Bio Data !!

23 May, 2011

அவரை விதை அரக்கர்கள் !!

ரொம்ப நாள் ஆச்சு உடல் உறுப்புகளிடம் நாம் பேசி, நம்மிடம் அவை பேசி,

சிறு நீரகம் சம்பந்தமான நோய்கள் பற்றிய சிந்தனை மனதில் எழும் போதெல்லாம் எழுத நினைப்பேன், தட்டிப் போகும். இன்று உச்ச நடிகரின் சுகவீனம் பலருக்கு இறைவன் பற்றிய நம்பிக்கையை உயர்த்தி உள்ள நேரம் சிறு நீரகம் பற்றி நாம் தெரிந்து கொள்ள சரியான நேரம். 

 நான் சிறு நீரகத்திடம் கேட்ட சில கேள்விகளும் அது தந்த பதில்களும் கீழே உங்கள் பார்வைக்கு:

1) எங்களின் உங்களை பார்க்கத்தான் முடியல நீங்களே சொல்லுங்க நீங்க எப்படி இருப்பீங்க? 
                                    நாங்கள் இரட்டையர்கள், உங்கள் முஷ்டியின் அளவு தான் எங்கள் முழு அளவும். நிறம் கருஞ் சிவப்பு, உருவம் அவரை விதை வடிவில், சிறுநீர் என்ற கவர்ச்சியற்ற திரவத்தை உருவாக்குவதால் சுய கவர்ச்சி இழந்த ஒரு உறுப்பு. 

2 ) உங்கள் பணி பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன்?
                                      ஒரு சுத்திகரிப்பு ஆலையின் நேர்த்தியோடு எங்களுள் தொடர்ந்து பாயும் இரத்தத்தை சுத்தம் செய்து, கசடுகளை வடிகட்டி அனுப்புகிறோம். உடலின் நீரின் அளவை கட்டுப்பாட்டுக்குள் வைக்கிறோம். அதிகப்படியான பொட்டாசியம், விட்டமின்கள், அமினோ ஆசிட், க்ளுகோஸ் போன்றவற்றை பிரித்து சிறு நீரின் வழியாக வெளியேற்றுகிறோம். அவற்றின் அளவு குறையும் போது ஒரு கஞ்சனின் கருமித்தனத்தோடு இருப்பதை பத்திரமாக சேமிக்கிறோம்.

3 ) உங்கள் பணியில் நீங்கள் சந்தித்த சவால்களைப் பற்றி கூறுங்களேன்.
                                       நீங்கள் உண்ணும் உணவில் ப்ரோட்டீன்களில் ஜீரணமானது போக மிச்சமான யூரியா தான் எங்களுக்கு மிகப் பெரிய சவாலான கழிவு. அதை வெளியேற்றச் செய்யும் முயற்சியிலேயே தான் நாங்கள் தளர்ந்து போகிறோம், 

4 ) எங்கள் கோபம் உங்களைப் பாதிக்கிறதா?
                                        ஆமாம்க ஆமாம், உங்கள் அதிகப் படியான கோபம் இரத்த அழுத்தத்தை அதிகரிக்கிறது. இதனால் உடலின் பல பாகங்களுக்கு அதிக இரத்தம் பாய்கிறது, அப்படியே எங்களுக்கும். அதிக இரத்தம் பாய்வதால் அதிக சிறுநீர் பிரிக்கப்படுகிறது. அதிகப் பணி அழுத்தத்தால் மேலும் தளர்ந்து போகிறோம். 

5 ) நீங்கள் சந்தித்த வேறு ஏதாவது சிக்கல்கள் பற்றிச் சொல்லுங்களேன்.
                                             முன்ன மாதிரி இல்லாம இப்போ அதிகம் தண்ணீரே குடிக்கிறதில்லை. ஒன்று சுகாதாரமான தண்ணீர் கிடைப்பதில்லை, மற்றொன்று குளிர் சாதன வசதி செய்யப்பட்ட அறையில் அநேகம் பேர் பணி புரிவதால் அவர்களுக்கு தாகமே எடுப்பதில்லை. தாகம் நமது உடலின் நீர்த் தேவையை நமக்கு உணர்த்தும் ஒரு கருவி. அதை இன்று நாம் காயடித்து வைத்திருக்கிறோம். குடிக்கும் நீரின் அளவு குறையும் போது சிறு நீரின் அமிலத் தன்மை அதிகரிக்கிறது. அதனால் அது வெளியேறும் போது எரிச்சலை தருகிறது. 
                                                  மேலும் கல் அடைப்பு ஏற்பட ஏதுவாகிறது. சிறிய அளவில் சிறுநீரில் கற்கள் இருந்தால் நீங்கள் அறியாமலே வெளியேறி விடும். அதுவே கொஞ்சம் பெரிசா பட்டாணி அளவில் இருந்தால் வெளியேறும் போது அதிக வலியைத் தரும். ஒரு கட்டத்தில் திராட்சை பழத்தின் அளவிற்கு வளர்ந்து விட்டால் அதை நீக்க அறுவை சிகிச்சையே தேவைப்படும். 

6) எங்களுக்கு குறிப்பாக எதுவும் சொல்ல விரும்புகிறீர்களா?
                                                   நாங்கள் இருவராய் இருப்பதால் முடிந்தவரை ஒருவர் பணி செய்ய முடியாமல் போனாலும் மற்றவர் அதை சேர்த்துக் கட்டி இழுத்து செல்கிறோம். அதனால் உங்களுக்கு எங்கள் சோர்வு தெரியாமலே போகிறது. வயதாகும் போது எங்களுக்கு வரும் இரத்தத்தின் அளவு குறைவதாலும் எங்கள் செயல் திறன் குறைந்து விடுகிறது. அப்பொழுது கூட உங்கள் கவனத்தை ஈர்க்குமளவுக்கு நாங்கள் தொல்லை தருவதில்லை, அதனாலேயே நாங்கள் கவனிக்கப்படாமல் போய் விடுகிறோம், ஒரு கட்டத்தில் எங்களால் எதுவுமே செய்ய முடியாமல் போய் எங்கள் ஆலையின் இரு பகுதிகளையும் இழுத்து மூடி விடுகிறோம். உங்களை அவசர ,ஆபத்தான நிலைக்கு கொண்டு நிறுத்தி விடுகிறோம். 
                                                      அதனால் உங்கள் உடல் நலனில் அக்கறையோடு இருங்கள், வயதாகும் போது உணவு முறையை மாற்றிக் கொள்ளுங்கள். இளைஞர்கள் தானே என்று உங்கள் முழு நேரத்தையும் சூரியக் கூரையின் அடியிலேயே கழிக்காமல் அவசியம் ஏற்பட்டால் மட்டும் வெளியே வாருங்கள். சுய மருத்துவம் பார்த்துக் கொள்ளாதீர்கள் ஒத்துழையாமை செய்து விட்ட அரக்கர்கள் என்று எங்களை பழிக்காமல் அரவணைப்போடு கவனித்துக் கொள்ளுங்கள்.
                                                    நன்றி ! வணக்கம் !

     
ஆர்வமுள்ளவர்கள் உடன் பிறவா சகோதரிகளை பற்றியும் பார்க்கவும் 
http://venthayirmanasu.blogspot.com/2010_04_01_archive.html

11 comments:

  1. குறிப்புகளை, பேட்டி சாயலில் கொடுத்து இருப்பது - புதுமை.

    ReplyDelete
  2. June 17th பதிவர்கள் சந்திப்புக்கு, நெல்லையில் ஏற்பாடுகள் நடந்து கொண்டு இருக்கின்றன. இன்னும் இரண்டு நாட்களில் என் ப்லாக்ல பதிவாக விவரங்கள் போடுகிறேன்.

    ReplyDelete
  3. ஒரு கடினமான , கவர்ச்சியற்ற ஒரு விஷயத்தை செம இன்டரஸ்டிங்கா சொல்லி இருக்கீங்க...

    இது போல தொடர் கட்டுரைகள் எழுதுங்க ......

    ReplyDelete
  4. //ஒத்துழையாமை செய்து விட்ட அரக்கர்கள் என்று எங்களை பழிக்காமல் அரவணைப்போடு கவனித்துக் கொள்ளுங்கள்.//

    ந‌ல்ல‌ விள‌க்க‌ம்... :)

    இதேப்போல் பிற‌ உறுப்புக‌ளை ப‌ற்றியும் அடிக்க‌டி போடுங்க‌ள்

    ReplyDelete
  5. அவரைவிதை தேவர்களை நாம்தான்
    அசுரர்கள் ஆக்கிவிடுகிறோம்
    அவதியும் படிகிறோம்
    ஆறாவது கேள்வியும் பதிலும்
    முத்துமாலைக்குள் வைரம்போல
    பயனுள்ள தரமான பதிவு
    தொடர வாழ்துக்கள்

    ReplyDelete
  6. நன்றி சித்ரா, நெல்லையில் பதிவர் சந்திப்பு சிறப்பான ஒன்று

    ReplyDelete
  7. நன்றி பார்வையாளன், ஏனோ இதை எழுதும் போது பார்வையாளனின் பின்னூட்டம் என்னவாக இருக்கும் என்று தோன்றியது

    ReplyDelete
  8. நன்றி நாடோடி, கண்டிப்பாக எழுதுகிறேன், நம் உடலின் ஒவ்வொரு உறுப்பும் ஒரு அதிசயம் தான்

    ReplyDelete
  9. பின்னூட்டமே கவிதையாய், கவிதையே பின்னூட்டமாய் நன்றி ரமணி sir

    ReplyDelete
  10. நெல்லை பதிவர் சந்திப்பு அழைப்பிதழ் அனுப்ப, தங்கள் மெயில் ஐ.டி., unavuulagam@gmail.com க்கு அனுப்பிட வேண்டுகிறேன்.

    ReplyDelete
  11. அனுப்பிட்டேன், சந்திக்க ஆவலாக உள்ளேன்.

    ReplyDelete

தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!