13 July, 2026
நாவல்: காதல் அசுரன் கிளைவ் ஆசிரியர் எம் எம் தீன்
படைப்பு பதிப்பகம்.
விலை. : 500 ரூபாய்.
முதற்பதிப்பு : டிசம்பர் 2024 .
கிளைவ் வாழ்க்கையில் இத்தனை காதலா?? என்று உங்களை அதிசயிக்க வைக்கும் என்ற ஆசிரியரின் முன்னுரையோடு முனைப்போடு வாசிப்பை தொடங்கினேன்.
ராபர்ட் கிளைவ் தன் 17 வது வயதில் இந்தியாவிற்கு வந்து, இந்தியாவைத் தன் நாட்டோடு இணைக்கத் துடித்த டூப்ளேயை தோற்கடித்து, ஆற்காடு கோட்டையை கைப்பற்றி " ஆற்காட்டு நவாப் " என்ற பெயரும் பெற்றார்.
கும்பினி பையன்களை மணக்க இங்கிலாந்தில் இருந்து கப்பலில் வந்த பதினொரு பெண்களில் ஒருவரான மார்க்கெட் மஸ்கரலினைக் காதலித்து திருமணம் செய்ததை சொல்லும் கதை.
தீனின் நாவல்கள் தொடங்கும் போது அட்டகாசமான இயற்கை வர்ணனைகளோடு தொடங்கும். போகப் போக அவர் கதைக்குள் போய் விடுவதாலோ, இல்லை நாம் கதைக்குள் மூழ்கி விடுவதாலேயோ அதை ரசிக்க தவறி விடுவோம்.
அதனாலேயே நான் நாவலின் முதல் அத்தியாயத்தை இரண்டு முறை வாசிப்பேன் " பொன் துகளாய் கிடக்கும் நீண்ட கடற்கரையை பார்த்தான்"
" கடலலை வெள்ளி நுரைக் கோடு தீட்டிக்கொண்டு கரையை நோக்கித் தாவி வந்து கொண்டிருந்தது"
" அவன் சிவப்பு தொப்பி தன் சிவந்த இறக்கையை விரித்த பறவையைப் போல பறந்து கீழ்த்தரை படிக்கட்டில் உட்கார்ந்தது.
" இந்த மணல் துகள்கள் சூரியனால் புடம் போடப்பட்ட தங்கப்பரல்கள் போல மினுங்கின. "
இவை எல்லாம் நாவலின் தொடக்கத்தில் என்னை ரசனைக்குள் ஆழ்த்திய வரிகள்.
கிளைவும் எட்மண்டும் நண்பர்கள். எட்மண்டு ஒரு பெண்ணின் சாயலோடு கிளைவுக்கு அறிவுரை சொல்வான். அவனுக்கு பெண்களை விட கிளைவை பிடித்திருந்தது.
எல்லா ராணுவ குழுக்களிலும் வயதானவர்களை அனுபவத்திற்காகவும், இளைஞர்களை வேகமான செயலுக்காகவும் இணைத்து இருப்பார்கள். இளைஞர்கள் கனவுப் போதையில் மிதக்க , வயதானவர்கள் பலான ஜோக்குகளோடு வலம் வருவார்கள்.
தன் அப்பாவும் சித்தப்பாவும் வழி அனுப்பி வைக்க கிளம்பி வந்த ஏழை கிளைவ் பல இன்னல்களுக்கு உள்ளாகிறார். அவன் வந்த கப்பலும் விபத்துக்குள்ளாகி ஒன்பது மாதங்கள் தாமதமாக, கையில் உள்ள பணமும் செலவழிந்து பரிதாபமாக நிற்பதை வாசிக்கும் போது இதிலிருந்து அவர் ஆற்காட்டு நவாப்பாக ஆனது வரையிலான அவர் வளர்ச்சியைப் படிக்க ஆர்வம் கூடுகிறது.
கிளைவ் லோப்மாஸ் இனப்பெண் ஒருத்தியை சந்திப்பதாக வருகிறது. அவள் அழகை வர்ணிக்கும் போது சமீபத்தில் கும்பமேளாவில் பாசிமணி விற்க வந்து, சோசியல் மீடியாவால் பிரபலமாக்கப்பட்ட மோனாலிசா என்ற பெண் நினைவுக்கு வந்தார்.
லோப்மாஸ் இனம் என்பது ஆங்கிலோ இந்தியர் போல, போர்ச்சுக்கீசியர் இந்தியர் கலந்ததால் உருவானது என்கிறார் ஆசிரியர்.
பெண்கள் க்ளைவின் அழகினாலும் கம்பீரத்தினாலும் மட்டுமல்ல அறிவினாலும் , துணிச்சலினாலும் கவரப்பட்டு இருப்பார்கள். ஒரு ஆங்கிலோ இந்தியப் பெண்ணிடம் " எல்லா நேரத்தையும் தனது ஆக்கிக் கொள்கிறவன் வெற்றி பெற்றுக் கொண்டே இருப்பான்" என்பார்.
இதற்கு ஒரு உதாரணம் எப்போதாவது தன் எதிர்ப்பாலினத்திடம் ஒரு ஈர்ப்பு வருகிற போது அவனோ அவளோ அதில் கரைந்து போய் காணாமல் போய் விடுகிறார்கள். அந்த நேசத்திற்காக எதையும் இழக்கவும் செய்யவும் துணிந்து விடுகிறார்கள் இது கதைக்கு இடையே ஆசிரியரின் கருத்து . பல காதல் வெற்றி பெறுவதற்கு இந்த உணர்வு இருவரிடமும் சமமாக இருப்பது தான் காரணம் ஆகிறது.
சினிமா பார்த்து சில சமயங்களில் கொடுத்த காசு இந்த ஒரு சீனுக்கு சரியா போச்சு என்று சொல்வோமே அதுபோல கிளைவ் ஜாகியூஸ் என்ற பெண்ணிடம் விடைபெறும் நிகழ்ச்சி வாசிக்கும் போது தோன்றியது என்ன ஒரு அழகான விடைபெறல். " உன்னை என் வளர்ப்புத் தாய் போல் பார்த்துக் கொள்வேன்" என்று கிளைவ் சொல்லுவார். வெறும் உடல் சார்ந்து மட்டுமின்றி ஒரு தாய் மீது காட்டும் அன்பும் அக்கறையும் ஒத்ததுதான் உண்மை காதல்.
ஒன்றிரண்டு உடைகளோடு கப்பல் ஏறிய கிளைவ் அந்த உடைகளும் கிழிந்த நிலையில் தன் சித்தப்பாவின் நண்பர் செய்த உதவியோடு வாழ்க்கையை தொடங்குகிறார் . அந்த எளிய நிலையிலிருந்து ஆற்காட்டு வீரரான வளர்ச்சி நமக்கு நம்பிக்கை ஊட்டும் விதமாக இருக்கிறது .
கிளைவ் மாபெரும் வீரனாக இருந்தாலும் இடையிடையே கப்பலில் ஏறிய போது இருந்த ஏழ்மையை சொல்லும் போதும் நலிந்தவனுக்கும் நன்றாகி விடலாம் என்ற நம்பிக்கை வரும். இந்தியா வந்த போது தன் அப்பாவுக்கு நீண்ட கடிதங்கள் எழுதுகிறார். எதற்கும் பதில் வரவில்லை. பின் தன் சித்தப்பாவுக்கு எழுதுகிறார். பின் இரண்டு மாதம் கழித்து தன் ஒன்றுவிட்ட சகோதரனுக்கு எழுதுகிறார் . கடிதம் எழுதுவதற்கு பதில் வராத போதிலும் மிகுந்த மகிழ்ச்சியோடு எழுதுகிறார். எனக்கு இந்த கடிதத்தை படிக்காமலே கூட ஒரு வார்த்தை எழுதினால் போதும்
மனம் இதம் கொண்ட நட்பை உணர்த்திவிடும் என்று எழுதி இருக்கிறார் .
கடற்காற்று கப்பலை அலைக்கழிக்க பாய் மரங்களை விரித்து பலரும் அதன் மேல் ஏறி நிற்கிறார்கள் அவர்களுள் ராபின்யங் என்ற கைதியும் ஒருவன். கடற்காற்று அமைதியானதும் அவன் இரு கைகளையும் விரித்து ஆரவாரிக்கும் போது திடீரென்று மறுபடியும் அந்த கடல் காற்று அவனை அடித்து இழுத்து கடலில் போடுகிறது. நுரை பூக்களின் மேல் அவன் தலை தெரிந்தால் காப்பாற்றி விடலாம் என்ற நிலையில் தெரியாது போக அவனை அங்கேயே விட்டபடி கப்பல் நகர்ந்து விடும் இந்த நிகழ்வை தீன் எழுதினால் வாசிக்கும் போது நாமே கப்பலில் பயணித்த உணர்வு. ஆம் அச்சம் தரும் உணர்வு வரும்.
கொன்சால்வஸ் என்ற கேப்டன் கடலில் எப்படி திசை கண்டு பயணிக்கிறோம் என்று பள்ளிப் பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுப்பது போல சொல்லிக்கொடுப்பார் . நமக்கும் அது பாடமாகும். அந்த காலத்தில் கிராஸ் டாப் என்ற குழல் போன்ற கருவியையும் வானவெளி குறியீடுகளையும் வைத்துத்தான் கப்பலில் பயணத்திருக்கிறார்கள். சில சமயம் அவை தப்பாகி விடும் போது உலகைச் சுற்ற வேண்டி வரும்.
மலர்கள் இரவில் கண்களை மூடிக்கொண்டு பகலில் கண் விழிப்பது அங்கு நடக்கும் குடியையும் கும்மாளத்தையும் காணாமல் இருப்பதற்குத் தானோ என்று ஒரு இடத்தில் எழுதி இருப்பார் ஆசிரியர். எவ்வளவு அழகான கற்பனை. மலர்கள் மென்மையானவை அல்லவா? இதுபோல , கதைக்கு இடையே ஆசிரியர் நம்மோடு பேசிக் கொண்டே இருப்பார். கதை வாசிக்க தொடங்கிய கொஞ்சம் பக்கங்களிலேயே கிளைவுக்கும் எட்மண்டுக்கும் இடையிலான நட்பை பற்றிய என் சந்தேகத்தை கதை ஆசிரியருக்கு whatsapp மெசேஜ் செய்தேன். அதற்கு அவர் பதில் சொல்லவில்லை காரணம் என் சந்தேத்துக்கான விடை கதையின் கடைசி பக்கத்தில் இருந்தது. அது கிளைவ் மார்கரெட்டை விரும்பி திருமணம் செய்வதற்கான வித்தியாசமான காரணமாக இருந்தது. ஆம் காதல் அசுரன் தான் கிளைவ். நமக்கு ஒரு வித்தியாசமான அனுபவத்தை கொடுக்கும் இந்த புத்தகம் .
நான் ரசித்தவற்றுள் ஒரு சில வரிகள் :
' காற்று மெழுகுவர்த்தியை ஆட்டுவது போல அவன் மனம் வேறொரு அசைதலை செய்து கொண்டே இருப்பதும் அவனுக்கு விளங்கியது" . அலை பாயும் மனதை காற்றுக்கு அலைக்கழியும மெழுகு திரியின் சுடருக்கு ஒப்பிட்டுசொன்னது ரசிக்க வைத்தது.
"அன்பாகப் பேசும் பெண்கள் , ஆண்களை புதிய உலகத்திற்கு அழைத்துப் போகிறார்கள் "
" கிளைவ் கிடு கிடுவென நடுக்கொடி மரத்தில் ஏறி பாய் மரத்தை விரித்துக் கட்டினான். கடல் அங்கிருத்து பார்க்க பொங்கி எழும் வட்டத் தொட்டி போல இருந்தது. வெண் மேகங்கள் விர்ரென்ற சத்தத்துடன் குளிர் காற்று போல போய்க் கொண்டிருந்தது."
"எல்லா பாய் மரங்களையும் விரித்து விடும் போது கப்பல் பூப் போல மலர்வதைப் பார்க்க அழகாக இருந்தது."
" மனிதன் மிகுந்த மகிழ்விலோ மிகுந்த வெறுமையிலோ இருக்கும்போது பேசுவதற்கு எதுவுமே இல்லாமல் போகிறான் "
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment
தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!