13 July, 2026
# செலவும் சிக்கனமும்.
செலவையும் சிக்கனத்தையும் சரியான விகிதத்தில் கொண்டு செல்வது என்பது கயிற்றின் மேல் நடப்பதைப் போல சாகசம் நிறைந்தது.
கையில் கிடைத்ததை எல்லாம் செலவழித்து சந்தோஷமாக இருப்பதாக காட்டிக் கொள்வது ஒரு வகை. அது ஒரு நாள் வெளுத்து விடும். அது நமக்கு வேண்டாம்.
சிக்கனமாய் இருக்கிறேன் பேர்வழி என்று விளக்கணைத்ததும் உடை கழற்றி வைக்கும் சுருளிராசன் தத்துவமும் கதைக்குதவாது.
அப்போ எப்படி வாழணும்.
அதுவும் இன்று காய்கறி விற்கும் விலையில் நாம் அதிகம் வீணாக்கும், நாளை உதவும் என்று fridge இல் வைத்து குப்பைக்கு போவதை குறைப்பதே பெரிய சிக்கனம். மதியம் மிஞ்சும் காய்கறியை இரவு உணவில் ஆளுக்கு கொஞ்சம் எடுத்துக் கொண்டாலே fridge க்கு போகாது. இரவு செலவழியாது என்று தோன்றினால் மாலையே வீட்டு வேலைக்கு உதவியாய் வருபவர்களிடம் கொடுத்து விடலாம். யாரோ ஒருவருக்கு உதவி விடும்.
EB bill எத்தனை ஆயிரம் வந்தாலும் கட்டுவதற்கு நமக்கு திராணி இருக்கலாம். ஆனால் அதற்காக கரண்ட்டையோ தண்ணீரையோ வீணாக்குவது நாம் நாட்டுக்கு செய்யும் துரோகம். ஆளுக்கு ஒரு அறையில் இருந்து கொள்ளலாம் அதற்குரிய வசதி இன்று நமக்கு இருக்கிறது. ஆனால் ஆளே இல்லாத அறையிலும் லைட் டும் காற்றாடியும் இயங்குவது கண்டிப்பாக தவிர்க்க வேண்டியது. சின்ன பிள்ளைகள் அணைக்காமல் சென்றால் நாம் அணைக்க கூடாது. அவர்களை அழைத்து அணைக்க வைக்க வேண்டும். அப்பொழுது தான் அவர்கள் அந்த நல்ல பழக்கத்தை பழகுவார்கள்.
ஒருவருக்காக ஒரு காரில் செல்வது ஆடம்பரம் என்கிறார்கள். ஆனால் அது சில சமயங்களில் தவிர்க்க முடியாதது. ஆனால் நான் ஒரு பழக்கத்தை வைத்திருக்கிறேன். கூடிய வரையில் நான் செல்லும் வழியில் தெரிந்தவர்கள் பஸ்சுக்கு நின்றால் நான் அழைத்து செல்வேன். சில நேரங்களில் நான் செல்ல வேண்டிய பாதை தவிர்த்து அவர்களுக்காக மாற்று வழியிலும் செல்வதுண்டு. முக்கியமான என் வயதுடையவர்களைக் கண்டால் கண்டிப்பாக உதவுவேன்.
இன்னும் யோசித்தால் பல வழிகளில் சிக்கன நடவடிக்கை தொடங்கலாம். நம்மிடம் தான் இருக்கிறதே என்று அலட்சியமாக இருந்தால் பணம் ஒரு நொடியில் நம்மை தலை குப்புற தள்ளி விடும்.
சிக்கனமாய் இல்லாமல் செலவழிப்பது எவ்வளவு தவறோ அதே அளவு செலவழிக்காமல் சேர்த்துக் கொண்டே இருப்பதும் தவறு.
இரண்டுக்கும் நடுவில் சரியாக பாலன்ஸ் செய்து வாழ்க்கையை வளமோடு வாழ்வோம்
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment
தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!