28 April, 2025
நாம சின்ன பிள்ளைகளா இருக்கிறப்போ நிறைய கதை கேட்டிருப்போம். எனக்கு குமார்னு ஒரு அண்ணன் உண்டு. பெரியப்பா பையன். திருச்சி. வங்கிப்பணி். கொரோனா பாதிப்பால் இரண்டாம் அலையில் இறந்து போனாங்க. எனக்கு சின்ன வயசுல அவங்களைப் பார்த்ததை நினைச்சால் பாண்ட் ஷர்ட் வெள்ளையில் போட்டு இடையில் கருப்பு பெல்ட்டுடன் அழகான தோற்றம் தான் ஞாபகம் வரும். வாசற் படியில் உட்கார்ந்து , சவுண்ட் எஃபெக்ட்டோட அவங்க சொன்ன கதைகள் அவ்வளவு இனிக்குது இப்போ நினைச்சா?
இப்போ குழந்தைகளுக்கு கதை சொல்ல யாருக்கு ஆர்வம் இருக்குது. ஆனால் அந்த கதைகள் அவர்கள் வாழ்க்கையை எவ்வளவு செம்மைப் படுத்தும் . அதனால் அந்த பணியை நாங்கள் ஒரு சிலர் கையில் எடுத்திருக்கிறோம். தமிழ்நாடு அளவில் பல மாவட்டங்களிலும் நடக்கிறது. மறுபடியும் வீடியோ எடுத்தால் குழந்தைகளின் கண்ணுக்கு சிரமம் அளிக்கும் என்பதால் ஆடியோவில் கதை சொல்லி பதிந்து வாட்ஸ் அப் குழுவில் அனுப்புவோம். இதில் சேரச் சொல்லி என் அன்புத் தம்பி அருண் எனக்கு அழைப்பு விடுத்த போது இது இவ்வளவு சந்தோஷம் தரும் அனுபவமாக இருக்கும் எனத் தெரியாது. நம் நேரத்தைப் பயன்படுத்த கூடுதலாய் ஒரு வழி என்று நினைத்துத் தான் சரி என்று சொன்னேன்.
இது தொடங்கி மூன்று வருடங்கள் ஆகின்றன. சமீபத்தில் தான் நெல்லைக் கிளை புத்துணர்வுடன் இயங்கத் தொடங்கி இருக்கிறது. தம்பிகள் தேவர்பிரான், அருண் பாரதி, சேது பாலா, தங்கை ப்ரியதர்ஷினி நெல்லையில் முக்கிய பொறுப்பு எடுத்து நடத்துகிறார்கள்.
இந்த ஆண்டு மாநில மாநாடு நெல்லையில் நேற்று நடந்தது. "சிறார் எழுத்தாளர், கலைஞர்கள் மாநில மாநாடு" இந்த கலைஞர்களில் கதை சொல்லிகள், குழந்தை புத்தகங்களுக்கு படம் வரைபவர்கள் எனப் பலர் இருக்கின்றனர்.
சமீபத்தில் நெல்லையில் வன்முறை பள்ளி மாணவர் அளவில் புகுந்து விட்ட நிலையில் இது அவசியத் தேவையாகிறது. குழந்தைகள் அளவிலேயே வாழ்வை நேர்ப்படுத்தி விட்டோம் என்றால் இளைஞர்கள் ஆன பின் கவலைப்பட வேண்டியதில்லை.
இதை வாசிக்கும் உங்களில் யாருக்காவது உங்கள் குழந்தைகளையோ பேரப் பிள்ளைகளையோ (எந்த மாவட்டம் ஆனாலும் சரி) சேர்த்து விட நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள். இரவு படுக்கப் போகும் முன் செல்லிலிருந்து கண்களுக்கு விடுதலை கொடுத்து செவிகளுக்கு வேலை கொடுக்கலாம். நிகழ்வை பகுதி பகுதியாக பகிர்கிறேன்.
(தொடரும்)
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!