாயகனின் மாமா , மாமியின் குணாதிசயங்களை அலசுவதிலேயே பெரும் கதைப் பகுதி போவதால் எனக்கு இந்தக் கதை அவ்வளவு ரசிக்கவில்லை. " நளினி" என்பது நான்காவது கதை. நாயகன் சீதாராமன் தன் குடும்பம் உயர எவ்வளவு உதவும் என்றாலும் தன்னைவிட புத்திசாலியான பெண்ணை மணக்க விரும்பவில்லை என்கிறான். காலமாற்றத்தால் நல்ல முயற்சி. தன்னைவிட புத்திசாலி பெண்ணை மணக்க ஆண் தற்போது தயாராக இருக்கிறான். ஆனால் தன்னிடம் மட்டும் முட்டாளாக நடந்து கொள்ள வேண்டும் என்று விரும்புகிறான். நாயகி நளினியை ' எவ்வளவு சாமர்த்தியசாலி ஆனாலும் ஒரு அயோக்கியனுடன் வாழ தான் விரும்பவில்லை " என்ற தீர்க்கமான ஒரு முடிவு எடுக்க வைத்திருக்கிறார் ஆசிரியர். இதனாலேயே இத்தகைய எழுத்தாளர்கள் காலம் கடந்தும் நிற்கிறார்கள்.

20 April, 2025

என்னைப் போலவே நட்பைத் தேடுபவர் ஒருவர் சமீபத்தில் எனக்கு அறிமுகமானார். பெயர் விஜயலக்ஷ்மி. "கரிசல்" என்றொரு வாட்ஸ்அப் குரூப்பில் நானிருக்கிறேன். அதில் அட்மின் வாரம் ஒரு கதை சொல்ல நாங்கள் எல்லாம் கதை பற்றிய எங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்வோம். அதில் நான் வேடிக்கையாக " நானும் கணக்கு டீச்சர் தான்" என்று ஒரு கமென்ட் போட்டேன். ஆம் நான் B.Sc B.Ed கணிதம் படித்ததை இப்படித் தானே நினைவு படுத்திக் கொள்ள முடியும். மதுரையிலிருந்து ஒரு நாள் ஒரு தோழி அழைத்தார். அவர் 70+ வயதுடையவர். என் எண்ணை கரிசல் குழுவிலிருந்து எடுத்து அழைத்தார். எனக்கு அறிமுகம் இல்லாதவர். " என்னோட கணிதம் படித்த ஒரு மாணவியை நாங்கள் தேடிக் கொண்டு இருக்கிறோம். உங்க நெல்லை அருகில் உள்ள பணகுடியில் தான் கணித டீச்சராகப் பணி புரிந்தார். நீங்களும் கணித டீச்சர் என்று போட்டு இருந்ததால் அழைத்தேன். நீங்கள் முயற்சி பண்ண முடியுமா? ' எனக் கேட்டார். நானும் பல வகைகளில் தேடினேன். கண்டு பிடிக்க முடியவில்லை. இதற்கு நடுவில் அந்த தோழி பள்ளி ஆட்டோகிராஃபிலிருந்து அவர்களின் முகவரியைத் தேடி ஒரு கடிதம் அனுப்பி இருக்கிறார். " நம் பள்ளி மாணவிகள் சந்திக்க இருக்கிறோம். உன்னிடம் தொடர்பு கொள்ள முடியவில்லை. இந்த கடிதம் கண்டதும் கவரில் உள்ள என் அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளவும்" என எழுதி அனுப்பி இருக்கிறார். தேவ நேசம் என்ற பெண் பெயரை தேவ நேசன் என்ற ஆணாக நினைத்து தேடிய பணகுடி போஸ்ட் உமன் அதை அலட்சியப்படுத்தாமல் தேடியவர்களை அலைபேசியில் அழைத்து " இந்த முகவரியில் இப்படி ஒரு ஆண் இல்லை" என்னும் போது தான் பெண் ஆணாக மாறிய தவறு புரிந்திருக்கிறது. " எனக்கு 72 வயது. என்னுடன் படித்த தோழியைத் தான் தேடிக் கொண்டிருக்கிறேன். அவர் தேவ நேசன் அல்ல தேவ நேசம்" என்றதும். அந்த பெண் விசாரிக்கிறேன் என்றிருக்கிறார். அரசு ஊழியர்கள் சரியாக வேலை பார்ப்பதில்லை என்று ஒரு கருத்து பொதுவாக நிலவுகிறது. ஆனால் இந்த போஸ்ட் உமன் விசாரித்து அந்த பெண் ஓய்வுக்குப் பிறகு ஊர் மாறிச் சென்று விட்டதாகவும், ஆனால் அவர்களுடைய பெரியப்பா வீடு பக்கத்தில் இருப்பதாக விசாரித்து அறிந்து, அவர்களிடம் இந்த கடிதத்தைக் கொண்டு கொடுத்து அந்தத் தோழிகள் பேசிக் கொண்டார்கள். வேலை இல்லாமல் நான் என் பழைய தோழிகளைத் தேடிக் கண்டுபிடித்து தொடர்பு கொள்வதாக ஒரு எண்ணம் என் வீட்டில் இருக்கும் போது என்னைப் போலவே ஒருவர், என்னை விட வயதில் பெரியவர் , நோயினால் அதிகம் நகர முடியாமல் படுக்கையில் இருப்பவர் , விடா முயற்சியோடு தேடி ஒரு தோழியைக் கண்டு பிடித்து விட்டது ஒரு ஆச்சர்யம். கடிதம் எழுதும் மரபு மறைந்து வரும் இக்காலத்தில் ஒரு சாதாரணத் தபாலை "இந்த முகவரியில் சம்பந்தப்பட்டவர் இல்லை" எனத் தூக்கிப் போட்டு விடாமல் அழைத்துப் பேசி சம்பந்தப்பட்டவரின் உறவினர் மூலம் கண்டு பிடித்து கடிதத்தைச் சேர்த்தவர் ஒரு அரசு ஊழியர். இது இரண்டாவது ஆச்சர்யம். இவர்கள் ஒரு புறம் தேட , கல்வி அதிகாரி ஒருவர் இன்னொரு புறம் தேட எப்படியோ தோழர்கள் இணைந்து விட்டார்கள். ஒரு திரைப்படத்தில் சிவாஜியும், கே ஆர் விஜயாவும் பல ஆண்டுகள் பிரிவுக்குப் பின் தொலைபேசியில் பேசியதை உணர்வு பூர்வமாகப் பார்த்து கண்ணீர் விட்ட தலைமுறையைச் சேர்ந்தவர்கள் நாங்கள். பழைய உறவுகள் கிடைத்த சந்தோஷத்தை இளைய தலைமுறையால் புரிந்து கொள்ள முடியுமா? சந்தேகம் தான். நான் அவர்களிடம் நானும் என் தோழியைத் தேடிக் கொண்டு இருக்கிறேன் என்று சொன்னதும் அவள் சம்பந்தப்பட்ட ஒரு தகவலையும் விசாரித்துச் சொன்னார்கள். தரும்புரியில் கல்வித் துறையில் அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்றதாகச் சொல்லும் என் தோழி செந்தமிழ் செல்வியையும் , ஒரு வருடமே ஆனாலும் என்னோடு B.Ed படித்து பின் தகவலே தெரியாமல் போன தோழி சுசிலாவையும் யாராவது கண்டு பிடித்து தாங்களேன்.

18 April, 2025

# நேசக் கூட்டின் திறவுகோல். எழுதத்தூண்டிய தலைப்பைத் தந்த நண்பர் நவாஸுக்கு நன்றி. எனக்கு கல்லூரி நாட்களில் வாசித்த ஆட்டோகிராஃப் ஒன்று ஞாபகம் வருகிறது. அட்சர சுத்தமாய் வார்த்தைகள் ஞாபகம் இல்லை. ஆனால் கருத்து நினைவில் உண்டு. "என் இதயக் கதவை உனக்காகத் திறந்து வைத்தேன். உன் வரவுக்காகக் காத்திருந்தேன். நீ நுழைந்ததும் கதவைப் பூட்டி சாவியை ஜன்னல் வழியே கடலில் எறிந்தேன். இனி வெளியேறுதல் என்பது உனக்குமில்லை. எனக்குமில்லை. " இது தான் ஆட்டோகிராபின் சாராம்சம். இது அந்த வயதில் இருக்கும் அதிகப்படியான பொஸசிவ்நெஸ் . ஒருவர் கிடைத்து விட்டால் அவரை முழுவதுமாக தமக்கே என வைத்துக் கொள்ளத் துடிக்கும் ஆர்வத்தின் உச்ச பட்ச வெளிப்பாடு. ஆனால் வயது அதிகமான பின் எனக்குத் தோன்றுவது அந்த நேசக் கூட்டின் திறவுகோலை நாம் நேசிப்பவரிடமே கொடுத்து வைத்து உனக்கு எப்போது என்னை விட்டு விலகத் தோன்றுகிறதோ அப்போது கதவைத் திறந்து நீ போகலாம் . என்ற உரிமையைக் கொடுத்து வைத்தால் நாமும் நாம் நேசிப்பவரும் சுதந்திரமாக சுவாசிக்கலாம். அழுத்தமற்ற அன்பை அனுபவிக்கலாம். நம் நேசக் கூட்டின் திறவுகோலை நாம் நேசிப்பவரிடமே கொடுத்து வைப்போம். இது அனேகமாக நேசிப்பவரை நம்மிடமே இருத்தி வைக்கும்.

14 April, 2025

எழுத்தாளர் நாறும்பூநாதனைப் பற்றி சொல்ல விட்டுப் போன சில விஷயங்கள். மனிதாபிமானம் மிகுந்த ஒரு மனிதரைப் பற்றி நாம் அறிந்தவற்றை விட்டு விடாமல் எல்லாவற்றையும் சொல்லி விட வேண்டும் என நினைப்பதாலேயே பல பதிவுகள். ஐம்பதாண்டுகளுக்கும் மேலாக நட்பாக இருந்த உதயசங்கர் சார் பேசும் போது அவர் மனிதர்களை எவ்வளவு மதித்திருந்திருக்கிறார் நேசித்திருந்திருக்கிறார் என்பது புரிந்தது. ->அவர் மகன் திலக் பேசும் போது " எங்க அப்பா வீட்டைக் கவனிக்காம வெளியே அதிகம் போனதாக ஒரு சிலர் சொல்றாங்க. அவர் எங்களுக்கும் செய்ய வேண்டிய எல்லாம் செய்தார். என் அப்பா எல்லாவற்றையும் சரியாகத் தான் செய்தார். அவரைப் பற்றி யாராவது தவறாகச் சொன்னால் நிச்சயம் 100% சொல்பவர் தான் தவறானவராக இருக்க வேண்டும்" பெற்ற பிள்ளை சரியாகப் புரிந்து கொண்ட பிறகு வேறென்ன வேண்டும். -> நாதன் சாருடைய அண்ணன் மணி ஒரு விஷயம் சொன்னார். நாதன் காரை மிக நிதானமாக ஓட்டுவாராம். ஒரு முறை எல்லோரும் போய்க் கொண்டிருந்த போது காரை ஒரு ஓரமாக நிறுத்தினாராம். எதற்கென்றால் பறந்து வந்து காரின் வைப்பரில் ரெக்கை மாட்டிக் கொள்ள படபடத்துக் கொண்டிருந்த ஒரு பட்டாம்பூச்சியை எடுத்து பறக்க விட்டு விட்டு பயணத்தைத் தொடர்ந்தாராம். இவர் மனிதர்களிடம் அன்பாக இருந்ததில் ஆச்சர்யப்பட ஏதுமில்லை. -> ஏழை எளியவர்களிடம் பழகியதைப் போலவே அவரால் அதிகாரிகளிடமும் பழக முடிந்திருக்கின்றது. அதனாலேயே வலு குறைந்தவர்களுக்குத் தேவையானதைப் பெற்றுத் தர முடிந்திருக்கிறது. -> சட்ட மன்ற உறுப்பினர் திரு அப்துல் வஹாப் தன் பேச்சில் குறிப்பிட்டது போல பாழடைந்து பல சமூக குற்றங்கள் நடக்கச் சாதகமான இடமாக இருந்த மேடைப் போலீஸ் ஸ்டேஷனை , பல அரசு அதிகாரிகளையும் அரசியல் தலைவர்களையும் அழைத்துச் சென்று காட்டி இன்று அழகு மிகுந்த ஒரு இடமாக மாற்றியதில் பெரும் பங்கு நாறும்பூநாதன் சாருடையது. -> இயக்குநர் சுகா அவர்கள் கண்ணீரை தடுக்க முடியாமல் பேசிய போது நம்மாலும் கண்ணீருக்குத் தடை போட முடியவில்லை. அவர் உதவி செய்த சிலருடைய பெயர்களை குறிப்பிடுகின்றோம் ஆனால் பிறருக்குத் தெரியாமல் பலருக்கு உதவி செய்து இருக்கிறார். -> ஓவியர் பொன் வள்ளி நாயகத்துக்கு மிகுந்த ஆதரவாக இருந்து நெல்லையில் சாகித்திய அகடமி விருது பெற்றவர்களின் புகைப்படங்களை வரைந்து நெல்லை புத்தக கண் காட்சியில் வைத்தது முதல் சென்னை அண்ணா நூலகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட ஓவியங்களை வரைந்து வைப்பது வரை பெரும் உறுதுணையாக இருந்திருக்கிறார் நாறும்பூநாதன். நம் முயற்சியில் நாம் முன்னேறுவதைப் பார்த்தே பொறாமைப்படுபவர்களின் ்மத்தியில் பலருடைய திறமைகளை கண்டறிந்து அவர்கள் வெளியுலகத்துக்குத் தெரிய பெரும் முயற்சி எடுத்திருக்கிறார். அரசு அதிகாரி ரேவதி அவர்கள் பேசும் போது தனக்கு அவர் தந்த ஊக்கத்தால் தான் இரண்டு புத்தகங்கள் வெளியிட்டதாக குறிப்பிட்டார். அவர் பேச்சில் சொன்ன இன்னொரு முக்கியமான விஷயம் நம் அனைவருக்கும் பயன் படக் கூடியது. " யாரையாவது சந்திக்க வேண்டும் என நினைத்தால் உடனே சந்தித்து விடுங்கள். யாரிடமாவது பேச வேண்டும் என்று தோன்றினால் உடனே பேசி விடுங்கள். ஏனென்றால் தள்ளிப் போடுவதால் தவற விட நேரிடும். நாளை அவர் இல்லாமல் போய் விடலாம் என்றார்.உண்மை. தொகுத்துச் சொன்னால் நாறும்பூநாதன் தன்னை அறுத்து ஒறுத்து அடுத்தவருக்கு உதவி இருக்கிறார். தன்னை முன்னிலைப்படுத்தாமல் அடுத்தவர் உயர உதவி இருக்கிறார். இறந்து போன பலரையும் உயிரோடு வைத்தவர் என்று பேசினார்கள். ஆம் மறந்து போயிருக்கக் கூடிய பலரைப் பற்றிய தகவல்களைத் தேடிச் சேர்த்து ஆவணப்படுத்தி இருக்கிறார். சிறந்த கம்யூனிஸ்ட் என்பவர் முதலில் சிறந்த மனிதராக இருக்க வேண்டும். அந்த வகையில் தோழர் நாறும்பூநாதன் ஒரு மிகச் சிறந்த கம்யூனிஸ்ட். அவர் தெய்வத்தை நம்பாதவராக இருந்திருக்கலாம் ஆனால் தெய்வ குணம் நிறைந்தவராக இருந்திருக்கிறார். போற்றுவோம். பின் தொடர்வோம்.

09 April, 2025

"வார்த்தை" என்பது மிகவும் சக்தி வாய்ந்தது. பைபிளில் " வார்த்தை மனுவானார். நம்மிடையே குடி கொண்டார்" என்று வருகிறது. மற்ற மதங்களிலும் மந்திரங்கள் என்பது திருப்பித் திருப்பி சொல்லப்பட்ட வார்த்தைகளால் வலு பெற்றது. நல்லவற்றையே பேச வேண்டும். ஏதோ தீய ஒன்றைச் சொல்லும் போது வானிலுள்ள தேவதைகள் "ததாஸ்து" என்று சொல்லி விட்டால் "அப்படியே ஆகட்டும் என்ற அவற்றின் ஆசீர்வாதத்தால் தீயவை நிகழ்ந்து விடும் என்று நம் முன்னோர்கள் சொல்லக் கேட்டிருக்கிறோம். வார்த்தை என்பது அவ்வளவு சக்தி வாய்ந்தது. ஆனால் பலர் அதை அறியாமல் மோசமான வார்த்தைகளை உச்சரிப்பதை நாகரீகமாக எண்ணி , திரைப்படங்களிலும், பாடல்களிலும், சோஷியல் மீடியாக்களில் கமென்ட்டுகளிலும் பயன்படுத்துகிறார்கள். இந்த அவசர உலகில் வார்த்தைகள் கூட சுருங்கி ஸ்மைலிகளாகி விட்டன. ஒரு முழு வார்த்தையை ஒரு எழுத்து உணர்த்தி விடுகிறது. "K" என்று மட்டும் சொல்வது நாம் ஒரு விஷயத்துக்கு உடன்படுவதாக எடுத்துக் கொள்ளப்படும். ஒரு விஷயத்தை நாம் சொல்லும் விதமே அதை எதிரிலிருப்பவர் ஏற்றுக் கொள்ளவும் மறுக்கவும் காரணமாகி விடும். வார்த்தைக்குச் சமமாய் அதைச் சொல்லும் தொனியும் முக்கியம் வாய்ந்தது. முக்கியமாக அலை பேசியில் பேசும் போது நம் தொனியில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். இன்று திருமணத்துக்கும் நிச்சயத்துக்கும் இடையே மண மக்கள் அதிகம் பேசிக் கொள்வதாலேயே பல விஷயங்கள் புரிந்து இருவருக்குமிடையே திருமணம் ஒத்து வராது என்று தெரிந்து திருமணங்கள் நிறுத்தப் படுகின்றன. விவாகரத்துக்கு அது பரவாயில்லை தான். அதிகம் பேசாதவர்கள் நல்லவர்கள் என்ற கருத்து நம்மிடையே இருக்கிறது. அவர்கள் நினைப்பதை நாம் தெரிந்து கொள்ள முடியாமல் போகும். அதனால் எனது விருப்பம் பேசா மடந்தைகளைக் காட்டிலும் லொட லொடப்பவர்களே.