21 April, 2025
புத்தகத்தின் பெயர்: கா நா சு நாவல்கள் .
மீடியா மாஸ்டர்ஸ் மூலம் வெளியீடு விலை 150 ரூபாய்
முதல் பதிப்பு 2011
காநா சு படைப்புலகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய படைப்பாளி. குறைந்த அளவிலேயே எழுதினாலும் அவை தவிர்க்க முடியாதவை. தன் முன்னுரையில் நூறு பக்கங்களில் எழுத முடியாதவற்றை ஐந்நூறு பக்கங்களில் எழுத முடியாது என்கிறார்.
நான்கு குறுநாவல்களின் தொகுப்பு. முதல் நாவல் "பெரிய மனிதன்" இதில் வருபவன் உலகம் தன்னை வெற்றி பெற்றவனாக நினைத்தாலும் தான் தோல்வியுற்றதாகவே எண்ணுகிறான். " தன் கதையை கருப்பு மசியில் நல்ல காகிதத்தில் தங்கக் குல்லா அணிந்த பேனாவினால் எழுத உட்கார்ந்ததாகச்" சொல்கிறார். தன்னைப் பற்றிய உண்மை தனக்கே கசந்தாலும் தன் வாழ்க்கையை சொல்லத் தொடங்குகிறார்.
வாழ்க்கையில் வெற்றி என்பது அவரவர் மனதுக்கு தக்கபடி வியாக்கியானம் செய்து கொள்ளலாம் என்கிறார் ஓட்டை காரில் பயணித்தாலும் நடந்து செல்பவனை விட அவன் வெற்றி பெற்றவன் தானே.
தன்னைவிட வயதில் மூத்த , ஒரு குழந்தையுடன் இருக்கும் விதவைப் பெண்ணை இளவயதில் மணந்து கொள்கிறார் . மந்தையில் ஆடாக இருப்பது சுலபம் என்று பலர் நினைத்துக் கொள்கின்றனர். ஆனால் தன் தனித்தன்மையை நிரூபித்துக் கொள்ள எந்த திருமணம் செய்தோமோ அதனாலேயே தன் வாழ்க்கையை தானே பாழ் செய்து கொண்டோமோ என பின்னாளில் வருந்துகிறார் அந்த பெரிய மனிதர்.
ஆனால் மீனாட்சி தன் சூட்சும புத்தியால் அவரே அறியாத மனோபாவத்தை, அவர் தன்னை காதலித்து மணக்கவில்லை என்பதை கண்டுபிடித்து விடுகிறாள். உலகத்தில் உள்ள பணத்துக்கு எல்லாம் ஈடானது காலத்தின் ஒரு துளி . இதைச் சரிவர புரிந்து கொண்டால் வாழ்வில் வெற்றி பெறலாம்.
வேண்டாதோர் அதிகரிக்க அதிகரிக்க ஊரில் ஒரு மனிதனின் பெரிய மனிதத் தன்மை வளரத் தொடங்கி விடுகிறது என்கிறார். Vice Versa என்றொரு வார்த்தை பிரயோகம் உண்டு. இதனால் அது. அதனால் இது . அப்படித்தான் எனக்குத் தோன்றுகிறது. பெரிய மனிதத் தன்மை அதிகரிக்க வேண்டாதோரும் அதிகரிப்பர். வேண்டாதவர் அதிகரிக்க பெரிய மனிதத் தன்மை அதிகரிக்கும்.
அனுபவத்தால் வரும் வார்த்தைகள் அங்கங்கே அழகாக வந்து விழுகின்றன. " தண்டனையிலிருந்து தப்பி விட்டவன் குற்றத்தின் சுமையை இரண்டு மடங்காக அனுபவிக்கிறான் என்று தான் தோன்றுகிறது "
"வாழ்ந்தவர் கெட்டார்" என்ற இரண்டாவது நாவலில் மனிதனின் சராசரி மனநிலையை மண்டையில் தட்டியது போல் சொல்லி இருப்பார். "சாளரத்தின் வழியாக தர்மப் பத்தினிகள் தங்கள் நாயகர்களைத் தான் பார்த்தார்களோ அல்லது ஆசை கண்களோடு கள்ளக்காதலர்களைத் தான் பார்த்தார்களோ. தம் சொந்த நாயகர்களைத் தான் பார்த்தார்கள் என்று நினைத்துக் கொள்வோமே அதில் நமக்கென்ன நஷ்டம்" என்கிறார்.
ஆனால் பெரும்பாலும் மனிதர்கள் அடுத்தவரை தவறு இழைப்பவர்களாக நினைத்துப் பார்த்துத் தானே திருப்திப்பட்டுக் கொள்கிறார்கள் .
கதையில் மம்மேலியார்கள் என்ற ஒரு குறிப்பிட்ட இனத்தைப் பற்றிச் சொல்கிறார். ஆடம்பரமாக பெரிய மனிதர்கள் மாதிரி வாழப் பழகிய பின் வறுமையில் மாட்டியும் அந்த பழக்கத்தை விட முடியாதவர்கள். ஏதோ ஒருவர் இருவர் இதிலிருந்து தப்பிக்கலாம். ஆனால் அவர்களும் ஏதோ குற்றம் செய்தவர் போல் பதுங்கி இரவில் வாழ்வார்கள்.
ஒரு காட்சியில் ரகு, ரகுவின் தோழன் மம்மேலியார். மம்மேலியார் தனது அன்றைய குடித் தேவைக்கு தன்னை எதிர் பார்க்கிறார் என்று தெரிந்தே உடன் சென்று வாங்கிக் கொடுக்கும் ரகுவின் தோழன். தன் தந்தை சேர்த்து வைத்த சொத்தை முழுவதும் அழித்து பழம் பெருமை பேசித் திரியும் மம்மேலியார். தனக்கு மம்மேலியார் மேல் உள்ள கோபத்தில் " நீ வாழவே தகுதியற்றவன்" என்ற சொற்களை உதிர்க்கும் ரகு. அந்த நேரத்தில் அங்கு வந்த ரயிலின் முன் குதித்து உயிர் துறக்கிறார் மம்மேலியார். அவருடைய சாவுக்கு யார் காரணம்.
பொறுப்பற்ற வாழ்க்கை வாழ்ந்த மம்மேலியாரா? கெடுதல் என்று தெரிந்தே அவரை அளவுக்கு அதிகமாக குடிக்க அனுமதித்த ரகுவின் தோழனா? கடுமையான வார்த்தைகளை உதிர்த்த ரகுவா? நிகழ்வு நடந்த இடமா? சாவின் நேரம் வரும்போது எல்லாம் கூடி வரும்.
" ஆட்கொல்லி" என்றொரு குறு நாவல். பணக்காரரிடம் பணம் சேருகிறது. ஏழைகளிடம் படிப்படியாக பணம் குறைகிறது. ஆனால் இந்த ஏழைமை மனிதனாக ஏற்படுத்திக் கொண்டதுதான். கிட்ட நெருங்கினால் ஒட்டிக்கொள்ளும் என்பது போல் பயப்படுகிறான்.
கதை சொல்லி தன் மாமா ஆசிரியராக இருந்த பள்ளியிலேயே படித்தாலும் எந்த பாடமும் மாமாவிடம் படித்ததில்லை. தனக்கு எந்த விஷயத்தில் சந்தேகம் வந்தாலும் மாமாவுக்கும் அதே இடத்தில் சந்தேகம் வந்துவிடும் என்கிறார். ஆசிரியர் மாமா எத்தகைய ஆசிரியர் என்பது தெள்ளத் தெளிவாகி விடுகிறது.
" பணத்தாசை இல்லாமல் கடவுள் பக்தி மட்டும் உடையவர்கள் பரம ஏழைகளாக இருப்பதை பார்க்கிறோம்" என்கிறார். உண்மைதானா என்ற கேள்வி எழும்புகிறது. பரம ஏழை எப்படி பணத்தாசை இல்லாமல் இருக்க முடியும்.
வெங்கடாசலம் என்ற கதை நாயகனின் மாமா , மாமியின் குணாதிசயங்களை அலசுவதிலேயே பெரும் கதைப் பகுதி போவதால் எனக்கு இந்தக் கதை அவ்வளவு ரசிக்கவில்லை.
" நளினி" என்பது நான்காவது கதை. நாயகன் சீதாராமன் தன் குடும்பம் உயர எவ்வளவு உதவும் என்றாலும் தன்னைவிட புத்திசாலியான பெண்ணை மணக்க விரும்பவில்லை என்கிறான். காலமாற்றத்தால் நல்ல முயற்சி. தன்னைவிட புத்திசாலி பெண்ணை மணக்க ஆண் தற்போது தயாராக இருக்கிறான். ஆனால் தன்னிடம் மட்டும் முட்டாளாக நடந்து கொள்ள வேண்டும் என்று விரும்புகிறான். நாயகி நளினியை ' எவ்வளவு சாமர்த்தியசாலி ஆனாலும் ஒரு அயோக்கியனுடன் வாழ தான் விரும்பவில்லை " என்ற தீர்க்கமான ஒரு முடிவு எடுக்க வைத்திருக்கிறார் ஆசிரியர். இதனாலேயே இத்தகைய எழுத்தாளர்கள் காலம் கடந்தும் நிற்கிறார்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!