20 April, 2025
என்னைப் போலவே நட்பைத் தேடுபவர் ஒருவர் சமீபத்தில் எனக்கு அறிமுகமானார். பெயர் விஜயலக்ஷ்மி. "கரிசல்" என்றொரு வாட்ஸ்அப் குரூப்பில் நானிருக்கிறேன். அதில் அட்மின் வாரம் ஒரு கதை சொல்ல நாங்கள் எல்லாம் கதை பற்றிய எங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்வோம். அதில் நான் வேடிக்கையாக " நானும் கணக்கு டீச்சர் தான்" என்று ஒரு கமென்ட் போட்டேன். ஆம் நான் B.Sc B.Ed கணிதம் படித்ததை இப்படித் தானே நினைவு படுத்திக் கொள்ள முடியும்.
மதுரையிலிருந்து ஒரு நாள் ஒரு தோழி அழைத்தார். அவர் 70+ வயதுடையவர். என் எண்ணை கரிசல் குழுவிலிருந்து எடுத்து அழைத்தார். எனக்கு அறிமுகம் இல்லாதவர். " என்னோட கணிதம் படித்த ஒரு மாணவியை நாங்கள் தேடிக் கொண்டு இருக்கிறோம். உங்க நெல்லை அருகில் உள்ள பணகுடியில் தான் கணித டீச்சராகப் பணி புரிந்தார். நீங்களும் கணித டீச்சர் என்று போட்டு இருந்ததால் அழைத்தேன். நீங்கள் முயற்சி பண்ண முடியுமா? ' எனக் கேட்டார்.
நானும் பல வகைகளில் தேடினேன். கண்டு பிடிக்க முடியவில்லை. இதற்கு நடுவில் அந்த தோழி பள்ளி ஆட்டோகிராஃபிலிருந்து அவர்களின் முகவரியைத் தேடி ஒரு கடிதம் அனுப்பி இருக்கிறார். " நம் பள்ளி மாணவிகள் சந்திக்க இருக்கிறோம். உன்னிடம் தொடர்பு கொள்ள முடியவில்லை. இந்த கடிதம் கண்டதும் கவரில் உள்ள என் அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளவும்" என எழுதி அனுப்பி இருக்கிறார்.
தேவ நேசம் என்ற பெண் பெயரை தேவ நேசன் என்ற ஆணாக நினைத்து தேடிய பணகுடி போஸ்ட் உமன் அதை அலட்சியப்படுத்தாமல் தேடியவர்களை அலைபேசியில் அழைத்து " இந்த முகவரியில் இப்படி ஒரு ஆண் இல்லை" என்னும் போது தான் பெண் ஆணாக மாறிய தவறு புரிந்திருக்கிறது. " எனக்கு 72 வயது. என்னுடன் படித்த தோழியைத் தான் தேடிக் கொண்டிருக்கிறேன். அவர் தேவ நேசன் அல்ல தேவ நேசம்" என்றதும். அந்த பெண் விசாரிக்கிறேன் என்றிருக்கிறார்.
அரசு ஊழியர்கள் சரியாக வேலை பார்ப்பதில்லை என்று ஒரு கருத்து பொதுவாக நிலவுகிறது.
ஆனால் இந்த போஸ்ட் உமன் விசாரித்து அந்த பெண் ஓய்வுக்குப் பிறகு ஊர் மாறிச் சென்று விட்டதாகவும், ஆனால் அவர்களுடைய பெரியப்பா வீடு பக்கத்தில் இருப்பதாக விசாரித்து அறிந்து, அவர்களிடம் இந்த கடிதத்தைக் கொண்டு கொடுத்து அந்தத் தோழிகள் பேசிக் கொண்டார்கள்.
வேலை இல்லாமல் நான் என் பழைய தோழிகளைத் தேடிக் கண்டுபிடித்து தொடர்பு கொள்வதாக ஒரு எண்ணம் என் வீட்டில் இருக்கும் போது என்னைப் போலவே ஒருவர், என்னை விட வயதில் பெரியவர் , நோயினால் அதிகம் நகர முடியாமல் படுக்கையில் இருப்பவர் , விடா முயற்சியோடு தேடி ஒரு தோழியைக் கண்டு பிடித்து விட்டது ஒரு ஆச்சர்யம்.
கடிதம் எழுதும் மரபு மறைந்து வரும் இக்காலத்தில் ஒரு சாதாரணத் தபாலை "இந்த முகவரியில் சம்பந்தப்பட்டவர் இல்லை" எனத் தூக்கிப் போட்டு விடாமல் அழைத்துப் பேசி சம்பந்தப்பட்டவரின் உறவினர் மூலம் கண்டு பிடித்து கடிதத்தைச் சேர்த்தவர் ஒரு அரசு ஊழியர். இது இரண்டாவது ஆச்சர்யம்.
இவர்கள் ஒரு புறம் தேட , கல்வி அதிகாரி ஒருவர் இன்னொரு புறம் தேட எப்படியோ தோழர்கள் இணைந்து விட்டார்கள்.
ஒரு திரைப்படத்தில் சிவாஜியும், கே ஆர் விஜயாவும் பல ஆண்டுகள் பிரிவுக்குப் பின் தொலைபேசியில் பேசியதை உணர்வு பூர்வமாகப் பார்த்து கண்ணீர் விட்ட தலைமுறையைச் சேர்ந்தவர்கள் நாங்கள். பழைய உறவுகள் கிடைத்த சந்தோஷத்தை இளைய தலைமுறையால் புரிந்து கொள்ள முடியுமா? சந்தேகம் தான்.
நான் அவர்களிடம் நானும் என் தோழியைத் தேடிக் கொண்டு இருக்கிறேன் என்று சொன்னதும் அவள் சம்பந்தப்பட்ட ஒரு தகவலையும் விசாரித்துச் சொன்னார்கள்.
தரும்புரியில் கல்வித் துறையில் அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்றதாகச் சொல்லும் என் தோழி செந்தமிழ் செல்வியையும் , ஒரு வருடமே ஆனாலும் என்னோடு B.Ed படித்து பின் தகவலே தெரியாமல் போன தோழி சுசிலாவையும் யாராவது கண்டு பிடித்து தாங்களேன்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!