29 December, 2025
Gen Z குழந்தைகளின் பாய்ச்சல்
எங்க அப்பாவின் மாணவர் திரு பாப்பையா அவர்கள் ஒருவரைத் தான் அறிந்திருந்தேன் ஆதலால் அவரை மட்டும் நினைவஞ்சலி நிகழ்ச்சிக்கு அழைத்திருந்தேன். மற்றும் ஒரு மாணவர் " மேலும்" சிவசு ஐயா. இவரும் தூய சவேரியார் கல்லூரியில் பணி புரிந்து ஓய்வு பெற்ற பேராசிரியர். இந்த நிகழ்ச்சி பற்றி பாப்பையா சார் மூலம் அறிந்ததும் என்னை அழைத்துப் பேசினார். "அவ்வளவு அழகா உடை உடுத்தி வருவாரும்மா உங்க அப்பா ( என் உடை நேர்த்தியின் நதித் தலையணை அது தான் போல) " என்று சொன்னதோடு எங்க தாத்தா கணிதப் பேராசிரியர் சந்தியாகு அவர்களையும் நினைவு கூர்ந்தார். "வெள்ளை வேட்டி , ஜிப்பா, கழுத்தில் ஒரு சின்ன துண்டு, வகுப்புக்கு வெளியே காலணியைக் கழற்றி விட்டு வரும் அழகு" என அவரைப் பற்றியும் சொல்லி விட்டு தன் பேரன் எழுதிய ஆங்கில கவிதைத் தொகுப்பு வெளியீட்டுக்கு என்னை அழைத்தார். அங்கே போன பின் தான் தெரிந்தது அவர் பேரன் அனிருத்தின் அம்மாவைப் பெற்ற அம்மாவும் ஆதி மூலமும் நானும் தொலைத் தொடர்புத் துறையில் ஒன்றாகப் பணி புரிந்திருக்கிறோம்.
சிறப்பான நிகழ்வும் , ருசியான இரவு உணவும் மனதையும் வயிற்றையும் நிறைக்கத் திரும்பினேன்.
முதலில் இந்த GenZ குழந்தைகளின் பாய்ச்சல். மேடையில் மூன்று குழந்தைகள். செல்வன் அனிருத், செல்வி பார்கவி ரமேஷ், செல்வன் விஷ்ணு வெங்கடேஷ்.
அனிருத் எழுதிய புத்தகத்தின் பெயர் "The Shimmering joy of writing" ஈர்க்கும் பெயரும் , அழகான மேலட்டையும், கனக்கும் கவிதைகளுமாக அந்த புத்தகம் இருந்தது என்றால், நளினமான ஆடலோடு கூட அனிருத்தின் ஒரு கவிதையை அழகான ஆங்கிலத்தில் வாசித்தாள் பார்கவி. செல்வன் விஷ்ணு மற்றுமொரு கவிதையை மனதில் உருவேற்றி அழுத்தமான குரலில் பாராமலே சொன்னான்.
நமக்குத் தேவையான சில கருத்துகளும் சொல்லக் கிடைத்தன. தொடர்கிறேன்.
19 December, 2025
காந்தா. டிஸ்னி ஹாட் ஸ்டாரில்
Disney Hotstar
படத்தின் பெயர் காந்தா
இயக்குநர் : செல்வமணி செல்வராஜ்
முக்கிய கதாபாத்திரங்கள்: துல்கர் சல்மான், சமுத்திரகனி, ராணா டகுபதி, பாக்யஸ்ரீ
தயாரிப்பாளர்கள் : ராணா டகுபதி, துல்கர் சல்மான் ( அட!!) மற்றும் இருவர்.
தமிழ் திரைப்பட உலகத்தின் முதல் சூப்பர் ஸ்டாரான தியாகராஜ பாகவதரின் கதையின் லேசான சாயல் தெரிகிறது. தன் சூப்பர் ஸ்டார் பதவியை தன் கோபத்தால் இழந்து மிகவும் பரிதாப நிலைக்குச் சென்று மரித்தவர் தியாக ராஜ பாகவதர்.
உடையில், பேச்சில் சுற்றுச் சூழலில் அந்த காலத்தை மிக அழகாக்க் கொண்டு வந்திருக்கிறார்கள். துல்கர் சல்மான், பாக்யஸ்ரீ இருவர் முகமும் கதா பாத்திரத்துக்கு மிகவும் பொருந்திப் போகின்றது.
நடிப்பில் சமுத்திரக்கனி, ராணா, பாக்யஸ்ரீ மூவருக்குமே சபாஷ் சரியான போட்டி.
எப்போதுமே ஒருவர் உயிரை எடுக்குமளவு கோபம் இரண்டு ஆண்களுக்கு இடையில் வருவது பெண் சம்பந்தமாக அல்லது நிலம் சார்ந்ததாக இருக்கும். இங்கே பெண் சார்ந்து வருகிறது. ஆனால் பலியாவது ஓருயிரா?? இல்லை. இல்லை.
துல்கரின் மாமனாராக வழும் நிழல்கள் ரவி ஒரு சாயலில் நாசர் போல, ஒரு சாயலில் சங்கிலி முருகன் போல ஒரு சாயலில் நிழல்கள் ரவி போல மாறி மாறித் தெரிகிறார்.்
சமுத்திரக்கனி திரைப்பட இயக்குநர் . தன் அம்மாவின் கதையாக சாந்தா என்னும் படத்தை எடுக்க அந்த பெயரை சாந்தா என மாற்ற வேண்டும் என்பதில் தொடங்குகிறது இயக்குநர் கதாநாயகன் இருவருக்கும் இடையேயான ஈகோ.
கதாநாயகிக்கு தன் மனைவி அந்தஸ்தை கொடுக்க துல்கரும் , தன்னை வளர்த்து முதல் படம் கொடுத்த சமுத்திரக் கனியின் விருப்பத்தை மீறி துல்கரை மணம்முடிக்கத் துணிந்த பாக்யஸ்ரீ யையும் நடந்து விடுகிறது அந்த அசம்பாவிதம்.
படம் ரொம்ப நல்லா எடுத்திருக்கிறாங்க. பாருங்க.
அப்பா இறந்த 50 ஆம் ஆண்டு
தேதிய பார்த்தீங்களா?
இன்றிலிருந்து சரியாக ஐம்பதாண்டுகளுக்கு முன்.
ஆனா தேதி. அப்பாவோட இள வயதில் எடுத்தது.
ஐம்பதாண்டுகள் என்பது எப்படி சடுதியில் ஓடிப் போய் விட்டது.
அன்றிருந்த அப்பா எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது. அம்மாவை அழகாக எங்களை அலங்காரம் பண்ணி விடச் சொல்லி வித விதமாய் போட்டோ எடுத்துச் சேர்த்த அப்பா. அம்மாவோட சேர்ந்து ஆடைகளை டிஸைன் செய்து தயாரித்து எங்களுக்கு அணிவித்து அழகு பார்த்த அப்பா. இன்று என்னிடம் இருந்து விலக மறுக்கும் மேட்டிமை உருவாகக் காரணமாக இருந்த அப்பா.
ஆனால் இப்போ தோணுது அவர் இன்னும் கொஞ்சம் காத்திரமாய் இருந்திருக்கலாமோ?
மூன்று பெண் பிள்ளைகளைப் பெற்ற மனம் இவ்வளவு பூஞ்சையாய் வலி தாங்க முடியாததாய், இருந்து உருகி உருகி காதலித்த மனைவியையும் , உயிராய் நினைத்த பிள்ளைகளையும் இப்படி நட்டாற்றில் விட்டது போல் விட்டு போயிருக்கக் கூடாதோ!
ஆனாலும் நீந்திக் கரை சேர்ந்து விட்டோம் அப்பா. உங்கள் பேரப் பிள்ளைகள் இன்று வெளிநாட்டிலும். அவர்களின் பிள்ளைகள் அங்கேயும் ஜொலித்துக் கொண்டிருக்கிறார்கள். என் கவலை எல்லாம் இதையெல்லாம் பார்க்க நீங்கள் இல்லாமல் போனீர்களே என்பது தான். இன்று வரை நீங்கள் இல்லாததால் நாங்கள் கடக்கும் வலிகள் அற்பமானவை அல்ல அப்பா.
பொதுவாக பிள்ளைகளை விட பேரப் பிள்ளைகளை அதிகம் நேசிப்போம் என்கிறார்கள். நீங்கள் பிள்ளைகளிடமே பேரன்பைக் காட்டியவர். அந்த மகாப் ப்ரவாக அன்பை உங்கள் பேரப் பிள்ளைகளுக்கு காட்டாமல் மறைந்து போனீர்களே அப்பா.
அதற்காகத் தான் சொல்கிறேன். அப்பாக்களே!! கொஞ்சம் காத்திரமாய் இருங்கள்.
பழகும் மனிதரிடமெல்லாம் உங்கள் அன்பின் சாயலைக் கண்டு பாசத்தில் பற்றிக் கொள்வதும், இடை வழியில் நீங்கள் விட்டுச் சென்றதைப் போலவே அவர்கள் விலகும் போது இளகித் தவிப்பதும் தொடர்கதையாகத் தான் அப்பா இருக்கிறது.
எவ்வளவோ துணிவோடு காரியங்கள் செய்தாலும் அன்பு என்ற விஷயத்தில் மட்டும் பலவீனமாகிப் போகிறேன். அன்பைக் காட்டிய நீங்கள் அன்பற்று ஜடமாய் எப்படி இருக்க வேண்டும் என்பதையும் சொல்லித் தந்திருக்கலாமே அப்பா.
நீங்கள் இல்லாமல் ஐம்பதாண்டுகள் வாழ்ந்து விட்டோம் என்பதே நம்ப முடியாமலிருக்கிறது. இன்னும் எத்தனை ஆண்டுகளோ! இந்த ஒன்றை மட்டும் எப்படியும் படித்து விட வேண்டும்.
நல்ல மனம் படைத்தோர், நாணயமானோர், கனிவானவர், பண்பானவர், என்னை அரவணைக்க நெருங்கி வருவோர், என்னை வியந்து என் தன்னம்பிக்கையை அதிகரிப்போர் அத்தனை பேரிடமும் இருந்து எட்டி இருக்க பழக வேண்டும். மற்றவர்களின் பிரிவு என்னைப் படுத்துவதே இல்லை என்ற நிலை வர வேண்டும்.்
விரைவில் வந்து சேர்ந்து விடுவேன். காத்திருங்க அப்பா.
13 December, 2025
வழக்கறிஞர் கருப்பையா நினைவஞ்சலி
அரிகேசவநல்லூர் என்னும் ஊரைச் சார்ந்த கருப்பையா வழக்கறிஞர் அவர்கள் தனது 76 ஆவது வயதில் இறந்த பிறகு அவர் மகன் ஆயிரம் K செல்வகுமார் என்பவர் ஆயிரம் பௌன்டேஷன் என்பதை நடத்தி வருகிறார். அவர் வழக்கறிஞர் கருப்பையா நினைவுச் சொற்பொழிவும் நடத்தி வருகிறார். 11 ஆம் ஆண்டு நினைவு சொற்பொழிவு இன்று நடந்தது. நண்பர் தீன் அவர்களால் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.என் அருகில் அமர்ந்திருந்த அவர் மகளிடம் அது என்ன "ஆயிரம்" என்று கேட்டேன். எங்க தாத்தா பெயர் என்று சொன்னார்கள்.
இன்றைய நிகழ்வில் கருப்பையா அவர்களைப் பற்றி நான் அறிந்து கொண்டது. இவர் நகைச்சுவையாக பேசக் கூடியவர். மிகச் சிறந்த வாசிப்பாளர். தமிழ் இலக்கியத்திலே ஆழ்ந்து நெறிப்பட்டவர். அவர் சொன்னதாக வழக்கறிஞர் மணி அவர்கள் சொன்னது " Irwing Wallace அவர்கள் எழுதிய The Second Lady வாசிக்கச் சொன்னார்" . நான் கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகளுக்கு முன் வாசித்த அருமையான புத்தகம். ஆயிரம் நடராஜன் என்ற அவருடைய தம்பி Ernest Hemingway யின் நாவல்களைத் தமிழில் மொழி பெயர்த்திருப்பதாகச் சொன்னார்கள்.
மூத்த வழக்கறிஞர் தீன் அவர்கள் பேசும் போது மனிதர்களில் பொதுவாக இரண்டு வகை உண்டு அதுவாவது . Introvert, extravert.
Bava அவர்கள் வெளிப்பார்வைக்கு introvert ஆகத் தெரிவார். ஆனால்
அவருடைய தயக்கமற்ற செயல்களில் extrovert ஆக வெளிப்படுவார்.
மூன்றாவதாக உள்ள உளவியல் தத்துவமான omnivert ஆகவும் தெரிவார் என்றார்.
"இலக்கியம் என்பது பூரணம். ஒரு அகலைக் கொண்டு ஆயிரம் அகல்கள் ஏற்றலாம். வெளிச்சம் குறையாது. அதைப் போன்றது இலக்கியம் " என்று வழக்கறிஞர் கருப்பையா அவர்கள் சொல்வார்கள் என்றார். வழக்கறிஞர்கள் இறந்த பிறகு அவர்களைப் பற்றி பேசுபவர்கள் இருக்க மாட்டார்கள். ஆனால் ஆயிரம் K செல்வகுமார் தன் தந்தையைப் பற்றி பலரும் பேசும் விதமாக செயல் புரிந்திருக்கிறார் என்று பாராட்டினார்.
அடுத்து "மானுடம் வெல்லும் " என்னும் தலைப்பில் சிறப்பு உரை ஆற்ற வந்த பவா செல்லத்துரை தொடக்கத்திலேயே " நல்ல மேடைப் பேச்சாளர்கள் எவ்வளவு சத்தம் இருந்தாலும் பேசுவார்கள். நான் எழுத்தாளன். அமைதியான சூழலில் தான் என்னால் பேச முடியும் என்றார். கூட்டம் குண்டூசி விழுந்தாலும் கேட்குமளவு அமைதி காத்து அவர் உரையைக் கேட்டது. ஆசிரியத் தொழில் செய்த தன் தந்தையை நினைத்து தான் எதுவும் செய்ததில்லை என்று வருத்தமாகக் கூறினார்.
இவர் தந்தை தன் 21 ஆவது வயதில் தீபத்தன்று தற்கொலைக்கு முயன்று தப்பித்திருக்கிறார். தொங்கி விட வேண்டுமென கயிறு கட்டிய நிலையில் வானத்தில் வாண வேடிக்கைகளைக் கண்டதும் மனம் மாறி வீடு திரும்பி இருக்கிறார். நமக்கு இப்படி ஒரு அருமையான கதை சொல்லி அவர் வழியாக வர இருக்கும் போது மரணம் எப்படி அவரைத் தழுவும். ஆனால் பல வருடங்களுக்குப் பிறகு
தீபத்தன்றே அவர் இறந்தார் என்றார்.
நிறைய விழுமியங்களை தந்தையிடமிருந்து பெற்றேன் என றார்.
அப்பாவைக் கெட்டியாக பிடித்துக் கொள்ளுதல் நம்மை நெறிப்படுத்தும் என்ற தல்ல ஒரு கருத்தையும் சொன்னார்.
நேர்மை அறத்துக்கு இன்னும் இடமிருக்கிறது என்று உணர்த்திய சுதந்திர தியாகி பற்றிய அருமையான "தியாகி" கதை சொன்னார். எத்தனை எத்தனை சிறு கதைகளை நினைவுகளின் அடுக்கில் சேமித்து வைத்திருக்கிறார்.
வாசிப்பு மட்டும் தான் நம்மை தினம் தினம் கழுவிச் சுத்தப்படுத்தும் என்றார். பல சிறுகதைகளைக் கேட்டு பலர் வாழ்வின் ஆகச் சிறந்த முடிவுகளை எடுத்திருக்கிறார்கள் என்றார்.
இன்றைய பொழுதை இந்த நிகழ்வு சின்ன நெருடலோடு கூடிய ஆகச் சிறந்த பொழுதாக்கியது.
11 December, 2025
சிற்றுளி
இவ்வாழ்வில் வேறு எதையும் விட அதிகமான ஒரு பிணைப்பு அவனுக்கு அவளிடம் இருக்கிறது. வாழ்வின் ஓட்டத்தில் அன்பை எப்போதும் நிரூபித்துக் கொண்டே இருக்க முடியாது. அது அவசியமும் அல்ல. புரிந்து கொண்டால் போதுமானது. இனி அவன் என்ன முயன்றாலும் அது போலியாக கவனக் குவிப்பை பெறும் பெரும் முயற்சியாகவே இருக்கும். அற்புதங்கள் நிகழக் காலமாகும். நிச்சயம் நேரம் எடுக்கும். காத்திருக்க வேண்டும். ஆனால் நிச்சயம் ஒரு நாள் நிகழ்ந்துவிடும். அவன் அற்புதங்களின் சமிஞ்சைகளுக்காக காத்திருக்கத் தொடங்கினான்"
இது மூன்று மாதங்களுக்கு ஒரு முறை வெளிவரும் "சிற்றுளி" என்ற ஜூலை & செப்டம்பர் 2025 இதழில் "நித்யா ஹரி" அவர்கள் எழுதிய "கானமயில்" என்ற சிறு கதையிலிருந்து ஒரு பகுதி. ரொம்ப நல்லா இருந்தது. இந்த உணர்வோட நம்மை இணைத்துக்கொள்ள முடியுது.
ஒரு சந்தர்ப்பத்தில் அன்பு கொண்ட இருவருக்கு இடையே பிரிவு வந்தபின் அதை சரி செய்ய ஓரளவு தான் முயல வேண்டும். அதற்கு மேல் முயலும் போது அது ஒரு போலித்தனம் காட்டுவது போல் ஆகிவிடும். அப்படிங்கறத ரொம்ப அழகா சொல்லி இருக்காங்க. நல்ல சிறுகதை. சிற்றுளியில் இதுபோல பல ரசிக்கத் தகுந்த அம்சங்கள் உள்ள. தனி இதழ் 130 ரூபாயும் ஓராண்டு சந்தா 500 ரூபாயும் செலுத்தலாம்.
07 December, 2025
எங்கள் நெல்லை ஆயர் மேதகு ஜூட் பால் ராஜ் அவர்கள் ஆயராகி இருபத்தைந்து ஆண்டுகள் நிறைவடைந்த விழாவும், கிறிஸ்மஸ் விழாவும் இணைந்து ST.Anne's நடத்தும் மன நலம் குன்றியோர் மறு வாழ்வு இல்லத்தில் வைத்து நற்செய்திக் குழுவினரால் நடத்தப்பட்டது. கலந்து கொள்ளும் வாய்ப்புக் கிடைத்தது.
இங்கு பல முறை சென்றிருக்கிறேன். கைவிடப்பட்ட முதியோரும் இருப்பார்கள். முதியோர் எண்ணிக்கை குறைந்திருப்பது போல் தோன்றியது. மக்களின் பொருளாதார நிலை உயர்ந்திருப்பது ஒரு காரணமாக இருந்திருக்கலாம். பல பிரச்னைகளுக்கும் அடிப்படை காரணம் பொருளாதாரமாகத் தானே இருக்கிறது.
ஆட்டிஸத்தினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான பள்ளி இங்கிருப்பதாகச் சொன்னார்கள். எவ்வளவு ஞாபகமா ஸ்டெப்ஸ் போடுறாங்க.
ஆட்டிஸம் குழந்தைகள் முன்னால இவ்வளவு இருந்த மாதிரி இல்லையேன்னு தோணியது. அப்போ ஒருவர் சொன்னது நினைவுக்கு வந்தது. முழுமையாக மன நலம் பாதித்தவர்கள் எண்ணிக்கை இப்போ குறைஞ்சிருக்குது. இரண்டிக்கும் ஏதாவது தொடர்பிருக்கலாம் என்று. தெரியல.
ஒரு ஆண் குழந்தையும் இரண்டு பெண் குழந்தைகளும் இணைந்து பாடினார்கள். அந்தப் பையன் பார்க்க பாதிக்கப்பட்டவன் போலயே தெரியவில்லை. நேராக என்னிடம் வந்து "நான் நல்லாப் பாடினேன்" என்றான். நாம "பாடினேனா" எனக் கேட்போம். அந்தக் கடைசி எழுத்து மாற்றத்தில் மட்டுமே தொக்கி நின்றது ஒருவரின் மன நலம்.
அங்குள்ள குழந்தைகளுக்கு புத்தாடையும் எல்லோருக்கும் உணவும் வழங்கப்பட்டன.
ஆயர் அவர்கள் பேசியதில் எனக்கு ரொம்ப பிடித்தது
" பிறப்பவரெல்லாம் மனிதரல்ல. பிறருக்காக வாழ்பவர் மட்டுமே மனிதர்"
"தன்னைப் பற்றி மட்டுமே அக்கரைப் படுபவர்கள் இன்னும் வாழத் தொடங்கவே இல்லை என்பது தான் உண்மை"
அருமையான கருத்துகள் தானே. சமுதாயத்தில் நிறைய மாற்றங்கள் பார்க்கிறோம். சேவை புரியும் இளைஞர்கள் அதிகரித்து விட்டார்கள். நம் மக்களை நாம் தானே தாங்கிப் பிடிப்போம். இணைத்திருக்கும் படங்களும் வீடியோக்களும் சான்று.
05 December, 2025
#நீயா நானா
இந்த வாரம் "நீயா நானா" டாபிக் "காதலித்து திருமணம் செய்தவர்கள் ஆனால் பிள்ளைகளின் காதலுக்கு தடை சொல்பவர்கள்"
நான் இந்த வகையில் வருவதாலேயே எனக்கு ரொம்ப பிடிச்சது. பிள்ளைகள் மட்டுமல்ல என்னுடன் பழகுபவர்கள் என் கருத்துக்கு மதிப்பளிப்பவர்களிடம் கூட காதல் வேண்டாம் என்று சொல்லி உண்மை நிலையை புரிய வைத்திருக்கிறேன். காதல் ஒரு மித்.
எங்கள் வாழ்க்கையில் உள்ள சிரமங்கள் இப்போ இல்லைன்னு சொல்லலாம். பெற்றவங்க எதிர்க்காம சம்மதிச்சா பிரச்னை இல்லையேன்னு சொல்லலாம். எது எப்படி இருந்தாலும் திருமணம் என்றான பின், கணவரான பின் எல்லா ஆண்களும் ஒரே நேர் கோட்டில் நின்று விடுகிறார்கள் என்ற என் எண்ணம் ஒரு பெண்ணின் கருத்தால் மாறிப் போனது. அதனாலேயே தான் இந்த பதிவு.
அந்த பொண்ணு சொன்னது " ஒருவரைப் பிடிக்க ஆரம்பித்ததும் பரவச நிலைப் பேச்சு என்ற ஒன்று இருக்கும். நாங்கள் அந்த நிலையில் partner ஐ தேர்ந்தெடுக்க மாட்டோம். அதற்கடுத்து conversation stage னு ஒண்ணு வரும். அந்த நிலையில் தான் நமக்கு ஒத்து வருமா காதல் என்ற நிலைக்கு உயரலாமான்னு முடிவு பண்ணுவோம்.
இது நான் ஏன் நாங்கள் செய்த, செய்து கொண்டிருக்கும் தப்பை தலையிலடித்து சொன்னது. நாங்கள் எல்லோருமே அந்த பரவச நிலைப் பேச்சில் மயங்கித் தேர்ந்தெடுத்ததாலேயே தான் புலம்பல்களும் அழுகையும் பற்கடிப்பும். வயதானாலும் நாங்கள் அதே தவறைத் தான் செய்வோம்.
ஆனால் இந்த தலைமுறை தெளிவாக இருக்கிறார்கள். பரவச நிலைப் பேச்சை தவிற்பதுமில்லை. ரொம்ப யதார்த்தமாக கடந்து விடுகிறார்கள்.
இன்று மாதம்பட்டிக்கு எதிராக ஜாய் போடும் வீடியோக்களும் அந்த பரவச நிலையில் அனுப்பிய வீடியோக்கள் தான். நம்மைச் சுற்றி இருப்பவர்களையும் கவனித்தால் பிரச்னைக்குள்ளாகாதவர்கள் இந்த பரவச நிலைப் பேச்சுக்கு மயங்காதவர்களாகவே இருப்பார்கள்.
மம்முட்டியும் பானுப்ரியாவும் "அழகன்" படத்தில் விடிய விடிய போனில் பேசுவார்களே அதுவும் இத்தகைய பரவசப் பேச்சில் தான் அடங்கும்.
அதனால் நம் தலைமுறை நாம் ஏதோ புத்திசாலிகள் எனவும் நம் பிள்ளைகள் தெளிவற்றிருப்பதாகவும் ஒரு கற்பனையில் இருந்து அவர்களை கண்டித்துக் கொண்டு இருக்கிறோம். ஆனால் உண்மை அதுவல்ல.
இது என் கருத்து. உங்கள் கருத்துகளையும் சொல்லுங்க. கேட்டுக் கொள்வோம். ்
நடு சென்டர் வெப் சீரீஸ்
Hotstar ல நடு சென்டர் னு ஒரு வெப் சீரீஸ் பார்க்க ஆரம்பிச்சேன். ஒரு எபிசோட் தான் பார்த்திருக்கிறேன். திரைக்காக கொஞ்சம் அதிகப்படியாக இருக்கும் என்றாலும் பயத்தை முற்றிலுமாக தவிர்க்க முடியாது.
பள்ளிகளில் மாணவர்களை கட்டுப்படுத்துவது இவ்வளவு கஷ்டம் என்றால் ஆசிரியத் தொழில் உண்மையிலேயே பரிதாபம் தான்.
ஒரு புறம் இப்படி இருக்க இன்னொரு புறம் குழந்தைகள் ஏழெட்டு வயதிலேயே எக்ஸ், க்ரஷ் பற்றி எல்லாம் முழு அர்த்தம் தெரியவில்லை என்றாலும் பேசுகிறார்கள் என்கிறார்கள். அந்த வகையில் பெற்றோர் நிலை அதை விடப் பரிதாபம்.
இன்றைய காலச் சூழலில் தவறான பாதையில் போய் விடாமல் குழந்தைகளைக் காக்க வேண்டியது நம் கடமை. குழந்தைகளில் ஆண் பெண் பேதமில்லாமல் எல்லோரையும்.
02 December, 2025
குதிரை வாகனம் by ஜீவகுமாரன்.
"அப்பா அம்மாவைக்கு தான் நல்ல மாப்பிள்ளை. எனக்குத் தான் தெரியும் சண்டியரைப் பற்றி" அவளும் சீண்டினாள்.
"சண்டியனோடை இன்றைக்கு நீ சண்டை பிடிக்கிறதாய் தீர்மானிச்சிட்டியா?"
அவள் மௌனமாக தலை குனிந்தாள்.
என் கைகள் அவளை அரவணைத்தது.
சண்டிக்குதிரை சண்டியனின் பிடியுள் அடங்கிக் கொண்டிருந்தது.
****
இது வீ ஜீவகுமாரன் அவர்கள் எழுதிய "குதிரை வாகனம்" நாவலில் ஒரு பகுதி. வளர்ந்த இரு ஆண் பிள்ளைகளைப் பெற்றவர்களுக்கு இடையே நடக்கும் உரையாடல். இதுவல்லவோ காதல். இன்று எத்தனைக் குடும்பங்களுக்கு இடையே இந்ம அந்நியோன்யம் இருக்கிறது என்று உறுதியாகச் சொல்ல முடியும். நான் ரொம்ப ரசித்து வாசித்த பகுதி என்பதால் உங்களோடு பகிர்ந்தேன்.
சண்முகத்தார் என்னும் ஊர்ப் பெரியவர் ஒருவரின் குடும்பம் தான் கதையின் பின்புலம். இலங்கை தான் களம். அதனால் பேச்சு இலங்கைத் தமிழில் இருக்கும். வாசிக்க வாசிக்க கதையோடு ஒன்றிப் போவதால் எளிதில் புரியும்.
அதே போல பாலா என்னும் மருத்துவருக்கும் சண்டியருக்கும் இடையேயான நட்பும் பிரமிக்க வைக்கும். மொத்தத்தில் மனிதம் மிளிரும் கதை.
24 November, 2025
காதலின் ஐந்தாம் நிலை
திருமணத்தோட காதலின் நிலைகள் முடிவதா நினைக்கிறதால தான் காதலும் திருமணத்தோட நின்றிடுது. திரைப்படங்களில் திருமணத்துக்குப் பின்னான காதலின் நிலையைக் காட்டி இருந்தா பல பேர் காதலின் பக்கமே போக மாட்டாங்க.
உண்மையான காதல்னா அது தூய்மையான அன்பினால் ஆனதா இருக்கணும். ஒருத்தருக்கு கஷ்டம் வந்தா அடுத்தவங்களுக்கு கண்ணீர் வரணும். சந்தோஷம் வரக் கூடாது. சந்தோஷம் எப்படி வரும்னு கேட்கிறீங்களா? வரும் ஈகோ இருந்தால் வரும்.
என்னமோ பெரிய ஆளுன்னு நினைச்சியே நல்லா கஷ்டப்படுன்னு மனசு சொன்னால் அது உண்மையான காதல் கிடையாது. இந்த ஈகோ கல்யாணத்துக்குப் பிறகு தான் வரும். உங்களுக்குத் தெரிந்த வெற்றிகரமான தம்பதியரை கவனிச்சுப் பாருங்க அவங்க நடுவில ஈகோ கொஞ்சம் கூட இருக்காது.
பல காதல் திருமணங்கள் தான் தோல்வியைத் தழுவுகின்றன. காரணம் அங்கே தான் எதிர்பார்ப்பும் ஏமாற்றமும் வருகின்றன. இன்னொரு முக்கியமான பிரச்னை கவனிக்கப்பட வேண்டியது இருக்கிறது. இது முக்கியமா ஆண்கள் சிந்திக்க வேண்டியது. நம்மை சந்திக்க வீட்டுக்குத் தெரியாம வந்தாளே இப்போ நமக்குத் தெரியாம யாரையும் போய் பார்த்திடுவாளோ என்பது குடற் புழு போல் நெளிந்து கொண்டே இருக்கும்.
இதை அடியோடு நீக்கினால் தான் காதல் பிழைக்கும். இல்லையென்றால் திருமணம் ஆன பின் கூட காதல் சாகும். ஆனால் திருமணத்துக்கு முன்னான நிலைகளில் கூட தோல்விக்குப் பின் காதல் பிழைப்பதற்கான வாய்ப்பு உண்டு. திருமணத்துக்குப் பின் காதல் செத்தால் பாலூற்ற வேண்டியது தான். கதை முடிந்தது.
இந்த பதிவுகள் எழுதத் தொடங்கியதும் நண்பர்கள் "எந்த காலத்துல இருக்கீங்க. இப்பல்லாம் இந்தக் காதல் மண்ணாங்கட்டி எல்லாம் கிடையாது. காமம் மட்டும் தான்" னு கூப்பிட்டு சொன்னாங்க. இருக்கட்டுமே நாம சொல்லித் தர்ரதை சொல்லித் தந்துகிட்டே இருப்போம். படிக்கும் போது படிக்கட்டும்.
(நிறைந்தது)
23 November, 2025
பட்ட மரம்
பட்ட மரம்
போலாச்சே
என் மனம்.
சந்தோஷ இலைகள்
அத்தனையுமுதிர்த்து.
ஒவ்வொரு முறை
முடிந்து போனேன்
என நான்
அலமந்து
போகும் போது
ஒற்றை இலை
துளிர்த்து
பிழைத்துக் கொள் என
உறுதியூட்டுகிறது.
என் மனம்
மலர்ந்ததும்
சந்தோஷச் சிறகுகள்
ஒவ்வொன்றாய்
இணைந்து கொள்கின்றன.
கிளை கொள்ளா
இலைகள்
பாரம் தாங்காமல்
தள்ளாடினாலும்
தாங்கிக் கொள்கிறேன்.
சந்தோஷ சிறகுகள்
எப்படியும் உதிர்ந்து
மனசு
பட்ட மரம் போலாகும்
என்றாலும்.
அணைத்துக் கொள்கிறேன்
அன்னையின்
வடிவாய்.
21 November, 2025
Avigitham #malayalam #movie
Hotstar ல Avigitham னு ஒரு மலையாளப் படம் பார்த்தேன். அவிகிதம் என்றால் "சட்டவிரோதமான உறவு" என்று அர்த்தமாம். பேரே தப்பு. இவர்கள் சொல்ல வரும் உறவு இன்றைய தேதியில் சட்டபூர்வமாக அங்கீகரிக்கப்பட்டு விட்டது.
இயக்குநர் சென்னா ஹெக்டே
பொதுவாகவே நான் பார்க்கும் நல்ல படங்களைப் பற்றி மட்டுமே எழுதுவது உண்டு. ஆனால் முதன் முறையாக ஒரு மட்டமான படத்தைப் பற்றி எழுத இருக்கிறேன். ஆம் மஹா மட்டமான கதைக்கரு. ப்ளாக் காமெடி என்ற பெயரில் இதை ஏற்றுக் கொள்ள வைத்திருக்கிறார்கள்.
எந்த நடிகர்களும் குறிப்பிடத் தக்கவர்களாய் இல்லை.
ஒருவன் இரவு நேரத்தில் பக்கத்தில் உள்ள தோட்டத்தில் ஒரு ஆணும் பெண்ணும் சல்லாபிப்பதைப் பார்க்கிறான். ஆணை அடையாளம் தெரிகிறது. பெண்ணை யார் எனத் தெரியவில்லை.
அவன் இந்த விஷயத்தை தன் தையல்கார நண்பரிடம் சொல்ல இருவரும் மறு நாள் வந்து பார்க்கும் போது அவர் ஒரு பெண்ணை அடையாளம் சொல்கிறார். அதற்கு அவர் சொல்லும் காரணம் தன் ஊரிலுள்ள பெண்களின் ப்ளவுஸ் அளவு எடுப்பதால் தன்னால் சரியாகச் சொல்ல முடியும் என்கிறார். கருமத்த!! இனி எப்படி ஆண் டெயிலர்களிடம் உறுத்தல் இல்லாம செல்ல.
இவர்களை கையும் களவுமாகப் பிடிக்க ஒரு கூட்டமே தயாராகிறது. அந்தக் கூட்டத்தில் தையல்காரர் சொன்ன பெண்ணின் கணவர், கொழுந்தன், மாமனார் அத்தனை பேரும் உண்டு என்பது தான் வருத்தமான விஷயம். இது "மட்டமான படம்" என்று சொன்னதற்கு முக்கியமான காரணம்.
தன் வீட்டுப் பெண்ணை அவமானப்படுத்துவது தனக்கே ஆன அவமானம் என உணராத ஆண்கள். இவர்கள் கூடி ஒரு பரவசத்தோடு ப்ளான் போட்டு நடத்த அது அவர்களுக்கே அதிர்ச்சி தரும் நிகழ்ச்சியாகிறது.
நிகழ்ச்சிகளைக் கோர்த்து இப்படி ஒரு படம் எடுத்த அந்த இயக்குநரின் மன நிலை என்னை அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது.
வீட்டுப் பெண்களை மதிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்.. அப்படி மதிக்காத பட்சத்தில் அவர்களின் எந்த விதமான நடவடிக்கையையும் ஏற்றுக் கொள்ளத் தயாராகுங்கள். காலம் மாறி விட்டது.
15 November, 2025
#காதலின்நான்காம்நிலை
காதலின் நான்காவது நிலையில் போராட்டங்கள் அதிகரிக்கும். இருவருக்கும் தினசரி வாழ்க்கையே திண்டாட்டமாக இருக்கும். எதிர்ப்புகள் வலுக்கும். அதை நேர் கொள்ள இருவரும் இறுக்கமாக கைகளைப் பிணைத்துக் கொள்ள வேண்டும். இவ்வளவு கஷ்டங்கள் தேவை தானா என இருவரில் ஒருவர் நினைத்தாலும் அங்கே காதல் பணால்.
போராட்டங்கள் அதிகரிக்கும் போது ஒரு சில புல்லுருவிகள் உள் நுழையப் பார்க்கும். அது வரை பெரிதாய் ரசிக்காமல் இருந்தவர்களைக் கூட வேறொருவர் காதலிக்க ஆரம்பித்ததும் தனக்கு வேண்டும் எனத் தோன்றும். எப்படியாவது தட்டிப் பறிக்கத் துடிக்கும்.
இந்தப் போராட்டங்கள் பல ரூபம் எடுத்து வரும். ஆணவக் கொலைகளாய். பெற்றோரின் உணர்ச்சி மிகுந்த ப்ளாக் மெயில்களாய், மொட்டை கடிதாசிகளாய் , அனானிமஸ் கால்களாய். அன்பு என்பது மிகவும் அழுத்தமாக இருந்தால் மட்டுமே இந்த நிலையைக் கடந்து திருமணம் வரை செல்ல முடியும்.
அப்பாடா காதலின் நிலைகளை ஒரு வழியா முடிவுக்கு கொண்டு வந்து திருமணத்தில் விட்டுட்டீங்களான்னு கேட்டா இன்னும் முடியலங்க. இன்னும் இருக்குது.
13 November, 2025
காதல் தன் மூன்றாம் நிலைக்கு வரும் போது. இருவருக்கும் ஒருவர் மீது ஒருவருக்கு முழு நம்பிக்கை வருவதால் தம் காதலை வெளிப்படையாகக் காட்டிக் கொள்ளத் துணிவோம். இதற்கு முன்பே பலர் நம்மைக் கவனித்திருப்பார்கள். நம் உடைகளில் காட்டும் தனிக் கவனம். நம் முகங்களில் ஏற்படும் பொலிவு. இப்படி ஒளிந்து மறைந்து பூக்கும் மலர் கூட தன் மணத்தால் தன்னிருப்பைக் காட்டிக் கொடுப்பது போல நம் உள்ளத்தில் பூத்திருக்கும் அன்"பூ" நம்மை வெளிப்படுத்தி இருக்கும்.
இப்போது எரிமலை தன் அக்கினிக் குழம்பை வெளியேற்றத் தொடங்கும். ஒருவரைப் பற்றி ஒருவரிடம் வதந்"தீ" பற்ற வைக்கத் தொடங்குவார்கள். "இவங்க அவ்வளவு நல்லவங்க கிடையாது. கவனமா பழகுங்க" என அறிவுறுத்தத் தொடங்குவார்கள்.
இந்த காதலுக்கு வரும் முட்டுக்கட்டை பல விதமாகத் தொடங்கும். ஒன்று நேரிலேயே குற்றங்குறைகளைச் சொல்வார்கள். அதை இருவரில் ஒருவர் ஏற்றுக் கொண்டாலும் காதல் அங்கேயே சாகும். இதில் அனேகமாக பெண்கள் வெளிப்படையாகவே கோபப்பட்டு பிரிவார்கள். ஆண்கள் தாம் ஏமாற்றப்பட்டோம் என்பது கௌரவக் குறைச்சல் என்பதால் அமைதியாக , கொஞ்சம் கொஞ்சமாகத் தன் உறவை அறுத்துக் கொள்வார்கள்.
காரணங்களை வெளிக்காட்டிக் கொள்ளாமலே தமக்கு ஏற்பட்டிருக்கும் சந்தேகங்களைத் தெளிவுபடுத்திக் கொள்ளாமலே "எதுக்கு வம்பு" என சத்தமில்லாமல் உறவை அறுத்துக் கொள்பவர்கள் உண்டு. ஏன் அறுத்துக் கொள்வார்கள் என்கிறேன் என்றால் பூத்து மணம் வீசிய அன்பு பறித்து எறியப்பட்டதன் காரணம் தெரியாதவர்களுக்கு அது ரணம். உயிர் பிரியும் கொடுமை.
இருவருமே ஒருவர் மீது ஒருவர் முழு நம்பிக்கையோடு இருந்தால் பின் அவர்கள் வீட்டுக்குச் செய்தி போகும். பல சமயங்களில் அதற்கு முன்பே அரசல் புரசலாய் செய்தி எட்டி இருக்கும். வெளிப்படையாய் கண்டிக்க சாட்சியங்களுக்கு காத்துக் கொண்டு இருந்திருப்பார்கள்.
இருவரில் ஒருவர் மிரட்டலுக்கு பயந்து விட்டால் கூட காதல் அங்கேயே தற்கொலை செய்து கொள்ளும். எதிர்க்கும் துணிவும், இந்த அன்பு நிச்சயமாய் தமக்கு வேண்டும் என்ற திடகாத்திரமான பிடிவாதமும் இருந்து , இருவரும் காத்திரமாக தம் காதல்ல தொடர நினைத்தால் காதல் தன் அடுத்த நிலைக்குப் பயணிக்கும்.
நான்காம் நிலை தொடரும்.
10 November, 2025
#எண்ணச்சிதறல்கள்.
ஜாய் கிறிஸ்சில்டா. ஒரு காலத்தில் நடிகை விஜயலக்ஷ்மி வீடியோவா போட்டு ஓஞ்ச மாதிரி இப்போ இந்தப் பொண்ணு போட்டு கிட்டு இருக்கிறாங்க. அவங்க பேசுறதுல ஏமாற்றப்பட்ட ஆதங்கம் தெரியுது. வயிற்றில் குழந்தையோட ஏகப்பட்ட பிரச்னைகள் சந்திச்சதால குழந்தையின் உடல் நலத்திலும் குறைபாடு.
முதல் கணவரிடத்தில் இருந்து விவாகரத்து வாங்கும் போது தன் மகனுக்கு ஒரு பாதுகாப்பு ஏற்படுத்திக் கொடுக்க நினைத்திருக்கிறார். அப்போ விவாகரத்து காலம தாழ்த்தப்படுதுங்கிறதால "உன்னையும் உன் மகனையும் நான் நல்லா கவனிச்சுக்கிறேன் . ஏன் compensation கேட்டு டிலே பண்றன்னு சொன்னதால ம்யூச்சுவலா விவாகரத்துக்குக் கையெழுத்து போட்டு கொடுத்ததா சொல்றாங்க. இப்போ இவரும் ஏதோ சூழலில் வயிற்றில் ஒரு குழந்தையையும் கொடுத்து விட்டு ஒதுங்கி விட்டார். அந்த ஆற்றாமை தான் பேச்சில் தெரிகிறது. பிள்ளைகளை வளர்த்தெடுக்கும் பொறுப்பு தாய்க்கு மட்டும் தானா? DNA test எல்லாம் இருக்கும் இந்த காலத்திலேயே என் பிள்ளை தானா என்ற கேள்வியை எழுப்புகிறார்கள். அப்போ அந்தக் காலம்??? நினைச்சே பார்க்க முடியவில்லை நம் முது பெரும. கிழவிகள் பட்டிருக்கக் கூடிய பாடுகளை.
தான் பெரிய நடிகர்களுக்கு உடைகளைத் தேர்வு செய்யும் பணியில் இருந்ததாகவும் , ரங்கராஜ் ரொம்ப பொஸ்ஸஸிவ்வாக இருந்ததால் வேலையை விட்டு விட்டு வீட்டிலேயே இருந்து முழு நேரமாக அவரைக் கவனித்துக் கொண்டதாகச் சொல்கிறார்கள்.
அதே போல் ரங்கராஜ் பக்க செய்திகளும் இருக்கலாம். நமக்கு எது உண்மை எது பொய்யென சரியாகத் தெரியாத போது அதைப் பற்றி கருத்து சொல்ல நான் வரவில்லை.
**இந்த நிகழ்விலிருந்து நாம் படிக்க வேண்டிய படிப்பினையை மட்டும் சொல்ல நினைக்கிறேன். நாம் சம்பந்தப்பட்ட என்ன முடிவை எடுக்க வேண்டும் என்றாலும் அதை அடுத்தவர் தீர்மானிப்பதையோ , அல்லது நம்மை அந்த முடிவுக்கு உந்தித் தள்ளுவதையோ நாம் அனுமதிக்கக் கூடாது. **
**நமக்கான முடிவை நாம் தான் எடுக்க வேண்டும். ஏற்கனவே திருமணம் ஆனவருடன் ரிலேஷன்ஷிப்பில் வர நேர்ந்தால் சட்டப்படி பிரிந்திருக்கிறார்களா என்பதை நிச்சயம் செய்து கொண்டே உறவில் இறங்க வேண்டும். At least குழந்தை உண்டாகும் முன்னாவது உறுதி செய்து கொள்ள வேண்டும்.**
எந்த ஒரு கால கட்டத்திலும் அவர்கள் போடும் "தங்கங்களையும், தேவதைகளையும் , அழகிகளையும்" நம்பி நம் வேலையை விட்டு கொடுக்கவே கூடாது. பெற்றவர்கள் எவ்வளவு ஆசையோடு தம் பிள்ளைகளை தம் காலில் நிற்க வைக்கிறார்கள். அதை அவ்வளவு சுலபமாக உதறித் தள்ளி விடக் கூடாது.
சில விஷயங்களை நிர்ப்பந்தித்தால் கூட, ஆரம்பத்தில் நாம் மாட்டோம் என்று அழுத்திச் சொல்லி விட்டால் அவர்கள் அதை ஏற்றுக் கொண்டு விடுவார்கள். அட்லீஸ்ட் இழப்பு கொஞ்சம் குறைவாகவாவது இருக்கும்.
சோஷியல் மீடியா நமக்கு நியாயம் பெற்றுத் தராது. அடுத்தடுத்த விஷயங்களுக்கு மாறி மாறிப் போய்க் கொண்டே இருப்பார்கள். அதனால் சட்டப்படி என்ன செய்ய வேண்டுமோ அதைச் சரியாக செய்த பிறகே ஒரு உறவுக்குள் இறங்க வேண்டும்.
**மூன்றாவது நம் எதிர் பாலினர் அழகாக இருப்பதாலேயே அவர்கள் சொல்வதெல்லாம் உண்மையாக இருக்க வேண்டிய கட்டாயமில்லை. அழகையும் உண்மையையும் இணைத்தே சிந்திக்கிறோம். அதை முதன் முதலாக நிறுத்த வேண்டும். **
கவனமாக இருங்கள். யாருமே 100% அக்மார்க் நல்லவர்களல்ல. 100% நம்பத் தகுந்தவர்களுமல்ல.
உஷாரா இருங்க.
09 November, 2025
#காதலின் இரண்டாம் நிலை
காதலின் முதல் நிலையிலேயே பல காரணங்களால் நிறுத்திக் கொள்பவர்களும் உண்டு. இரண்டு பேருக்கும் ஒருவரை ஒருவர் பிடிக்கும். ஆனா செட் ஆகாதுன்னு மேலே கொண்டு போகல என்பார்கள். நமக்குப் பிடித்தவர்களுக்கு நம்மைப் பிடித்திருக்கிறது என்பதே போதுமானதாய் இருக்கும்.
காதலின் இரண்டாம் நிலை.
இருவருக்கும் பிடித்திருந்தாலும் உள்ளூற ஒரு சந்தேகம் ஊடாடிக் கொண்டே இருக்கும்.
உண்மையிலேயே நம்மைப் பிடிக்குமா? நம்மைப் போலவே பலரையும் பிடித்திருக்குமா? நம்மை நமக்காகவே பிடிக்குமா? வேறு ஏதேனும் hidden agenda இருக்குமா? இது இரண்டு பேருக்கு உள்ளுமே தனித் தனியாய் ஓடும்.
ஆனால் அதை மறைத்தபடியே பழகிக் கொண்டிருப்பார்கள். ஆரம்பப் பழக்கத்தில் எல்லோருமே நல்லவர்கள். தம் எதிர் மறை பகுதிகளை மறைத்துக் கொள்வார்கள். சிலர் நேர்மையாய் இருக்க விரும்புபவர்கள் தம் குறைகளைச் சொல்வார்கள். ஆனால் அந்த ஆரம்ப மோகத்தில் அது பெரிதாய்த் தெரியாது.
நெருக்கமாக இருப்பது போல் தெரிந்தாலும் உள்ளுக்குள் கொஞ்சம் விலகியே இருப்பார்கள். ஆணோ பெண்ணோ இதைப் பெருமையாய் எடுத்துக் கொண்டு பிறரிடம் பறை சாற்றுபவர்களும் உண்டு. இருவருமே வெளியே தெரியாமல் கொண்டு போவதும் உண்டு.
இந்த இரண்டாம் நிலை நீடிக்கும் போது ஆரம்ப ப்ரியம் குறைந்து விலகிக் கொள்வோம் இது நாம் நினைத்த அளவுக்கு அபூர்வமானதல்ல என்று நாகரீகமாக பிரிந்து விடுபவர்களும் உண்டு.
நாம் இருவரும் ஒருவருக்காகவே ஒருவர் படைக்கப் பட்டு இருக்கிறோம். இவர் தான் என் குறைகளை நிறைவு செய்பவர். என் பலவீனத்தில் இவருக்கு பலம். என் பலத்தில் இவருக்குப் பலவீனம் எனப் புரிந்து ஈகோ இல்லாமல் இருந்தாலோ , இல்லை ஈகோ இல்லாதது போல் காட்டிக் கொண்டாலோ காதல் தன் மூன்றாம் நிலைக்கு நகரும்.
07 November, 2025
விளக்கம் சொல்; விலகிச் செல்.
என்னை
அன்பு செய்தாய்.
காதலால்
கனிவித்தாய்.
காரணங்கள் நான்
தேடவில்லை.
இப்போது
விலகிச் செல்கிறாய்.
ஏன்?
ஏன்?
ஏன்?
என அலைபாய்கிறது
மனது.
வலிக்கிறது தோழா
விளக்கம் சொல்.
விலகிச் செல்.
03 November, 2025
இரண்டு நாட்களுக்கு முன் எனக்கு நிகழ்ந்த நிகழ்வு. நான் மாலையில எங்க தெருவிலிருந்து காரை மெயின் சாலைக்கு எடுக்கிறேன். என் அருகில் என் கணவர் அமர்ந்திருக்கிறார். எங்க தெரு முக்கில் நிறுத்தி இரண்டு பக்கங்களும் ஏதேனும் வாகனங்கள் வருகின்றனவா என்று பார்த்துப் பின் சாலையில் ஏறுகிறேன். வலது பக்கம் ஆறு கடைகள் தாண்டி பைக்கில் ஒருவர் வேகமாக வருகிறார். நம் காரைப் பார்க்கவில்லை என்பதைத் தெரிந்து கொண்டு பலமாக ஹார்ன் சத்தமெழுப்புகிறேன். அவர் போதையில் இருந்தாரோ, சிந்தனையில் இருந்தாரோ கவனித்த மாதிரியே தெரியவில்லை. வேகம் சிறிதும் குறையவில்லை. வேகமாக வந்து என் கார் அருகில் சடன் ப்ரேக் போட்டார். தெய்வாதீனமாக மோதவில்லை.
நான் காரை நிறுத்தி ஜன்னல் கண்ணாடியை இறக்கினேன். அவர் ஒரு அருமையான கேள்வியை எழுப்பினார். "பார்த்து வர வேண்டாமா? " எதே!!!
"நான் பார்த்துகிட்டுத் தாங்க வர்ரேன். நீங்க பார்க்கலைன்னு தான் இவ்வளவு சத்தம் எழுப்புறேன். நீங்க பார்க்காம, வேகமா வந்துட்டு என்னை பார்த்து வரக் கூடாதாங்கறீங்க" என்றேன்.
என் கணவரும் "கார் வர்ரதையே கவனிக்காம எவ்வளவு வேகமா வர்ரீங்க" என்றார். அவர் பேசாமல் வண்டியை நகர்த்தி விட்டார். நகர்த்தி கொஞ்ச தூரம் போய் என் காரின் எண்ணை அலைபேசியில் படமெடுத்துக் கொண்டார்.
நான் கார் ஓட்டப் பழகறேன். என் கணவர் சொல்லித் தரார்னு நினைச்சிருப்பாரோ? . என் வண்டி எண்ணை வைத்து தகவல் பார்த்தால் நான் கார் வாங்கி பதினைந்து வருடங்களுக்கு மேலாகிறது. RTO அலுவலகத்தில் இருந்து இன்னும் ஐந்து வருடங்களுக்கு சான்றிதழும் வாங்கியாச்சுன்னு தெரியும். நான் பதிமூணு வருடங்களாக கார் ஓட்டிக் கொண்டு இருக்கிறேன் என்பது பாவம் தம்பிக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. முதல் இரண்டு வருடங்கள் ஓட்டுநர் வைத்திருந்தேன். இடையிடையே கூட்டமில்லாத பகுதியில் மட்டும் நான் ஓட்டுவேன். அப்படியே பழகினேன்.
ஆனாலும் இப்பல்லாம் தப்பு செய்றவங்களை யாரும் கேள்வி கேட்பதில்லையே! அதனால என்னை என்ன கேள்வி கேட்பாங்களோன்னு பயந்து வருது.அடப் போங்கப்பா!!
(பி.கு: கோவையில் பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்த மூன்று பேரையும் பிடித்து விட்டனர். இவர்கள் மேலும் சில கொலை கொள்ளைகளையும் செய்திருக்கலாம் என சந்தேகிக்கப் படுகிறது)
#காதலின் முதல் நிலை
காதலில் பல நிலைகள் உள்ளன. ஒவ்வொரு நிலையாய் கடந்து, after crossing different levels of filteration எஞ்சி நிற்பதென்பது வெகு அபூர்வம். அதைப் புரிந்து கொண்டோம் என்றால் நாம் மறுதலிக்கப் படும் போது இயல்பாய் ஏற்றுக் கொள்வோம். ஆஸிட் ஊற்றுவது, பொதுவெளியில் அவமானப்படுத்துவது, உச்ச கட்டமாய் போய் கொலை செய்வது, போன்றவை நிகழாது.
முதல் நிலை.
காதலில் வெற்றி பெறுவது என்பது அவ்வளவு சுலபமானதல்ல. நாம் நாளும் எத்தனையோ பேரைப் பார்க்கிறோம். எத்தனையோ பேரிடம் பழகுகிறோம். ஆனால் திடீரென்று ஒருவரைப் பிடித்துப் போகிறது. அது அனேகமாக நாம் அடிக்கடி பார்ப்பவருள் ஒருவராக இருக்கலாம். நமக்குப் பிடிப்பவருக்கு நம்மைப் பிடிக்க வேண்டும் என்று அவசியமில்லை. 1) நம்மை அவர் சாதாரணமாகக் கடந்து போகலாம். 2) நம்மை அவருக்குப் பிடிக்காமல் போகலாம். 3) மூன்றாவதாக அவருக்கும் நம்மைப் பிடித்துப் போகலாம்.்
முதல் நிலையில் கொஞ்ச நாள் காத்திருப்போம். அவர் கவனத்தை ஈர்க்க முயற்சி செய்வோம். அங்கேயும் மூன்று நிலைகள் வரும். 1) நம் முயற்சி வெற்றி பெறலாம். அவருக்கும் நம்மைப் பிடித்துப் போகலாம்.
2) நம் கவன ஈர்ப்பு அவரின் வெறுப்புக்குள்ளாக்கலாம்.
3) அவர் அதற்கு பெரிதும் முக்கியத்துவம் கொடுக்காமல் கடந்து போகலாம்.
நம் முக நூலை வைத்தே விளக்குகிறேன். எத்தனையோ பதிவுகளை நாளும் கடக்கிறோம். ஒரு சில ப்ரோஃபைல் படங்கள் பிடிக்கலாம். அவர்கள் பகிரும் புகைப்படங்கள் பிடிக்கலாம். அவர்கள் எழுதும் பதிவுகள் கூட பிடித்துப் போகலாம்.
நம்மை அவர்கள் கவனிக்க வேண்டும் என்பதற்காக குறுஞ்செய்தி " கள்" அனுப்புகிறோம். அதை அவர்கள் just like that கடந்து போகலாம். அவர்களுக்குப் பிடிக்காமல் போய் ப்ளாக் செய்யலாம். அபூர்வமாக பிடித்தும் போகலாம்.
ஒருவரை நமக்கு முதல் பார்வையிலோ முயற்சிக்குப் பின்னோ பிடித்து, அவருக்கு நம்மைப் பிடித்துப் போவது முதல் நிலை. நாளை இரண்டாம் நிலையைப் பார்ப்போம்.
27 October, 2025
#உப்பேய்!! உப்பேய்
உப்பு விற்கப் போனா மழை வந்தது. மாவு விற்கப் போனா காற்றடித்தது என்று சொல்வதைக் கேட்டு இருக்கிறோம்.
அப்படி ஒரு மழை நாளில் மழை நின்ற பொழுதில்
"உப்பேய்!"
"உப்பேய்!"
னு ஒரு குரல். சைக்கிளில் ஒரு சாக்கு மூட்டையை வைத்துக் கொண்டு ஒருவர் கல் உப்பு விற்றுக் கொண்டு வந்தார். இந்த உப்பை விற்று ஒரு மனுஷன் வாழ்க்கையை எப்படி நடத்த முடியும்.
அதை அவரிடமே கேட்போம் என வெளியே போனேன்.
"ஐயா ! உப்பு ஒரு படி எவ்வளவு?"
"ஐம்பது ரூபா"
ஒரு படி கொடுங்கன்னு வாங்கினதும் " ஐயா!எப்படி உப்பு வித்து பொழைக்க முடியுதா? என்ன லாபம் கிடைச்சிடப் போகுது?" என்று கேட்டேன்.
எனக்கு வேற வேல தெரியாதேம்மா. ஒரு சாக்கு உப்பு வித்தா நானூறு ரூபா கிடைக்கும். மூணு நாளா அலையறேன். வித்து முடிக்க முடியல" என்றார்.
மூணு நாளுக்கு நானூறு ரூபாய்னா ஒரு நாளுக்கு நூத்தைம்பது ரூபா கூட வரலையே. இதை வைத்து என்ன சமாளிக்க முடியும்.
கடையிலேயே கல் உப்பும் கிடைக்கிறதால யாரும் எங்க கிட்ட வாங்குறதில்ல. ஆனா நேரா உப்பளத்துல இருந்து வாங்கிட்டு வர்ரோம். இது தான்மா சுத்தம் என்றார். ஒரு படி உப்பு வாங்கினா அடுத்த ஒரு படி எவ்வளவு நாள் கழிச்சு வாங்கப் போறோம்.
நான் ஓய்வுக்கு பின்னரே சிறு தொழில் செய்பவரைத்தான் ஆதரிக்கிறேன். நீங்களும் ஆதரிக்கணும் எனத் தான் இந்த பதிவு.
25 October, 2025
#முறையிட ஒரு கடவுள்
#முறையிட ஒரு கடவுள்
ஆசிரியர் : சர்வோத்தமன் சடகோபன்
மணல் வீடு பதிப்பகம்.
விலை : ரூ 150/-
முதல் பதிப்பு : டிசம்பர் 2020
*****
இது ஆசிரியரின் முதல் சிறு கதைத் தொகுப்பு. 14 சிறுகதைகளை தொகுத்திருக்கிறார்.
முதல் கதை தஸ்தாயெவ்ஸிகியின் புத்தக சாலை. இதில் நான் ரசித்த வரி ஒன்று உண்டு. "பார்வதி பேரழகி என்று சொல்ல முடியாது. கண்டிப்பாக அழகி. சிரிப்பதை ஙிட சிரிக்க முற்படும் தருணங்கள் அற்புதமானவை" கட்டுப்படுத்தி வரும் ஒரு கள்ளச் சிரிப்பு என் கண் முன் வந்தது.
2) ஷெனாய் கசிந்து கொண்டிருந்தது அடுத்த கதை. நன்கு படித்து நல்ல வேலையில் அமர்ந்து நன்கு சம்பாதித்துக் கொண்டிருந்தவர் ஸ்ரீநிவாச ராவ். அதை விட்டு தன் ஊருக்கே வந்து விவசாயம் பார்க்கிறார்.தன் வீட்டிற்கு வரும் ராஜன் என்பவரை யார் என்ன காரியமாக வந்தார் என்பதைக் கேட்காமலே ஏற்றுக் கொள்கிறார்.
விஞ்ஞானத்தால் எதுவும் செய்ய முடியாது என்ற தன் தந்தையின் கருத்தை ஏற்றுக் கொள்ள முடியாமல் வீட்டை விட்டு வெளியே வந்தவர் ராஜன். ஸ்ரீநி தன் மகன் உயிரைக் காக்காத நவீன மருத்துவத்தின் மேல் கொண்ட வெறுப்பால் உத்தியோகம் துறந்து கிராமம் வந்தவர். ராஜனின் தந்தையும் இறந்து போனார். ஸ்ரீநியின் மனைவி தன் மகன் இறந்த துக்கத்தில் தன் உயிரை மாய்த்துக் கொண்டவள். "பெண்களுக்கு குழந்தைகள் பிறந்த பின் கணவன் ஒரு பொருட்டே இல்லை" என்கிறார். ஓரளவு உண்மையாகக் கூட இருக்கலாம். இல்லையென்றால் தன் கணவனின் துயரம் பற்றி சிந்திக்காமல் தற்கொலை செய்வாளா?
விவசாயம் பற்றி அதிகம் தெரியாது. ஆனாலும் என்ன நம் முன்னோர்கள் செய்த தொழில் தானே என்கிறார். என் தோழி விவசாய விருது பெற்றது மனதில் எழுகிறது. எனக்கு ரொம்ப பிடித்த கதை இது. எது சரி எது தவறு என்று குழம்பும் இன்றைய மன நிலை.
3) பூதக் கண்ணாடி. கதவை அவ்வளவு சிலாகித்து எழுதுகிறார். கதவு வழியே மட்டுமே நம்மால் உள்ளே போகவும் முடியும். வெளியே வரவும் முடியும். சுவரில் இது சாத்தியமில்லை என்கிறார். எனக்கு சுவர் போல ஒருவரையும் பக்கம் வர விடாத , இறுதி வரை தனக்கைன யாருமே இல்லாத மனிதர்களை நினைக்கத் தோன்றியது.
4) நீலம் என்ற கதை கொஞ்சம் தெளிவில்லாமல் இருந்தது. வெங்கடனை மீரா விரும்புவது போல் தான் வருகிறது. மீரா என்பது இந்துப் பெயர் தான். பின் யாருக்காக இஸ்லாத்துக்கு மாறுகிறான். ரஹ்மத்துல்லாஹ் என்று பெயர் மாற்றம் செய்கிறான்.அதை விசாரித்த போது மீராள், மீரான் என்று பெயர் முஸ்லிம்கள் வைப்பார்கள் என்றும் மீரா என்று அழைப்பார்கள் என்றும் சொன்னார்கள்.
11) மனப் பிறழ்வு பற்றிய கதை "பிளவு" மன அழுத்த துயரத்தை கடந்து வந்தவர்களால் இதை நன்கு உணர முடியும்.
12) " உலவ ஒரு வெளி" இதைக் கதை என்பதை விட கட்டுரை எனலாம். இது எண்கள் சூழ் உலகு என்கிறார். உண்மை. தன் ஊரில் தான் இங்கே செல்லக் கூடாது அங்கே செல்லக் கூடாது என்ற கட்டுப்பாடு என்றால் விடுதியிலும் அதையே சந்திக்கும் போது எனக்கு உலவ ஒரு வெளி கொடுங்கள. என்று கேட்கிறார்.
14) தனிப் பெருங் கருணை: ஒரு பொறுப்பற்ற பையனாக ராமனைக் காட்டிக் கொண்டே வருகிறார்கள் ஆனால் ஒரு சண்டையில் அவன் நேர்த்தியைப் பார்த்து துருகன சொன்ன பிறகு தன்னைப் பற்றி சிந்துத்து பொறுப்புள்ளவனாக மாறுவதாக வருகிறது. எங்கும் திறமைகள் யாரோ ஒருவரால் தான் கண்டு பிடிக்கப்பட்டு மெருகேறுகிறது.
நேற்று (25.10.2025) இல் பிச்சிவனத் தெரு, பாளையங்கோட்டையில் இந்த புத்தகம் பற்றி பேசினோம். விவசாயத்தையோ வேற எந்த தொழிலையோ புனிதப்படுத்திப் பேசுதல் அவசியமில்லை என்று ஒருவர் சொன்னார். விவசாயத்தில் வெற்றி பெற்றவர் கணக்கு இருக்கிறது தோற்றுப் போய் பழைய வேலைக்கே திரும்பிப் போனவர் கணக்கு இல்லை என்றார். சரியென்றே தோன்றியது.
24 October, 2025
#பைசன் காளமாடன்.
இயக்குநர் : மாரி செல்வராஜ்.
இசை : திவாஸ் கே பிரசன்னா
முக்கிய நடிகர்கள் : துருவ் விக்ரம், பசுபதி, அனுபமா பரமேஸ்வரன், ரஷிஜா, அமீர், லால்
ஒளிப்பதிவு: எழில் அரசு கே.
ஏற்கனவே இரண்டு படங்களில் நடித்து அதிகம் பேசப்படாமல் இருந்த துருவ் இதில் பாய்ச்சல் காட்டி இருக்கிறார். கபடி விளையாட்டில் இவர் உடல் மொழி காளை மாட்டினை மனதில் வைத்துக் கொண்டு செயல்பட்டது போலவே தோன்றியது. இரண்டு கால்களையும் மாற்றி மாற்றி அடவு கட்டுவது போல் வைத்து பாய்வது, தலையாலேயே முட்டித் தள்ளி ஒருவன் முதுகு வழியாக குதித்து வந்து கோட்டைத் தொடுவது போன்ற செயல்கள் அந்த கபடி வீரனைத் தனித்துக் காட்டியது. ஒரு கபடி வீரனுக்கே உரிய கட்டு மஸ்தான உடம்பு.
மனதில் இடறிய ஒரே விஷயம். கபடிக்கே உரித்தான சிறப்பு கபடி, கபடி, கபடி, கபடி என மூச்சு விடாமல் ஏதாவது ஒரு பாடலுடன் சொல்லியபடியே ஓடி எதிர் தரப்பினரைப் பிடிப்பது தான். இடையில் மூச்சு வாங்கி விட்டாலும் தோற்றதாக அர்த்தம். கபடியின் அழகே அது தான். அது மிஸ்ஸிங். மாரி செல்வராஜின் பதிவிலேயே இந்த கேள்வியை எழுப்பி உள்ளேன். பதில் சொன்னால் காரணத்தை புரிந்து கொள்ளலாம்.
இந்தக் கதையில் காதலைச் சொல்லாமலும் இருக்கலாம். ஆனால் எல்லா மனிதனின் வாழ்விலும் ஏதோ ஒரு காதல் கண்டிப்பாக இருக்கும். ஒன்றுமே இல்லாத இடத்தில் கூட ஒரு தலைக்காதல் இருக்கும். கதை நாயகனை விட ஒரு சில வயது கூடிய , தன் இனத்தையே சேர்ந்த பெண் மேல் உள்ள மெல்லிய காதல் மிக அழகாக சொல்லப் பட்டு இருக்கிறது. அந்தப் பெண்ணின் அண்ணன் ரொம்ப இயல்பாக நடித்திருக்கிறார்.
இரண்டு மலையாள நடிகைகள் ஒருவர் கிருட்டினா ( துருவ்) வின் காதலியாகவும், மற்றொருவர் அக்காவாகவும் நடித்திருக்கிறார்கள். ஏன் மலையாள நடிகைகள் எனச் சிலர் கேள்வி எழுப்பி இருக்கின்றனர். ஏன் கூடாது? தமிழ் மைந்தர்கள் அந்நிய மாநிலப் பெண்களைக் கொண்டாடி உயர் அந்தஸ்து கொடுத்தவர்கள் தானே. உதாரணம் குஷ்பூ, நயன்தாரா, நஸரீன், சிம்ரன், ஜோதிகா என இந்த வரிசை நீளுமே. மிகச் சிறப்பாக நடித்தும் ஓரளவே ஜொலிக்க முடிந்த ஐஸ்வர்யா ராஜேஷ் போன்ற தமிழ் நடிகைகளும் இருக்கிறார்களே. நாம் ஏன் இந்த கேள்வியை எழுப்ப வேண்டும். இதற்கான பதிலை படத்திலேயே சொல்லி விட்டார். எதிர்க்கத் தான் செய்வார்கள். அத்தனை எதிர்ப்பையும் மீறித் தான் நீ ஜெயித்து வர வேண்டும் என. தன் நாயகனை சொல்ல வைத்த மாரி தனக்கும் இதையே தான் சொல்லிக் கொள்வார் என நினைக்கிறேன்.
வன்முறை மிக அதிகம். ஒழிந்து போன ஜாதிப் பாகுபாடை ஏன் கிளறுகிறார் என மனம் கூசாமல் கேட்கிறார்கள். பொட்டு வெடி வெடிப்பது போல் சுட்டுத் தள்ளுவதும் மனித சடலங்கள் சரமாரியாய் சரிந்து விழுவதையும் ரசித்துப் பார்ப்பவர்கள் இந்தக் கேள்வியை எழுப்புவது தான் ஆச்சர்யம்.
அமீர் , லால் இருவரும் முக்கியமான கதாபாத்திரங்களை எடுத்து வாழ்ந்திருக்கிறார்கள். இவர்களின் பேச்சு, உடல்மொழி, தோற்றம் போன்றவற்றில் அதிக அக்கரை தெரிகிறது.
இயக்குநர் சிகரத்தின் படங்களில் வரும் சின்ன சின்ன பாத்திரங்கள் கூட மனதில் நிலைத்து நிற்கும். மாரி செல்வராஜின் படங்களிலும் அது போலவே. இயக்குவதில் அபாரத் திறமை பளீரிடுகிறது. இரத்தம் அதிகமாகக் காட்டப்படுவது போல் தோன்றினாலும் மனதில் பதிய வைக்க கலையில் கொஞ்சம் அதிகப்படி அனுமதிக்கப் பட்டது தானே.
எனக்குப் பிடித்த இன்னொரு உத்தி. பைஸன் விளையாட ஜப்பானுக்குச் சென்றதை முதலில் காட்டி விட்டு அதன் பின் அதற்கான வழியில் பட்ட சிரமங்களைச் சொல்லும் போது எப்படியும் மீண்டு விடுவான் என்பது தெரிந்து விடுவதால் ஆசுவாசமாக பார்க்க முடிகிறது. இது தான் என் தேர்வும். கதையின் முடிவு தெரிந்து விடுவது என் ரசிப்பைப் பாதிக்காது. ஓ! இதற்காகத் தான் இதைச் சொல்லி இருக்கிறாரா என்று எழுத்தின் அழகை ரசிக்கக் கூட முடியும் என்னால்.
பதிவு நீள்கிறது. ஆனாலும் ரசித்த விஷயத்தை சொல்லாமல் விட முடியாது. பசுபதி துருவ்வின் அப்பாவாக ஒரு கனத்த பாத்திரத்தை எடுத்து நடித்திருக்கிறார். மிகச் சரியான தேர்வு. கடைசி கடைசியாக காவலர்களின் காலில் விழுந்து கெஞ்சும் போது கண் கலங்கி விடுகிறது நமக்கு.
இசை படத்தின் உணர்வை கொஞ்சமும் பாதித்து விடாமல் பயணித்திருக்கிறது. "சாமக் கொடை தொடங்கிடுச்சு ராசா( பாடியவர் வி.எம் மகாலிங்கம்) "தென்னாட்டு தேசத்தில் வாழும் கூட்டம் ( பாடியவர் சத்யன்)" "ராசாத்தி ஒன் நினைப்பு கருவக் காட்டு முள்ளாச்சுடி(பாடியவர் நிவாஸ் கே பிரசன்னா) " "அத்தி வானக் காட்டுக்குள்ளே ( பாடியவர் அறிவு & வேடன்) ": " சின்ன சின்ன சீனிக்கல்லு ( பாடியவர் சின்மயீ)" பாடல்கள் என்னை மிகவும் ஈர்த்தன. இசையும் படமாக்கப்பட்ட விதமும் அவ்வளவு அழகு. ஒளிப்பதிவும் மிகச் சிறப்பு.
அர்ச்சுனா விருது பெற்ற மனத்தி கணேசன் வழ்க்கையைத் தழுவி எடுக்கப்பட்ட கதை. ஒரு வீரன் உருவாவது என்பது சாதாரண காரியமல்ல. அவன் தேர்வில் அரசியல் விளையாடி விடக் கூடாது. இது அன்றும் இன்றும் என்றும் ஏற்றுக் கொள்ள வேண்டிய உண்மை தானே. படம் முடிந்து மிகவும் கனத்த மனதோடு தான் வெளியே வந்தேன்.
மதிப்பெண் : 4.5/5
22 October, 2025
அமேசான் ப்ரைம் ",தணல்'
தமிழ்ப்படம்
இயக்குநர் : ரவீந்திர மாதவா
முக்கிய கதாபாத்திரங்கள் : அதர்வா, அஸ்வின், லாவண்யா திரிபாதி
ஒரு சில யூட்யூபர்களுக்கு சின்ன சின்ன பாத்திரங்கள் கொடுத்திருக்காங்க. அதற்கு பாராட்டுகள். முக்கியமாக ஒரு பாட்டியும் பேரனும். பாட்டி இந்த வயதுக்கு ரொம்ப எனர்ஜி. ஆனால் ரொம்பவே சின்ன ரோல். பேரன் அதர்வா கூட கான்ஸ்டபிளாக நெடு நேரம் வருகிறார்.
நல்லா படம் எடுத்தாலும் ஒரு சிலரை திருப்திப் படுத்துவதற்காக சண்டை, கவர்ச்சி நடனம் என இடையில் வைப்பார்கள் ஒரு காலத்தில். இப்போ படம் தொடங்கினதும் ஒரு பெரிய சண்டைக் காட்சியை வைத்து அதன் பின் அருமையான காதல் காட்சிகளை சேர்க்கிறார்கள். கசப்புக்குள்ளே இனிப்பைப் புகுத்தும் முறை.
+2 தேர்வாக முடியாமல் படித்துக் கொண்டே இருக்கும் ஹீரோ. குரூப் 1 இல் தேர்வாகும் ஹீரோயின். இவர்களுக்கிடையேயான காதலே என்னைப் பொருத்த வரை ஆதரிக்கக் கூடாத ஒன்று. நீ தான் என்னை நல்லா பார்த்துப்ப வா நாம போய் திருமணம் செய்துக்கலாம் என்று ஒரு படித்த பெண் தன் அளவுக்கு படிப்பு இல்லாத ஒருவரிடம் சொல்வது ரொம்ப மோசமான ஒரு உதாரணம். அபூர்வமாக ஒன்றிரண்டு பேர் வாழ்க்கையில் சோபிக்கலாம். அதற்கு ஆணுக்கு ஒரு தெய்வீக மனம் வேண்டும். தன்னை விட எல்லா விதங்களிலும் உயர்ந்த பெண்ணை காம்ப்ளக்ஸ் இல்லாமல் ஏற்றுக் கொள்ளும் மனப்பான்மை இன்று வெகு சிலருக்கே இருக்கிறது.
அதர்வாவுக்கும் லாவண்யாவுக்கும் இடையேயான கெமிஸ்ட்ரி ரொம்ப நல்லா இருக்குது. அந்தப் பொண்ணு நடிகை ரத்தி அக்னிஹோத்ரியின் சாயலில் இருக்குது.
வில்லன் குழு நிறைய வங்கிகளை ஒரே நேரத்தில் கொள்ளையிட துணிகிறார்கள். தற்செயலாக ரவுண்ட்ஸ் செல்லும் அதர்வா குழுவினர் தெரிந்து கொள்கிறார்கள். இருட்டுப் பின்னணியில் ஒரு சில நிமிடங்கள் காட்சிப்படுத்துவது வேண்டுமானால் இயல்பாய் இருக்கும். இவ்வளவு அதிக நேரம் போவது கண்ணுக்கு எரிச்சலாய் இருக்கிறது.
படம் ஆரம்பிக்கும் போது ஒரு சண்டை வந்ததே அதற்குத் தொடர்பான அஸ்வினின் ப்ளாஸ்பேக் கதை ஒரு கார்ட்டூன் படம் போலப் போடப்பட்டு சொல்லப்படுகிறது. இதுவும் இப்போது அடிக்கடி காணப்படும் ரசிக்க முடியாத ஒரு செயல் முறை. நாம என்ன சின்ன பிள்ளைகளா கார்ட்டூனில் கதை சொல்ல.
நாம் வில்லன் என நினைப்பவர் உண்மையில் வில்லன் இல்லை. கண்களை நனைக்கும் படத்தின் இரண்டாவது பகுதியை உங்களுக்குச் சொல்லாமலே விட்டு விடுகிறேன்.
படம் பார்க்கலாம். (3.5/5)
17 October, 2025
நாவல் : மானசரோவர்.
ஆசிரியர் : அசோகமித்திரன்.
காலச்சுவடு பதிப்பகம்.
விலை ரூபாய் 275/-
பக்கங்கள் : 215
முதல் பதிப்பு : டிசம்பர் 1989
கதை நிகழ்ந்த கால கட்டத்தில் பண்டிட்ஜி நேரு இறந்ததாக வருகிறது. அதாவது 1964 இல் நடந்த கதை. ஆனால் இந்த கால கட்டத்துக்கும் பொருந்துவதாகவே வருகிறது.
இரு நண்பர்களின் ஆத்மார்த்த நட்பு. அதில் ஒருவர் பிரபல நடிகர் சத்யன். மற்றவர் திரைக்கதை எழுதும் கோபால் . நடிகருக்கு அத்தனை பேரும் உச்ச பட்ச மரியாதை கொடுக்கிறார்கள். ஆனால் அவர் அதிகம் மதிப்பவர் கோபால்ஜி. அதனாலேயே தனக்கு சமமான மரியாதை அவருக்கும் கிடைக்க வேண்டும் என அழுத்தம் கொடுப்பவர் சத்யன்.
கதையை பகுதி பகுதியாக பிரித்து எழுதி இருக்கிறார். ஒரு பகுதியில் சத்யன் சொல்வது போல் வரும். அடுத்த பகுதியில் கோபால் தன்னிலையில் சொல்வது போல் வரும். இரண்டும் மாறி மாறி வரும். அது வாசிப்பதற்கு புதுமையாய் இருந்தது.
ஒரு சில பகுதிகள் நெஞ்சின் மறவா பகுதியில் உறைந்து விட்டன.
கோபால் சினிமாத் துறையில் இருப்பதால் அவருக்கு பல பெண்களுடன் தொடர்பு இருக்கலாம் என மனைவிக்கு சந்தேகம். அந்த சந்தேகம் ஒரு நாள் வெடித்து மன நிலை பிறழ்ந்த நிலைக்கு போய் விடுவார்கள். அந்த சமயம் அவர் மகனுக்கு சரியான காய்ச்சல். வீட்டைப் பூட்டி அவர் மருத்தவரை அழைக்கச் சென்று திரும்பி வரும் போது மகன் இறந்திருப்பான். முகப் பகுதியில் தலையணை இருக்கும். மூச்சுத் திணறி இறந்திருப்பான். மற்றவர்களிடம் அதை மறைத்த கோபால்ஜி தயங்கித் தயங்கி தனிமையில் தன் நண்பன் சத்யனிடம் சொல்லுமிடம்.
சியாமளா சினிமாவில் உப நடிகை. தன் கணவன் செய்த கொடுமையின் காரணமாக அவனை விட்டுப் பிரிந்து ராமநாதனுடன் வாழ்ந்து வருவாள். சத்யன் அவளை முதன் முதல் பார்த்தது கோபால்ஜியின் மகன் இறந்த வீட்டில். அசந்தர்ப்ப வசமாக அந்த நேரத்தில் அவள் மேல் அதிக ஈர்ப்பு வரும். அதன் பின் பார்க்கும் சந்தர்ப்பங்களில் ஈர்ப்பு கூடுமே ஒழிய குறையாது. சத்யன் பம்பாய்க்கு திரும்ப வேண்டிய நேரத்தில் அவளிடம் சொல்வார்.்" நீங்கள் உங்கள் குழந்தையுடன் கண்டிப்பாக பம்பாய்க்கு வர வேண்டும். வந்தால் நான் மகிழ்ச்சி அடைவேன்"
அவள்: நான் ஏன் பம்பாய் வர வேண்டும் என அதற்கு சத்யனின் பதில் " வீட்டுக்காரி ஆவதற்கு"
எவ்வளவு சுருக்கமாக அவள் மேல் தனக்கு இருக்கும் ஈடுபாட்டை சொல்லி முடிக்கிறார்.
நிறைய பேர் வாசித்திருக்கலாம். வாசித்தவர்கள் தங்கள் கருத்தைப் பகிருங்கள். தேடி வாசிக்க வேண்டிய புத்தகம்.
15 October, 2025
#மகள்
மகள்கள் என் தேவதைகள்
எனக்கு ரெண்டு பெண் குழந்தைகள்.
எனக்கு ரொம்ப குற்ற உணர்ச்சி உண்டு.
[ ] காதல் திருமணம் செய்ததால் அந்த பெண் குழந்தைகளை வயிற்றில் சுமந்த போது சரியான போஷாக்கோ கவனிப்போ கொடுக்கவில்லை என்று.
[ ] பெரிய மகள் இன்று ஏதாவது உடல் பிரச்னை சொன்னால் எனக்கு கவலைப் புழு போல் குடைகிறது. அந்தத் தவறை செய்திருக்கக் கூடாதோ. இன்னும் கொஞ்ச காலம் காத்திருந்து வயிற்றில் பிள்ளையைத் தாங்கி இருக்கணுமோ. சரி செய்ய முடியாத தவறைச் செய்து விட்டேனே. அந்த மகள் வயிற்றில் இருக்கும் போதே , நான் கவலைப்படும் போது முட்டி முட்டி ஆறுதல் சொன்னவள். இன்றும் எங்களுக்கு ஒன்று என்றால் ஆண் பிள்ளை போல் எங்களைப் பற்றி சிந்திப்பவள். இவள் தேவதை அல்லாமல் வேறென்ன.
[ ]
இரண்டாவது மகள் நான்கு வருடம் கழித்து நாங்க கொஞ்சம் ஸ்டெடி ஆகிக்கிட்ட பின்னால தான் உண்டானாள். ஆனாலும் நெல்லையில் இருந்து நாகர்கோயிலுக்கு தினம் ரயில் பயணம். நிலையத்திலிருந்து அலுவலகத்துக்கு அரை மணி நேரம் நடைப் பயணம். குழந்தை ஆரோக்கியமாக பிறந்தது என்றாலும் அலைக்கழிப்பு.
ஒரு நாள் டிரெயின் புறப்பட்டு விடுமோ என்ற பதற் றத்தில் நிலையத்தில் கவுத்துப் போட்ட "ப" போல் கிடக்குமே சரளைக்கற்கள் அதன் மேல் வயிற்றுப் பிள்ளையோடு ஏறி , இறங்கி போன அனுபவம் இன்றும் நினைத்தால் அடி வயிறு கலங்கும்.
அதற்கு ஈடு செய்யும் விதமாய் என் மகள்கள் பிள்ளை உண்டான போது ஆகச் சிறந்த கவனிப்பு செய்து என் குற்ற உணர்ச்சியைக் கொஞ்சம் தணித்துக் கொண்டேன்.
பாசமும் பரிவும் என் பிள்ளைகள் எனக்கு வாரி வழங்குகிறார்கள். அதுவும் நான் பலவீனப்படும் நேரத்தில் பக்க பலமாய் நிற்கிறார்கள். அது தான் இன்னும் கொஞ்ச காலம் கூடுதலாய் வாழ்ந்து என் கடனைக் கழிக்க வேண்டும் என்ற உந்துதலைத் தருகிறது.
11 October, 2025
படம் பெயர் : Hrithayapoorvam
OTT : Hotstar.
இயக்குநர் : சத்யன் அந்திகாடு.
முக்கிய கதாபாத்திரங்கள் : மோகன் லால், சங்கீதா, மாளவிகா மோஹனன், சித்திக் , லாலு அலெக்ஸ், சங்கீத் ப்ரதாப்.
மோகன்லால் பெயர் சந்தீப் பாலகிருஷ்ணன். அவருடைய இதயம் பழுதடைந்ததால் , இறந்த ஒருவருடைய இதயம் சந்தீப்புக்கு பொருத்தப்படுகிறது. "சென்னையில் ஒரு நாள்" படத்தில் அந்த இதயம் குறைந்த நேரத்துக்குள் எப்படி அடுத்தவருக்கு வைக்கப் பட்டது என்பதை தமிழில் படமாக்கி இருந்ததைப் பார்த்திருக்கிறோம்.
தன் தந்தையை அன்பு செய்யும் மகள் அந்த இதயத்தை மாற்று அறுவை சிகிச்சை செய்ததால் தன் தந்தையை சந்தீப்பிடம் கண்டால் என்ன நடக்கும் என்பதை மலையாளத்தில் படமாக்கி இருக்கிறார்கள். மனித மனத்தின் மெல்லிய உணர்வுகள் , தான் அன்பு செய்த ஒருவரின் இதயத்தை சுமந்து இருப்பதே அடுத்தவரையும் அன்பு செய்ய போதுமானது என்பதைக் காட்டும் காட்சிகள் படத்துக்கு இனிமை சேர்க்கின்றன.
இதய மாற்று அறுவை சிகிச்சை செய்த ஒருவர் படத்தின் ஹீரோவாக இருக்கிற காரணத்தாலேயே எல்லோரையும் அடித்து துவம்சம் செய்வது, ரொம்ப இயல்பாக எடுக்கப்படும் மலையாளப் படங்களுக்கு முரணாகத் தெரிகிறது.
இறந்தவரின் மனைவியாக சங்கீதா நடித்திருக்கிறார். அட! நம்ம சங்கீதாங்க. நடிகர் விஜய்யின் ஆரம்ப காலப் படங்களில் ஜோடியாக நடித்தாரே அவரே தான்.
சந்தீப் ஒரு cloud kitchen நடத்துகிறார். Cloud kitchen என்னும் கான்செப்ட் நமக்கு அறிமுகப்படுத்தப் படுகிறது.
தான் மிகவும் நேசித்த தந்தையின் இதயத்தை தாங்கி நிற்கும் சந்தீப் தன் நிச்சயதார்த்த நிகழ்வில் பங்கு கொள்ள வேண்டும் என விரும்புகிறாள் மகள். அவளின் வற்புறுத்தலால் செல்லும் இடத்தில் அடிபட்டு அங்கே அதிக நாள் இருக்க நேர்கிறது. சந்தீப்பை முழு நேரமும் கவனித்துக் கொள்ள ஒரு ஆண் அட்டன்டட்டும் கூடவே இருக்கிறார். அவர் கட்டுப்படுத்துவது ஆரம்பத்தில் சந்தீப்புக்கு கோபத்தை வரவழைத்தாலும் போகப் போக நண்பர்களாகிறார்கள்.
மெல்லிய நகைச்சுவை படம் முழுவதும் அலையாடுவது. நிச்சயதார்த்த நிகழ்வு கோலாகலமான ஆட்டம் பாட்டம்களுக்கு இடம் கொடுப்பது. எல்லாம் சேர்ந்து கதையின் கனத்தைக் கொஞ்சம் நிரவி இடுகிறது.
சுயநலம் நிறைந்த மனிதர்களுக்கு நடுவே , இரத்த தானம், உடல் தானம், உடல் உறுப்புகள் தானம் கொடுக்கும் உயர்ந்த உள்ளங்களும் இருக்கத் தான் செய்கின்றன. இறந்தவர்களை எரித்து , ஒரு பிடி சாம்பலாய் கரைத்து விடாமல் தானம் கொடுத்து இன்னொரு உயிரை வாழ வைக்க உதவலாம் என்ற நல்ல எண்ணத்தை விதைத்த வகையில் இந்த படத்துக்கு வாழ்த்துச் சொல்லலாம் பார்ப்பதன் மூலமாக.
10 October, 2025
செல்ஃபி எடுக்கும் தம்பி பெயர் மதார். கவிஞர் மதார். இவருடைய முதல் கவிதைத் தொகுப்பு வெளியிட்ட பெருமை எனக்கு உண்டு. அதன் பின் கொஞ்ச காலம் இடைவெளி. இப்போ தொடர்ந்து எழுதுகிறார். "வெயில் பறந்தது" " மாயப் பாறை" என்ற இரண்டு கவிதைத் தொகுப்புகள் வெளியிட்டிருக்கிறார்.
ஒரு வாட்ஸ் அப் குழு வைத்து மாதம் ஒரு புத்தகத்தைப் பற்றி பேசிகிறார்கள். கடைசி சனிக்கிழமை அன்று இந்த கூட்டம் கூடுகிறது. செப்டம்பர் மாதம் நடக்க வேண்டிய கூட்டம் வசதி இன்மையால் அக்டோபர் முதல் சனியன்று நடந்தது.
எனக்கு வாய்ப்பிருந்ததால் கலந்து கொண்டேன். சிறிய குழு தான். 100 சதம் வாசிப்பில் ஆர்வமுள்ளவர்கள். இவர்களின் ஆழமான வாசிப்பு ஆச்சர்யத்துக்குள்ளாக்கியது. தாம் சொல்வதற்கு தொடர்புடையவற்றை வேற நாவலில் இருந்து வரிகளைச் சொல்லி என்னை வியக்க வைத்தார்கள்.
அன்று வந்திருந்தவர்கள்.
சாமுவேல் - ரயில்வே பணி
தீவிர வாசிப்பாளர்
சுடலைமுத்து - வாசிப்பில் தீவிரமானவர். தமிழ் அயல் இலக்கியங்களைக் கரைத்துக் குடித்தவர். இவரது ஞாபக சக்தி பார்த்து ஆச்சர்யப்பட்டுப் போனேன். பேசத் தான் தயக்கமாக உள்ளது என்றார். இந்த சிறிய குழுவில் பேசி பழகிக் கொள்ளுங்கள் என்று சொல்லி வந்தேன்.
இளங்காமணி - பேராசிரியர், ஆய்வில் ஈடுபாடுள்ளவர். மூன்று ஆய்வு நூல்களை எழுதியுள்ளார்.
மதார் - கவிஞர், 2 கவிதைத் தொகுப்புகள் எழுதியுள்ளார்.
பேசப்பட்ட புத்தகம் அசோகமித்திரன் எழுதிய " மானசரோவர்" அங்கேயே நண்பர் சாமுவேல் அந்தப் புத்தகம் இரவல் தர நான் வீட்டுக்கு வந்து வாசிக்கத் தொடங்கி விட்டேன். நன்றி சாமுவேல்.
இந்த மாதத்தில் வாசிக்க வேண்டிய புத்தகத்தை வாங்கிக் கொள்ளலாம்.
அங்கங்கே சிறியதும் பெரியதுமாய் தாமரைப் பூக்கள் மலர்ந்து கொண்டு தான் இருக்கின்றன நெல்லை என்னும் பெருங்குளத்தில்.
08 October, 2025
#விழித்தெழு இளைஞனே!!
இளைஞனே!!
விழித்தெழு!!
உன் வயதில்
விவேகானந்தர்
என்னவெல்லாம்
செய்திருந்தார்
எண்ணிப் பார்.
கண் சிமிட்டும்
விளக்கின் ஒளியில்
நீ ரசிக்கும் முகம்
நாயகனாக
இருக்கும் வரை சரி.
தலைவனாக
இருக்கும் போதுமா?
ஆணானாலும்
பெண்ணானாலும்
அழகுக்கு ஏன்
இப்படி
அடிமைப் பட்டு
கிடக்கிறாய்.
உன் குருதியில்
உருப்பெற்று
கண்கள் ஒளிர
சிரிக்கும்
உன் மழலைகளை
விட அழகு
உலகில் எவருக்குண்டு.
கண்ணுக்குத்
தொலைவிலிருக்கும்
அழகில் மயங்காதே!!
அருகில் போனால் தான்
அந்த நிலவின்
மேடு பள்ளங்கள்
புலப்படும்.
அறிவை மயக்கும்
காந்தத்திலிருந்து
எட்டியே நில்.
புத்தியோடு
பிழைத்துக் கொள்.
01 October, 2025
#நேரம் தவறாமை
# நேரம் தவறாமை
ஒருவரிடமிருந்து பணத்தைக் கொள்ளை அடித்தால் எவ்வளவு பெரிய தவறோ அதை விடப் பெரிய தவறு பிறருடைய நேரத்தைக் கொள்ளை அடித்தல். ஆனால் முன்னதற்கு தண்டனை உண்டு. பின்னதற்கு இல்லை.
நாம் சாதாரணமாகவே பார்க்கிறோம். எந்த ஒரு கூட்டமும் சொன்ன நேரத்துக்கு தொடங்குவதில்லை. இன்னும் கொஞ்சம் ஆட்கள் வரட்டும்னு கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் கடந்து கூட தொடங்குவதுண்டு. நான் சொன்னது சாதாரணக் கூட்டங்கள். சிறப்புக் கூட்டங்கள் இன்னும் கூட நேரமாகலாம்.
அதிலும் சிறப்புப் பேச்சாளரை கடைசியாகத் தான் பேசச் சொல்வார்கள். அவர்களுக்காகத் தான் மக்கள் இருப்பார்களாம்.
புத்தக கண்காட்சிகளிலும் சில புத்தக வெளியீடுகளிலும் இதனாலேயே எனக்கு நல்ல பேச்சாளர்களின் பேச்சைக் கேட்க முடியாமல் போனதுண்டு. நான் நிகழ்ச்சி தொடங்குவதாகச் சொன்ன நேரத்துக்கு போயிருப்பேன். எனக்கு attoted time ஆன இரண்டு மணி நேரம் முடிந்திருக்கும். கிளம்பி விடுவேன். இதனால் உனக்குத் தானே பாதிப்பு என்றால் பரவாயில்லை அந்த பேச்சைக் கேட்க யூட்யூப் போல இப்போ எத்தனையோ வழிகள் இருக்கின்றன.
என்னிடம் ஒரு சிலர் கேட்பதுண்டு. உங்களால் எப்படி இவ்வளவு விஷயங்களில் செயல்பட முடிகிறது என. அதற்கு முக்கிய காரணம் நேரப் பங்கீடு தான். இதற்கு பழகி விட்டால் நம் உடலே ஒரு கடிகாரமாகி இந்த காரியத்துக்கான நேரம் முடிந்து விட்டது என சொல்லி விடும். நான் ஒரு புத்தகம் அரை மணி நேரம் படிக்க வேண்டும் என்றோ, ஒரு திரைப்படம் OTT இல் அரை மணி நேரம் பார்க்க வேண்டும் என்றோ நினைத்திருப்பேன். போதுமே முடிச்சிடுவோமான்னு தோணும் போது கிட்டத்தட்ட அரை மணி நேரம் ஆகி இருக்கும். இதற்கு Biological clock என்போம்.
எனவே இனி ஒரு முடிவெடுப்போம் . எந்த ஒரு நிகழ்வுக்கும் குறித்த நேரத்தில் செல்வோம். அதை விட முக்கியம் நிகழ்வுகளை குறித்த நேரத்தில் தொடங்குவோம். ஒரு முறை ஒரே ஒரு முறை குறித்த நேரத்தில் தொடங்குங்கள் வந்தவர்கள் குறைவாக இருந்தாலும். அடுத்த கூட்டத்துக்கு அத்தனை பேரும் சரியான நேரத்தில் வந்து இருப்பார்கள். சரியான நேரத்தில் தொடங்கவில்லையா பங்கு கொள்ள வந்தவர்கள் கிளம்பி விடுங்கள். கொஞ்சம் வேணுமானால் க்ரேஸ் டைம் கொடுக்கலாம். அடுத்த கூட்டம் சரியான நேரத்தில் நடக்கும்.
நேரம் தவறாமைக்கு மிகச் சரியான உதாரணம் எங்க ஊரைச் சேர்ந்த "மேலும் " சிவசு ஐயா. இவர் ஓய்வு பெற்ற கல்லூரிப் பேராசிரியர். "மேலும்" என்ற அமைப்பு மூலம் இலக்கியக் கூட்டங்கள் நடத்துகிறார். சரியான நேரத்தில் தொடங்கி விடுவார். எத்தனை பேர் வந்திருக்கிறார்கள் என்பது தொடங்கும் நேரத்தை பாதிப்பதில்லை.
இதை அத்தனை பேரும் கடைப்பிடிக்கலாமே. ஒரு காலத்தில் "நேரமே போக மாட்டேங்கிது" ன்னு சொல்லக் கேட்டிருப்போம். இப்போ யாராவது சொல்றாங்களா? அப்போ நேரம் என்பது எவ்வளவு முக்கியமானது் அதை அநாவசியமாக செலவிடலாமா? செலவிட வைக்கலாமா?
சிந்திப்போம்.
நம்ம முக நூல்ல அடிக்கடி நண்பர்கள் வரிசையில ( frd list) இருக்கிறாங்க ஆனா லைக்கோ கமென்ட்டோ போடுறதில்லை. அதனால " களை எடுக்கப் போறேன் " னு அடிக்கடி சிலர் எழுதுறதப் பார்த்திருக்கிறேன். இது கூட 4000 நண்பர்கள் சேர்ரது வரை நாம கவலைப்பட வேண்டுவதில்லை. ஏன்னா இன்னும் ஆயிரம் நண்பர்கள் சேர்க்கலாம். அதில் கவனமா வடிகட்டிட்டா போதும்.
ஆனா நாம் களை எடுக்க வேண்டிய இன்னொரு முக்கியமான இடம் இருக்குது. அது நம்ம மெயில் ஐடி. எனக்கு கிட்டத்தட்ட பதினைந்து வருடங்களுக்கு முன் மெயில் ID ஏற்படுத்தும் போது 15 GB free கொடுத்திருந்தாங்க. அப்போ அது அடேங்கப்பா என்று தோன்றியது.
இப்போ அதில் அதிக இடம் நாம் நிரப்பி விட்டோம் , கிட்டத்தட்ட 15 GB முடியப் போகுது என்பதால் கூடுதலா பணம் கட்டி இடம் (space) வாங்கிக்கோங்கன்னு வருது. Drive இல் நாம் சேர்த்திருக்கும் விஷயம், மெயிலில் உள்ளவை எல்லாம் அடங்கும். மெயிலை ஒரு குறிப்பிட்ட காலத்தில் google ஏ டெலிட் செய்யும். இருந்தாலும் அதில் இணைப்புகள் இருந்தால் மெயில் அதிக இடத்தை அடைத்துக் கொள்ளும். உள்ளே போய் பார்த்தா வேண்டாத குப்பை எல்லாம் இடத்தை அடைத்துக் கொண்டிருக்கிறது. வேலையில் இருந்தப்போ இடையிடையே மெயில் சுத்தம் செய்யும் பணி செய்வேன். இப்போ பத்து வருஷமா அதைச் செய்யல.
நீங்கள் பணம் கட்டி space பெற்றுக் கொள்ளா விட்டால் அந்த மெயில் ஐடி இனி வேலை செய்யாது என்று வந்த உடன் தான் ஆபத்து புரிந்தது. அத்தனை அலுவலகங்களிலும் கொடுத்து வைக்கப்பட்டுள்ள மெயில் ஐடி வேலை செய்யவில்லை என்றால் பேராபத்தாச்சே.
உடனே உட்கார்ந்து stock clearance மாதிரி mail clearance வேலை செய்தால் உடனே 3 GB free space கிடைத்து விட்டது. உடனடி ஆபத்து தவிர்க்கப்பட்டது. அதனால் களை எடுக்கும் வேலையை இங்கே தொடங்குங்கள். நமக்கு தேவைப்படாத பல விஷயங்களும் அங்கு இருக்கும். அதை அப்போ அப்போ டெலிட் செய்திடணும்.
சொல்லணும்னு தோணுச்சு. ஏற்கனவே தெரிஞ்சவங்க வேற பதிவுகளை பார்க்க போயிடலாம். தெரியாதவங்க பயற்படுத்திக் கோங்க. வரட்டா!!!
28 September, 2025
ஆனி டீச்சர்
ஆனி டீச்சர்.
இவர்களும் எங்க அம்மா கூட வேலை பார்த்தவங்க தான். லலிதா டீச்சரை அடுத்து நான் பார்க்க நினைத்தது இவர்களைத் தான். இவர்களும் 90+ வயதுடையவர்கள். இவர்கள் நெல்லை காந்திமதி பள்ளியில் PT assistant. நாம games teacher னு சொல்வோமே அவங்க தான்.
பொதுவா கேம்ஸ் டீச்சர்ஸ் ரொம்ப கடுமையா நடந்துக்குவாங்க. ஆனா இவங்க ரொம்ப மென்மையானவங்க. இவங்க கணவருடன் பிறந்தவங்க ஒன்பது பேர். ஒன்பது ஆண்கள். பெரிய குடும்பம். இவங்க தான் முதல் மருமகள். அத்தனை பேரையும் அவ்வளவு அழகா அனுசரிச்சுப் போனாங்க. அவர்களும் இங்ங்களிடம் ரொம்ப மரியாதையா நடந்துக்குவாங்க.
எங்க சின்ன வயசுல அம்மா இவங்க வீட்டுக்கு ஏதாவது வேலையா அனுப்புவாங்க. முக்கியமா நிறைய ரோஜாச் செடிகள் இருக்கும். அதற்கு முட்டை ஓடுகள், காய்ந்த டீத் தூள் இதெல்லாம் கொண்டு கொடுக்கச் சொல்வாங்க. வரும் போது அவர்கள் கொடுக்கும் ரோஜாப் பூக்களைக் கொண்டு வருவோம்.
அதை நினைவு படுத்திக் கேட்டேன். இப்போ செடிகள்லாம் ரொம்ப இல்லைன்னு சொன்னாங்க. என் கணவரும் அவங்களோட ஒரு கொழுந்தனும் நண்பர்கள். " நாங்க ஜானை பம்பை முடின்னு சொல்வோம் " னாங்க. இப்போ எல்லாம் போயிடுச்சுன்னு சொல்லி போட்டோவைக் காட்டினேன். அந்த பம்ப முடியைப் பார்த்துத் தானே காதலில் விழுந்தேன்.
கொஞ்ச நேரம் பேசிக்கிட்டு இருந்தேன். என் கணவரோட கண்டிப்பா மறுபடியும் பார்க்க வரேன்னு சொல்லி வந்தேன். எல்லா விஷயங்களையும் நல்லா நியாபகம் வச்சு பேசினாங்க.
இந்த வயதில் அவங்க ஞாபக சக்தி என்னை ஆச்சர்யமூட்டியது. உடல் நலம் பற்றியோ தனிமை பற்றியோ எந்தக் குறைபாடோ , வருத்தமோ இல்லாமல் இருப்பதை அப்படியே ஏற்றுக் கொண்டு பேசினார்கள். அவரகள் ஆரோக்கியத்துக்கு அது ஒரு காரணமாக இருக்கலாம்.
நாமும் அப்படியே இருக்க முயற்சி பண்ணுவோம்.
27 September, 2025
மலையாள சினிமா : மீஷ
படம் பெயர் மீஷ
நம்ம தமிழ் ல மீசை தான் மலையாளப் படம் என்பதால் இப்படி பெயர்.
இயக்குநர்: Emcy Joseph.
போட்டோகிராஃபி : சுரேஷ் ராஜன்.
முக்கிய நடிகர்கள் : கதிர், ஹக்கிம் ஷாஜகான், ஷைனி டாம் சாக்கோ.
ஒரு இறப்பு வீட்டில் நிற்பவரிடையே தலைவன் போல் இருப்பவரிடம் ஒருவர் வந்து "அனந்து' என்கிறார். அனந்து வந்திருக்கிறான்னு சொல்லாம வெறும் அனந்து. வசனங்கள் ரொம்ப crisp ஆ இருக்கும் போல எனத் தோன்றியது.
அனந்துவுக்கு இமோத் என்றொரு நண்பன். இவர்கள் இருவரும் ஹீரோ மிதுன் உடன் ஒரு ட்ரிப் ப்ளான் பண்றாங்க.
ஷைனி டாம் வித்தியாசமான நடிப்பு. அவர் தான் நடிப்பில் புலி ஆகிட்டே.
ஹீரோ காட்டிலாகா அதிகாரி. ஹீரோ ஆனால் வில்லத்தனம் செய்கிறவன். காட்டைக் காக்க வேண்டிய அதிகாரியே வன விலங்குகளை அழித்தால் வில்லத்தனம் தானே.
எனக்கு ஏற்கனவே காட்டுலா பிடிக்குமாதலால் காட்டுக்குள்ளே பயணம் செய்த காமராவோடே நானும் பயணித்தேன்.
ரகு ( மாட்டு ரகு) என்ற அரசியல்வாதியின் பலம் மிதுன். மூளை அனந்து. ஆனால் பலிகடாக்கள்.
நண்பர்கள் மூவருக்கிடையே இருக்கும் ஆழமான நட்பும் அதே நேரம் சந்தர்ப்பம் வரும் போது சபலப்பட்டு நண்பனையே காட்டிக் கொடுப்பதுமாக கதை நகர்கிறது.
இன்னொரு பிறவி எடுத்து ஆணின் வாழ்க்கையை வாழ வேண்டும் என்று அடிக்கடி தோன்றும். அப்போ பெண்ணின் வாழ்க்கை சரியில்லையான்னு கேட்டா அது தான் ஒரு தடவ வாழ்ந்தாச்சே. இந்த படம் பார்க்கும் போது இந்த எண்ணம் வலுத்தது. என்ன ஜாலியா இருக்காங்க.
மிதுன் : அந்தப் பொண்ணு என்னைப் பார்த்தாளா?
அனந்து : பார்த்த மாதிரி தான் இருந்துச்சு
மிதுன் : அப்போ நம்ம ஒண்ணும் அவ்வளவு மொக்கை இல்ல போல. இல்ல?
வசனம் ரசிக்கும் விதமாய்.
" போராட்டங்களில் தான் தலைவன் உருவாகிறான்" என்று ஒரு வசனம் வருகிறது. கட்சிகள் பிளவுபட்டு புதுத் தலைவன் உருவாவதும் போராட்டங்களில் தானே.
அருமையான போட்டோகிராபி. உதாரணமாக நத்தையின் க்ளோஸ் அப். ஜீப் வேகமாக செல்லும் போது தெரிக்கும் தண்ணீர், குளிக்கும் அறையின் கீழ் பகுதியில் இருந்து வரும் வெளிச்சம். ரயில் பூச்சியின் க்ளோஸ் அப்.
பான் இந்தியா படங்கள் வர ஆரம்பித்த பிறகு நல்ல முன்னேற்றம். நம்ம கதிர் மலையாளத்தில் ஒரு ரவுண்ட் வருவார் என்று நம்பலாம்.
17 September, 2025
தள்ளிப் போடாதீர்கள் தங்கங்களே!
# லலிதா டீச்சர்.
என் அம்மா வேலை பார்த்தது காந்திமதி பள்ளியில் ஆசிரியராக. அப்போ அடிக்கடி அந்தப் பள்ளிக்குச் செல்வோம். பள்ளி வாகனம் வீட்டுப் பக்கம் வரும். அதில் தான் அம்மா போவாங்க. அந்தக் காலத்திலேயே அந்த வாகனத்தின் கண்டக்டர் வேலை ஒரு பெண் பார்த்தார்கள். அவர்கள் பேரு சூடி. அந்த அக்காவோட மகன் மணி இப்போ திரைப்படங்களில் காரெக்டர் ஆர்ட்டிஸ்டாக வருகிறார்கள்.
என்றாவது பஸ்ஸை விட்டு விட்டாங்கன்னா நான் அம்மாவை சைக்கிளில் வைத்து அழைத்துச் செல்வேன். எங்க அம்மாவுக்கு மகனாகவும் மகளாகவும் நான் இருந்தேன்.
பள்ளி ஆண்டு விழாவில் லலிதா டீச்சர் நாடகங்களில் நடிப்பாங்க. இவங்க தமிழ் ஆசிரியை. நல்ல கலரா உயரமா இருப்பாங்க. அதிகம் ஆண் வேடம் ஏற்று நடிப்பாங்க. காமெடி தூள் பறக்கும். ஜோல்னாப் பையும் கண்ணாடியுமாக அந்த உருவம் கண்ணுக்குள்ளேயே நிற்கிறது.
அங்கே என் பிள்ளைகளும் விடுமுறையில் போயிருக்காங்க. எங்களுக்கு எல்லாம் ஒரு சரணாலயம் அது. நம்மைச் சேர்ந்தவர்கள் ஆசிரியராக இருக்கும் பள்ளிக்கு நாம போகும் போது வேற லெவலான உபசரிப்பு கிடைக்கும்.
ரொம்ப காலமாக அங்குள்ள ஆசிரியர்களிடம் தொடர்பு விட்டுப் போயிருந்தது. திடீரென ஒரு தொடர்பு ஏற்பட்டது. அப்போ தான் 90 வயதுக்கு மேற்பட்ட அந்த பள்ளியில் பணி புரிந்த நாலு ஆசிரியைகள் இருப்பதைத் தெரிந்து கொண்டேன். அப்போ இன்னொரு ஆசிரியையின் மகளிடம் நான் சொன்னேன். ரெண்டு பேரும் போய் அந்த நாலு ஆசிரியைகளையும் பார்த்து வருவோம். அதில் 95 வயதான லலிதா டீச்சர் சீனியர் மோஸ்ட்டாக இருப்பதால் முதலாவதாக அவர்களைச் சென்று பார்ப்போம் என்றிருந்தேன். புதன்கிழமை போவதாக முடிவெடுத்திருந்தோம். திங்களன்று அவர்கள் இறந்து விட்டதாக தகவல் வந்தது. ரொம்ப கஷ்டமா போச்சுது.
போய் அவர்கள் குடும்பத்தாரிடம் துக்கம் விசாரித்தேன். 94 வயது வரை தனக்கான வேலைகளை அவர்களே தான் பார்த்திருக்கிறார்கள். காலையில் நேரத்தில் மருமகள் காப்பி கொடுப்பதில்லை என்று குற்றம் சொல்லும் இந்தக் காலத்தில் அந்த வயதிலும் எழுந்ததும் தனக்கான காப்பியைத் தானே போட்டுக் கொள்வார்களாம். அவர்கள் ஒரு early bird. கண் பார்வை நன்றாக இருந்திருக்கிறது. தன்னை உற்சாகமாக வைத்துக் கொண்டு இருந்திருக்கிறார்கள். ஆகஸ்ட் மாதம் தான் பிறந்த நாள் கொண்டாடியதாக சொன்னார்கள்.
அப்போ எடுத்த புகைப்படத்தைப் பார்த்தேன். மெலிந்து போயிருந்தாலும் முகத்தில் அந்த தேஜஸ் மட்டும் குறையாமல் அப்படியே இருந்தது.அந்த கண்ணாடிக்குள்ளிருந்து கண்கள் ஒரு இரண்டு நாள் முன்னாடி வந்திருக்க மாட்டியா என்றன.
மறுபடி மறுபடி மனது சொன்னது " யாரையும் பார்க்க நினைத்தால் உடனே போய் விடு. தள்ளிப் போடாதே" அதையே நானும் உங்களுக்குச் சொல்கிறேன். தள்ளிப் போடாதீர்கள்.
16 September, 2025
பர்தா
அமேசான் ப்ரைம் ல paradha
தெலுகுப்படம்.
தமிழில் வசனம் வருகிறது.
இயக்குநர்: praveen kandragula
முக்கிய கதா பாத்திரத்தில் நடிப்பவர்கள் அனுபமா பரமேஸ்வரன், தர்ஷனா, சங்கீதா. இப்போ பான் இந்தியா படங்கள் தான் அதிகம். ஆனாலும் இரண்டு மலையாளப் பெண்களையும், ஒரு தமிழ்ப்பெண்ணையும் முக்கிய கதாபாத்திரத்தில் போட்டு எடுத்த தெலுங்குப்படம் என்பதற்காக சிறப்புப் பாராட்டுக்கள்.
பர்தா என்ற பெயரைப் பார்த்ததும் இஸ்லாமியப் பின்னணியில் கதை இருக்கும் என நினைத்தேன். ஆனால் ஒரு கிராமத்தில் மக்கள், பெண்கள் பர்தா போட்டு முகம் மூடாவிட்டால் குழந்தைகள் பிறந்து உயிரோடு இருக்காது என நம்புகிறார்கள்.
அத்தனை பெண்களும் வீட்டில் உள்ளவர் தவிர வெளி ஆண்களுக்கு தன் முகம் காட்டுவதில்லை. தன் தாயை இழந்து தந்தையுடன் வாழும் ஒரு பெண்ணுக்கு திருமணம் நிச்சயமாகிறது. அவள் தன் தோழியுடன் ஒரு ஒதுக்குப் புறத்தில் இருக்கும் போது காற்றுக்கு ஒரு நொடி பர்தா பறந்து விடுகிறது. அவள் ஒரு நொடிக்குள் பர்தாவை எடுத்து முகம் மூடி விடுகிறாள். தெரியும் அந்த முழு மதி போன்ற முகத்தை ஒருவன் புகைப்படம் எடுத்து அது ஒரு பத்திரிகையின் அட்டைப் படமாக வந்தும் விடுகிறது.
அது நிச்சயம் பண்ணப் போகிற நேரத்தில் தெரிந்து விட நிகழ்வு நின்று விடுகிறது. அவர்கள் வழக்கப்படி அந்தப் பெண்ணைக் கொன்று விட வேண்டும். கொன்று தான் பரிகாரம் தேட முடியும்.
இன்றும் வட இந்தியக் கிராமங்களில் முகத்தை மூடி மறைத்து பெண்கள் செல்லும் வழக்கம் உண்டு.
மறைப்பதனால் தான் பல குற்றங்கள் நடக்கின்றன என்று துணிச்சலாய் உடலரசியல் பேசும் பெண்கள் இருக்கும் உலகில் பெண்கள் அணியும் உடைகள் அவர்களுக்கு எதிராய் நடக்கும் குற்றங்களுக்கு காரணமல்ல என்பதை பூடகமாகச் சொல்ல எடுக்கப் பட்ட கதை போல் இருக்கிறது.
எடுத்த புகைப்படக் காரரைத் தேடி வட இந்தியாவுக்கு செல்வது போல் வருவதால் பல இயற்கைக் காட்சிகளையும் படம் பிடித்துக் காட்ட ஏதுவாகிறது.
பெண்களுக்கு எதிராக நடக்கும் சதி போன்ற வழக்கங்கள் ஒழிய ஒரு பெண் தான் துணிந்து முடிவெடுக்க வேண்டி இருந்தது. அதே போல் இந்த சுப்பு என்னும் பெண் எடுக்கும் முன்னெடுப்பு ரொம்ப நன்றாக இருக்கிறது.
ஒரு பெண் உயர்வடைவதை விரும்புவார்கள் ஆனால் உச்ச பதவியை அடைய எவ்வளவு கடினமாக உழைத்தாலும் அவள் பெண் என்பதே அவளுக்கு எதிரியாக இருக்கிறது என்பதைச் சொல்லும் ஆமி கதா பாத்திரம் திரைப்படத்தில் முக்கியமான ஒன்று தான்.
நகைச்சுவைக்காக என்றாலும் ஒரு பெண் தன் கணவன் குடும்பம் குழந்தைகள் தாண்டி சிந்திப்பது அவசியமில்லை என நினைப்பது எவ்வளவு மூடத்தனம் என் பதைக் காட்டும் சங்கீதா கதாபாத்திரமும் நன்றாகக் கையாளப் பட்டு இருக்கிறது.
ரொம்ப நல்ல படம். பெண்களுக்கு முக்கியமாய் ரொம்ப பிடிக்கும்.
என் மதிப்பீடு 4.5/5
14 September, 2025
நிம்மதி வேண்டும் வீட்டிலே.
# நிம்மதி வேண்டும் வீட்டிலே.
ஒரு நாளின் 24 மணி நேரத்தில் தூங்குவது, சாப்பிடுவது, வெளியே கிளம்புவது போன்ற நேரங்களை விடுத்து வீட்டில் மீதி இருக்கும் நேரம் ரொம்பக் கொஞ்சம்.
அந்த கொஞ்ச நேரத்தில் ஒருவருக்கொருவர் வாக்குவாதம், சண்டை, மனஸ்தாபம், கோபம். அது அலை போல மீதி நேரங்களையும் பாதிக்கும். அதிகரித்துக் கொண்டே போனால் வீட்டுக்கு வருவதையே மனம் விரும்பாது. ஆணானால் பல பழக்கங்கள் வர வழி வகுக்கும். பெண்ணானால் பெரும்பாலும் வேறு நட்பை நாடும். அந்த நட்பு தரும் பலத்தில் தன் துயரத்தைக் கடக்க முயலும். முடியாத போது விவாகரத்தில் முடியும்.
இதுவே பிள்ளைகள் ஆனால் காதலிக்க நினைக்கும். நண்பர்களோடு சேர்ந்து தீய பழக்கங்களுக்கு அடிமையாகும்.
இது எல்லாம் இல்லாமல் போக வீட்டில் இருக்கும் அந்தக் கொஞ்ச நேரம் அடுத்தவர் விருப்பு வெறுப்புகளை மதித்து நடந்தால் போதும்.
" அந்த செய்தித் தாள்ல தேர்வா வரப் போகுது. இவ்வளவு நேரம் படிக்கிறீங்க" என்றோ
" இந்த சீரியல் எல்லாம் பார்த்து பார்த்துத் தான் உன் மைன்ட்டே பொல்யூட் ஆகிப் கிடக்குது" என்றோ
" "இதெல்லாம் ஒரு நிகழ்ச்சின்னு எப்படித் தான் பார்க்கிறீங்களோ" என்று முதியவர்களைப் பார்த்தோ
"ஒரு நாள் இல்ல ஒரு நாள் அந்த செல்லைத் தூக்கி உடைக்கப் போறேன் பாரு" என்று பிள்ளைகளைப் பார்த்தோ சொல்லாமல்
அவரவர் கடமையை முடித்த பின்னான நேரத்தை அவரவர் விருப்பப்படி செலவழிக்க அனுமதித்தாலே பாதிச் சண்டை குறைந்து விடும்.
தான், தன் விருப்பம் என்று சுய நலமாய் இல்லாமல் , கொஞ்சம் பெருந்தன்மையோடு இருப்பவரை பலி கடா ஆக்காமல் , இருந்தாலே வீட்டுக்குள் நிம்மதி இருக்கும்.
எல்லாவற்றிற்கும் மேலாக நிம்மதியாய் இருக்க முக்கியத் தேவை பணம். குடும்பத்துக்கு தேவையான பணம் சம்பாதிப்பதிலோ, செலவழிப்பதிலோ அத்தனை பேருக்கும் கவனம் இருக்க வேண்டும்.
அவ்வளவு தாங்க. இனி அவரவர் போய் அவரவர் வேலையைப் பார்ப்போம்.
11 September, 2025
நான் இந்த வாரம் வாசித்த மிக நல்ல ஒரு சிறுகதை. கந்தர்வன் கதைகளில் "தான்"
ஒரு சிற்றூரின் விடிகாலை நேரச் சந்தடி தொடங்குவதை விவரிப்பதோடு தொடங்குகிறது சிறுகதை. அதில் வந்த ஒரு வரி இது வித்தியாசமான கதை என்று சொல்லியது. " காதுகளைக் கழற்றிக் கால்களுக்குக் கீழ் போட்டு மிதித்துக் கொண்டு நடக்கிறார்கள். கால்களின் ராச்சியம் கடை வீதியெங்கும்," பதின்ம வயதில ரொம்ப தூரம் நடந்து கால்கள் வலிச்சதுன்னா " இந்த கால்களைக் கழட்டி தோள் மேல போட்டு நடக்க முடிஞ்சா எவ்வளவு நல்லா இருக்கும்னு " சொல்வேன். அது ஞாபகம் வந்தது.
ரொம்ப சுய நலமாயும், பிறரைப் பற்றிய கதைகளை ஆர்வமாய் பகிர்ந்து கொண்டும் வாழ்க்கையை நகர்த்தும் மக்கள். அவர்களிலிருந்து வித்தியாசமானவன் நம் கதாநாயகன். அரசம்பட்டி கிராமத்திற்கு வாரத்தில் மூன்று நாள் போய் முதியோர் கல்வி எடுப்பான் முழுவதும் தன் சொந்தச் செலவில்.
ஒரு நாள் தெருவில் இவன் கண்ணுக்கு எதிரே ஒருவன் மாடியிலிருந்து தலை குப்புற கீழே விழுகிறான். அதிர்ஷ்டவசமாக விழுந்த இடத்தில் கிடந்த கல்லின் மேல் விழுந்து சிதறிப்போகாமல் குழி பறித்துக் கிடந்த மணலில் விழுந்து உயிர்பிழைக்கிறான்.
ஆனால் மருத்துவர் "ப்ளட் தலையில் க்ளாட் ஆகிடுச்சுன்னா பொழைக்கிறது சிரமம். உடனே தஞ்சாவூர் பெரியாசுபத்திரிக்கு கொண்டு போங்க " என்கிறார்.
இந்த சுயநலம் மிகுந்த உலகில் யாரென்றே தெரியாத ஒருவருக்காக பணம் செலவழித்து , ஓடி ஓடி உதவி கடைசியாக ரத்தமும் கொடுத்து காப்பாற்றும் நாயகன் தளர்ச்சியாய் இருக்கிறதென்று ஜூஸ் குடிக்க போக கடைக்காரர் " ரத்தம் கொடுத்தீங்களா? ரத்தம் கொடுத்தவரிடம் நான் ஜூஸுக்கு காசு வாங்குவதில்லை " என்று சொல்லி உலகில் சுய நலம் மிகுந்தவர்கள் மட்டுமல்ல சில நல்லவர்களும் இருக்கிறார்கள் என்று உணர்த்துகிறார்.
07 September, 2025
#No man's Land
நான் இன்று இரண்டு மலையாளப் படங்கள் பற்றி பேசப் போகிறேன்.
ஒன்று அமேசானில் no man' s land என்ற படம். இது 2021 இல் வெளி வந்திருக்கிறது. இதன் இயக்குநர் ஜிஷ்ணு ஹரீந்திர வர்மா. ஒரு சைக்கோ த்ரில்லர் படம். ஹீரோ லுக்மான் அவரன். ஹீரோயின் சிரிஜா தாஸ்.
இருவரும் ஒரு ரிசார்ட்டில் பணி புரிகிறார்கள். அங்கு தனிமையில் வந்து தங்கும் ஆண்களுக்கு அந்தப் பெண் பணம் வாங்கிக் கொண்டு கம்பெனி கொடுக்கிறாள். . அங்கு காதலித்து ஒளிந்து ஓடி வரும் ஒரு ஜோடி இவர்களால் கொல்லப்பட்டு விடுகிறார்கள். அதனை அடுத்து அவர்களைத் தேடி வரும் சகோதரன் என்று கதை நகரும்.
படம் ரொம்ப பிரமாதம் என்று சொல்லும் அளவுக்கு இல்லை என்றாலும் ஹீரோ லுக்மான், நிமிர்ந்து நேருக்கு நேர் பார்க்காத , தன்னம்பிக்கை அற்ற , மன நலம் கொஞ்சம் குன்றியவராக நடிக்கிறார். படம் முழுவதும் தான் கொல்வதைப் பற்றியோ, பின் உடல்களைப் புதைப்பதைப் பற்றியோ எந்த ஸ்மரணையும் இன்று சொன்ன படி பிரியாணி வாங்கிக் கொடுக்காமல் போய் விட்டார்கள் என்று வருத்தப்படுகிறான்.
இவரது பிரமாதமான நடிப்புக்காக இந்த படம் பார்த்து விட்டு அடுத்தது Hotstar இல் sulaika manzil பாருங்க. இது 2023 இல் வெளி வந்தது. இது ஒரு ரொமான்டிக் காமெடி படம். இயக்குநர் அர்ஷஃப் ஹம்ஸா. இரண்டிலும் கதாநாயகன் ஒருவரே. லுக்மான் அவரன். கதாநாயகி அனார்கலி மரிக்கார். இந்த படத்தைப் பார்க்கும் போது ஒரு மலையாள இஸ்லாமியத் திருமணத்தில் முழுமையாக கலந்து கொண்ட உணர்வு வரும்.
திருமணத்துக்கு முன் பெண் தன்னை விரும்பித் தான் திருமணம் செய்து கொள்கிறாளா என்று தன்னம்பிக்கை சற்று குறைவாய் உள்ள ஆண்களுக்கு எழும் இயல்பான சந்தேகம் ஹீரோவுக்கும் வருகிறது. அதை நிச்சயப்படுத்ததிக் கொள்ள விரும்பி சந்திக்க முயலும் போதெல்லாம் தட்டிப் போக சந்தேகம் வலுக்கிறது.
படிக்கும் காலத்தில் பெண் ஒருவனைக் காதலிக்க அது தெரிந்த பெண்ணின் அண்ணன் கண்டித்ததோடு தன் தங்கையிடம் பேசுவதையே நிறுத்தி விடுகிறார். பின் தங்கையின் திருமணத்தின் போது மௌல்வி பெண்ணுக்கு சம்மதமா என்று கேட்கச் சொல்ல, தன் ஈகோ நொறுங்கி நெருங்கி வரும் காட்சி உணர்வு மிகுந்தது.
ஒரு பெண்ணுக்குத் தன்னைப் பிடிக்குமா எனத் தெரிந்து கொள்ள எத்தனையோ வழிகள் இருந்தும் அவள் வாய் வார்த்தையாய் அறிய வேண்டும் என்று காத்திருந்த கதாநாயகன் அதை அறிந்ததும்
எத்தர காலம் காத்திருந்து ஒண்ணு காணுவான்.
எத்தர காலம் காத்திருந்து
ஒண்ணு மிண்டுவான்
என்று சூப்பர் நடனம் ஒன்று ஆடுவார். ரசிக்கும் படி இருக்கும்.
இரண்டு படங்களையும் அடுத்தடுத்து பார்த்து ரசியுங்கள்.
02 September, 2025
விஜய் டீவி கோபிநாத் அவர்கள் நடத்திய , தெரு நாய்களுக்கு உணவு அளித்து வளர்ப்பது பற்றிய நீயா நானா? நிகழ்ச்சியில் ஆரம்பம் முதலே எனக்குள் ஒரு கேள்வி எழுந்து கொண்டே இருந்தது.
ஒரு குறிப்பிட்ட காலம் வரை ஊருக்குள் பன்றிகள் நடமாட்டம் மிகவும் அதிகமாய் இருந்தது. சாக்கடை பகுதிகளில் தன் குட்டிகளோடு பெண் பன்றி படுத்துக் கிடக்கும். அதன் அருகில் குட்டிப் பன்றிகள் பால் குடித்த வண்ணம் உருண்டு கொண்டு வரும். நாங்கள் சிறு பிள்ளைகள் அதைக் கண்டு கொள்ளாமல் வேறொரு பக்கம் விளையாடிக் கொண்டிருப்போம். நான் சொல்வது ஊருக்குள்ளேயே நடக்கும்.
அதன் பின் ஊருக்குள் மூளைக் காய்ச்சல் வந்து பலர் பாதிப்படைவதைக் கண்ட பின், அது பன்றிகளிடம் இருந்து பரவுகிறதோ என்ற சந்தேகம் வரும் போது ஊருக்குள் பன்றிகளின் நடமாட்டத்தை முழுவதுமாக ஒழித்தார்கள். பன்றிகளை வளர்ப்பவர்கள் அதிகம் அடித்தட்டு மக்களாகத் தான் இருந்தார்கள். அதிகம் எதிர்ப்பெழுப்பாமலே ( இல்லை எதிர்ப்பு நமக்குத் தெரியாமலேயா) அது முடிந்தது. இன்று ஊருக்குள் பன்றிகளைக் காண்பது அரிதாகிப் போனது.
இன்று தெரு நாய்களால் ரேபீஸ் பாதிப்பு அதிகரிக்கிறது என்று அரசு ஒரு நிலைப்பாடு எடுக்கும் போது அந்தப் புரிதல் வேண்டும். எதிர்ப்பவர்கள் அடித்தட்டு மக்களை விட புரிந்துணர்வு இன்னும் கொஞ்சம் கூடுதல் உள்ளவர்களாய் இருந்தும் ஏன்??? மீடியா வளர்ச்சியால் அதிகம் தெரிகிறதா?
என் மனதின் குரல் கேட்டது போல் கோபி நிகழ்ச்சி இறுதியில் அதே கேள்வியை கேட்டு விட்டார். அவர் சொன்னது போலவே கழுதைகளும் முழுவதுமாக இல்லாமல் போய் விட்டன. இரண்டு பக்கமும் பொதி மூட்டையை சுமந்து செல்லும் கழுதைகள், இரண்டு கால்கள் கட்டப்பட்ட நிலையில் துள்ளிச் செல்லும் கழுதைகள், கர்ண கடூரமாய் சத்தமிட்டுச் செல்லும் கழுதைகள், இன்னும் என்னென்னவோ என் நினைவில் ஊர்வலம் போகின்றன. இப்போ முழுவதுமாய் கண்ணில் படுவதில்லை.
எல்லா உயிர்களும் வாழ்வதற்கானது இந்த பூமி என்று கண் மூடித்தனமாக சில விஷயங்களை எதிர்க்கக் கூடாது என்பது என் எண்ணம்.
31 August, 2025
#கந்தர்வன் கதைகள் - தனித்தனியாய் தாகம்
கந்தர்வன் கதைகள் என்று ஒரு சிறுகதைகளின் தொகுப்பு வாசித்துக் கொண்டு இருக்கிறேன்.
தகப்பன் ஸ்தானத்தில் நின்று வாசகனுக்கு கதை சொல்லும் உபதேசியாக இல்லாமல், தோளில் கை போட்டுத் தோழமையுடன் பேசும் குரலே கந்தர்வனுடையது என்று ச. தமிழ்ச்செல்வன் சொல்கிறார். சுய எள்ளலுடன் விரைந்து செல்லும் மொழியும் நடையும் அவர் கதைகளின் பலம்.
அதில் "தனித்தனியாய் தாகம்" என்றொரு சிறுகதை. தலைப்பே எவ்வளவு அழகாய் இருக்குது. வெயிலின் உக்கிரத்தைச் சொல்வதோடு கதை தொடங்குகிறது. "தோட்டத்தில் இன்று பூத்த பூக்களைத் தொட்டால் சுடுமோ?" [ வெயிலின் கடுமைக்கு பூக்கள் வாடுவதே அன்றி சுடுவதில்லை. சுட்டால் அங்கங்கே தீப்பற்றிக் கொள்ளுமே. இந்த வகையில் பூக்கள் தியாகிகள் தான். ]
அன்று நாள் முழுவதும் பவர்கட். அத்தனை பேரும் எரிச்சலில் இருக்கிறார்கள். நெடுஞ்சாலையில் ஒற்றையாய் நிற்கும் டீக்கடையைப் பற்றிச் சொல்லும் போது " சத்தம் போடாமல் நிற்கும் பிச்சைக்காரனைப் போல் இந்த காலனிக்கு அந்த டீக்கடை" என்கிறார். [ ஒரு பரிதாபமான யாசகன் டீ ஆத்துவது போல் கண் முன் காட்சி விரிகிறது. ]
ஒரு இளநீர்க்காரன் தினம் அமுதக் கடலான இளநீரை சுமந்து கொண்டு அந்த வீட்டின் முன் நிற்பான். [ நாலு இளநீர் வாங்கி வந்த என் மருமகன் எல்லோரும் குடிக்க ஏதுவாய் உடைத்து ஒரு பாத்திரத்தில் ஊற்றி வைக்க வீட்டில் வேலை செய்யும் பெண் கர்ம சிரத்தையாய் அது புழங்கிய நீரென்று கொட்டி கழுவி வைத்துப்போன ஒரு "சம்பவம்" நினைவுக்கு வருகிறது. ]
அந்தப் பகுதியிலுள்ள பங்களாக்களுக்கு தினம் இளநீர் கொண்டு கொடுக்கும் ஒரு வயதானவர். நேரமாகி விட்டதால் வேகு வேகென்று வந்து இளநீரைவெட்டிக் கொடுத்துப் பின் ஓட்டமாய் ஓடி அந்த டீக்கடை டிரம்மிலிருந்த அழுக்குத் தண்ணீரை வேக வேக மாகக் குடித்து திரும்பி பங்களாக்கள் பக்கம் வருகிறார் என்பதோடு கதை முடிகிறது.
நம் உள்ளே துயரம் ஊறத் தொடங்குகிறது.
புதிய பகுதியாக நான் வாசிக்கும் நல்ல சிறுகதைகளைச் சொல்லத் தொடங்குகிறேன்.
# Trending
Trending
தமிழ் படம் பெயர் தான் .
OTT : in amazon prime
இயக்குநர் : என். சிவராஜ்
முக்கிய வேடங்களில் கலையரசன்,
பிரியலயா, பிரேம் குமார் மற்றும் பெசன்ட் ரவி.
படத்துக்கு 100% பொருத்தமான பெயர். குப்பையில் கிடக்கும் ஒரு சருகை சூறாவளி காற்று கோபுரத்தில் கொண்டு வைப்பது போல் டிரென்டிங் ஆகும் ஒரு வீடியோ பட்டி தொட்டியில் இருக்கும் ஒருவரை ஒரே இரவில் உலகம் முழுவதும் அறிய வைத்து விடும். கண்டம் விட்டு கண்டம் பிரபலமாக்கி விடும். கிளி பால் என்னும் ஆப்பிரிக்கர் இதற்கு உதாரணம். அவர்கள் தினம் உண்ணும் உணவைக் கூட மக்கள் ரசித்துப் பார்ப்பது வேடிக்கை. உதாரணம் வயநாடு ராஜா சாந்தா.
அத்தகைய யூட்யூபர் கணவன் மனைவி தான் கதை நாயகன் நாயகி. இப்ப சொல்லுங்க பெயர் பொருத்தம் பற்றி நான் சொன்னது சரி தானா?
கணவன் மனைவி பேச்சில் உண்மை மிளிர்ந்தால் , அவர்கள் பலரின் கண்களுக்கு அழகாய் தெரியத் தொடங்கி விடுவார்கள். அவர்கள் போடும் வீடியோக்கள் டிரென்டிங் ஆகி விடும். ஆனால் அவர்களை அறியாமலே வீடியோ கன்டென்ட் தேடி அடிமை ஆகி விடுவார்கள். இருவரும் விவாகரத்து செய்யப் போவது போல் நடித்தால் பல மில்லியன் பார்வைகளைப் பெற்று விடலாம் என திட்டமிடுகிறார்கள் படத்தின் நாயகன் நாயகி. ஆனால் அதே நேரம் வேறொருவன் இவர்களுக்கு ஒரு நுண்வலை விரிக்கிறான்.
ஆதி காலத்தில் கூட சாத்தான் விரித்த வலையில் விழுந்து ஆப்பிளைத் தின்றது ஏவாள் தானே. இங்கும் நூலிழையில் கணவன் தப்பிக்க, ஈஎம்ஐ யின் அழுத்தத்தால் மனைவி நுண்வலையில் விழுகிறாள்.
கண்ணுக்குத் தெரியாத மனிதன் கொடுக்கும் டாஸ்க்குகளைப் பார்க்கும் போது பிக் பாஸின் ரசிகர்களைச் சிலர் கோபமாக பழிப்பதும் நியாயம் தானோ எனத் தோன்றுகிறது. பணத்தின் மீது கொள்ளும் ஆசை ஒருவனை எதில் கொண்டு நிறுத்தும் என்று எச்சரிக்கிறது டிரென்டிங். நேர்மையாக நிதானமாக சேரும் பணம் மட்டுமே பாதுகாப்பானது.
ரசித்த வசனம்:
-> காதலின் அழகு என்ன தெரியுமா?
-> ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுக்கிறது.
-> இல்ல. ஒருத்தரை ஒருத்தர் முழுமையா புரிஞ்சுக்காம இருக்கிறது.
-> ஏன்?
-> எப்போ புரிஞ்சுக்கிறோமோ அப்போ காதல் போயிடும்.
இது வரை பார்த்ததில் இருந்து ரொம்ப வித்தியாசமான படம். நிச்சயம் ரசிக்க வைக்கும். முடிவு திகைக்க வைக்கும்.
29 August, 2025
#தன்னம்பிக்கை மிளிர.
# தன்னம்பிக்கை மிளிர.
தலைப்பு கொடுக்க வாய்ப்பளித்த தலைமைக்கும் மாடரேட்டர்ஸ் க்கும் மனமார்ந்த நன்றிகள்.
ஒருவர் உயர்வடைய திறமை தேவை. வசதி வாய்ப்புகள் தேவை. பிரபலங்களின் ஆதரவு தேவை. அதிர்ஷ்டம் தேவை என்று கூட சிலர் நினைக்கலாம்.
ஆனால் எல்லாவற்றையும் விட முக்கியத் தேவை தன்னம்பிக்கை. மேலே சொன்னவை எல்லாம் ஒரு படி உயர வேண்டுமானால் உதவலாம். ஆனால் உச்சத்தை அடைய நம் தன்னம்பிக்கை மிளிர வேண்டும்.
நம்மை தோற்கடிக்க நினைப்பவர் முதலில் அடிப்பது நம் தன்னம்பிக்கையில் தான். அதை அழுத்தமாக ஆழமாக ஊன்றி விட்டால் எந்தப் புயல் அடித்தாலும் அசையாது.
நம் குழந்தைகளை நன்கு வளர்க்க நினைப்பவர்கள் முதலில் தொடங்க வேண்டியது இந்தப் புள்ளியில் தான்.
தன்னம்பிக்கை மிளர நான் ஒரு கருத்து சொல்கிறேன். தொடர்ந்து நீங்கள் உங்கள் கருத்துகளைப் பகிருங்கள்.
ரொம்ப சென்சிடிவ்வா இருந்தால் அடுத்தவர் விமர்சனம் நம்மை பலவீனமாக்கும். விமர்சனங்களை ரெண்டு விதமா எடுத்துக்கலாம். ஒன்று நம் மேல் அக்கரை கொள்பவர் சொல்வது. அதை எடுத்துக் கொண்டு நம்மை மாற்றிக் கொள்ளலாம்.
இரண்டு நம்மை பலவீனப்படுத்த சொல்லும் விமர்சனம். அதை துச்சமென நினைத்து புறம் தள்ள வேண்டும்.
இப்போ உங்கள் கருத்துகளைச் சொல்லத் தொடங்குங்கள்.
23 August, 2025
வானொலி நினைவுகள்
#வானொலி நினைவுகள்
தலைப்பைப் பார்த்த உடன், கூடப் படித்த பள்ளித் தோழியை ரொம்ப வருடங்கள் கழித்துப் பார்த்த உணர்வு.
ஆமா படித்ததெல்லாம் வானொலியைக் கேட்டுக் கொண்டு தானே. அது எப்படி படிக்க முடியும்கிறீங்களா? கணிதப் பாடம் . பாட்டு ஒரு பக்கம் கேட்டுக்கிட்டு இருக்கும். கை ஒரு பக்கம் எழுத்து வேலையைப் பார்த்துக் கொண்டே இருக்கும்.
காலை ஏழு மணி என நினைக்கிறேன். கே. எஸ் ராஜா நிகழ்ச்சிப் பொறுப்பேற்ப்பார். அவர் தன் பெயரைச் சொல்லும் அழகு அன்றைய வேலைக்குத் தேவையான எனர்ஜியைக் கொடுத்து விடும்.
பி எச் அப்துல் ஹமீது மற்றும் ஒருவர். ஒருவர் எம் ஜி ஆர் என்றால் மற்றவர் சிவாஜி. ஒருவர் ரஜினி என்றால் மற்றவர் கமல். ஒருவரின் ஸ்டைலும் மற்றவரின் தமிழும் அவ்வளவு கவரும். இந்தியாவில் உள்ளவர்களில் சரோஜ் நாராயணசாமியின் குரல் தான் அப்படித் தனித்து நினைவில் இருக்கிறது. அந்தக் குரலில் செய்தி கேட்பது தனி சுகம்.
எங்க வீட்டில சுவரோடு இணைந்து ஒரு shelf இருக்கும். கதவு இருக்காது. அதன் மேல் தளத்தில் கம்பீரமாக அமர்ந்திருக்கும் பிலிப்ஸ் ரேடியோ. அதற்கு துணியால் கவர் செய்து போட்டு இருப்பாங்க. அம்மா நல்லா எம்ப்ராய்டரி போடுவாங்க. வுல்லன் நூல் பார்த்திருக்கீங்களா? சின்னதா பேப்பர் உருண்டை மேல சுற்றி இருக்காது. நீள நீளமாய் மடக்கி அதன் இருபுறமும் கருப்பு நிறக் கவர் போட்டு இருப்பாங்க. முதலில் அதைப் பிரித்துப் பின் அந்த மொத்த நூலிலிருந்து ஒரு நூலைப் பிரிக்க வேண்டும். அந்த நூலால் ரோஜாப் பூக்கள், மொட்டு, இலைகள் எல்லாம் போட்டு இருப்பாங்க. ஒவ்வொன்றும் அதற்கான பிரத்யேகக் நிறத்தில் இருக்கும். மொட்டுகள் ரத்தச் சிவப்பு நிறம். பூக்கள் அடர் சிவப்பும் மென் சிவப்பும் கலந்து, இலைகள் பச்சை நிறமாய். தொட்டுப் பார்க்கவே மெத்து மெத்துனு இருக்கும்.
அந்தக் கால இன்னொரு அதிசயம். ரேடியோவில் கரகரன்னு சத்தம் வந்தா அதன் தலை மேல் கை வைத்தால் துல்லியமா இருக்கும். கையை எடுத்தால் கரகரப்புத் தொடங்கி விடும். அது அப்போ பெரும் அதிசயம். ஒலியலைகள் நம் வழியாக earth ஆவது தான் பாடல் தெளிவா இருக்கக் காரணம்னு தெரிந்து கொள்ளும் போது வயதில் பல வருடங்கள் நான் கடந்திருந்தேன்.
அப்போ பாடல்களைக் கூடச் சேர்ந்து பாடிக்கிட்டே இருப்பது வழக்கம். பிடித்த அர்த்தம் மிகுந்த பாடல்களை நோட்டில் எழுதி வைத்துக் கொள்வோம். சில படங்களின் எல்லா பாடல்களும் பிடிக்கும் என்றால் பத்து பைசா கொடுத்து பாடல் புத்தகங்கள் வாங்கி சேர்த்து வைப்போம்.
நிறைய எழுதலாம். நாஸ்டால்ஜிக்கா இருக்கும். ஏன்னா அந்தக் காலக் காதல் போராட்டங்களைக் கடந்தது பாடல் என்னும் இந்தத் துரும்பைப் பற்றிக் கொண்டு தானே.
"தெய்வத்தின் மார்பில் சூடிய மாலை
தெருவினிலே விழலாமா?
தெருவினிலே விழுந்தாலும்
வேறோர் கை படலாமா?" ன்னு ஒரு காதலி மென்குரலில் பாடினால் எந்த காதலனது கோபம் தணியாது. அதெல்லாம் நீயா நானான்னு போட்டி இடாத அந்தக் காலம்.
20 August, 2025
என் மனம்
ஒரு தேன்கூடு.
நான் தான்
அதன் ராணித்தேனீ
அறைகளுக்கு
ஒன்றாய்
எனக்கானவர்களைச்
சேர்த்து
வைத்திருக்கிறேன்.
அவர்கள்
புன்னகையும்
பார்வையும்
பேச்சும்
அத்தனையும்
தேன் தேன்!
என்னைக்
கொன்று விட்டால்
எனக்கானவர்களை
விரட்டி விடலாம்
எனப் பார்த்தார்கள்.
எனக்கானவர்கள்
கொடுக்கும்
ராயல் ஜெல்லியால்
பிழைத்து விட்டேன்.
எப்படி ஆனாலும்
நான் தரப் போவது
தேனடை தானே
இறுதி மகிழ்வு
எங்களைப் போலே
உங்களுக்கும் தானே
( ராயல் ஜெல்லி தேனீக்களால் ராணித் தேனீக்காக தயாரிக்கப்படும் உணவு)
மக்கத்தப்பா
ஆசிரியர் : எம் எம் தீன்
மக்கத்தப்பா கதை மியாக்கண்ணு ராவுத்தர் இல்லை நப்பி மியாக்கண்ணுவோடு தொடங்குகிறது. பாய் பின்னும் சூழல் தெரியுது. அப்துல் அவர் என்ன வேலை சொன்னாலும் செய்வார். காசு கொடுக்க வேண்டிய நேரத்தில் ஏதாவது சாக்குப் போக்கு சொல்லி வீட்டுக்கு கிளம்பினாலும் அதை சட்டை செய்யாமல் வேலை செய்வார்.
அப்துலுக்கு ஒரே ஆசை மக்கத்துக்கு போய் காபா சுவத்துல முட்டிக்கிட்டு நிக்கணும். ரஸூலுல்லா சந்நிதிக்கு போய் சலாம் சொல்லணும். யார் என்ன வேலை சொன்னாலும் செய்வார். பதிலுக்கு என்ன வேணும் என்று கேட்டாலும் இதைத் தான் சொல்வார்.
அத்துலப்பாவை நேசிக்கும் இன்னொரு நபர் தாடி காசிம். அவரிடம் பேச அத்தனை பேரும் பயப்படுவார்கள். மற்ற பையன்களை சேர்த்துக் கொண்டு தொப்பி போடாமல் தொழப் போனவர்.
மூன்று தடவை பள்ளி மோதிலால்கள் போன போது அப்துல் தான் அந்த வேலையை ரொம்ப நறுவிசாகப் பார்ப்பார். நிரந்தரமாக பார்க்கச் சொன்னால் மறுத்து விடுவார். எல்லோரும் அமர்ந்து ஆடு புலி ஆட்டம் ஆடுவாங்க. அப்துல் ஜெயித்து விட்டால் என்ன வேணும் என்று கேட்டால் " எப்படியாவது மெக்காவுக்கு சென்று விட வேண்டும் என்ற ஒரே ஒரு ஆசை தான் என்பார்.
கதையில் ஒரு மீன் தொட்டி பற்றிய விவரணை வரூம். நான் நினைப்பதுண்டு ஓயாமல் வீசிக் கொண்டிருக்கும் அலைகளைப் போன்று இந்த மீன்கள் எப்படி நீந்திக் கொண்டே இருக்கின்றன. அக்கடான்னு சாஞ்சு உட்காரணும்னு தோணவே தோணாதா?
ஹவுலு ( தொழப் போகும் முன் கை கால் கழுவும் இடம்) நீரிலுள்ள மீனுக்கும் அப்துலுக்கும் இடைப்பட்ட உறவை எழுதும் போது மனித இனத்தை மட்டுமல்ல உயிரினங்களையே நேசிக்கும் ஆசிரியரின் அன்பு தெரிகிறது. மோட்டார் போட்ட உடனே ஹவுலு மீன்கள் துள்ளி எழும். அவற்றை ரசித்துப் பார்ப்பார். 12 தங்க மீன்களும் 8 ஷார்ப் மீன்களும் இருக்கும்.
அவர் ரசித்து விவரிக்கும் ஒவ்வொரு இடத்தையும் நான் சொல்லி நீங்க அனுபவிக்க முடியாது. வாங்கி வாசிக்கணும்.
ஆயிஷா அம்மா புருஷன் முத்தப்பா கர்நாடகாவில் பல சரக்கு கடையில் வேலை பார்த்தவர் திடீர்னு இறந்து போனதும் ஆயிஷாவை தங்கையாகவே தத்தெடுத்துக் கொள்கிறார். அவருக்கு சிரிக்க சிரிக்கப் பேசும் முத்தப்பாவையும் ரொம்ப பிடிக்கும். அவர் மக்காவில் பிறக்க வேண்டியவர். ஊருக்கு வந்து இறங்கி இருக்கிற மலாயிகத்து மார் அதாவது வானவர் என்பார். அவரை நக்கல் நையாண்டி பண்ணினா உணவு கிடைக்காது என்பார்.
வரிக்கு வரி ரசிக்கும் படி எழுதி இருக்கிறார். ஓட்டு மாவு தயாரிக்கும் முறை. வாய்வுப் பிடிப்பில் வலி வரும் போது அதற்கான மருந்து, ஊசி இலைகளையும், நொச்சி இலைகளையும் போட்டு இரவில் எரித்தால் கொசு வராது என கதை நெடுக நிறைய minute details கொடுத்திருக்கிறார்.
வெளிக்கா ஷாகுல் என்றொரு ஆர்வமூட்டும் கதாபாத்திரம். கொஞ்சம் வில்லங்கமான பேச்சு பேசுபவர். வெள்ளரிக்காவும் ராபியாவும் கணவன் மனைவி. இருவர் குணத்துக்கும் ஏணி வச்சாலும் எட்டாது.
காலையிலேயே டீக்கடையில் சாயா குடித்து மதரஸா கல்தூணில் சாய்ந்தபடி புறம் பேசும் சீனி சேட் அப்துலையும் விட்டு வைத்ததில்லை. இருந்தும் வாய்வுப் பிடிப்பில் உயிர் போய் விடுமோ என அச்சத்தில் புரண்டு அழும் போது அப்துலின் கை வைத்தியம் அவரைக் கொஞ்சம் மாற்றி விட்டது. ஆனாலும் பாம்புக்கு பால் வார்த்தாலும் கொத்தாமல் விடுமா? மறுபடியும் மாறிப் போனார் சீனி சேட்.
ஒற்றுமையான ஊர் இரண்டு பட்டு மியாக்கண்ணு இராவுத்தர் கனி ராவுத்தர் என்று கோஷ்டி பட்டு ஜமாத் யார் கையில் என பிரிந்து கிடந்த போது அப்துல் யாருக்கும் சிக்காமல் எங்காவது போய் இருக்க நினைக்கிறார்.
"பூனை எப்போதும் தன்னை மட்டும் கவனிக்க வேண்டும் என்று விரும்பும்" என்ற வரி என்னை சுமார் இருபதாண்டுகள் முன்னே அழைத்துச் சென்றது. என்னிடம் ஒரு பூனை கொஞ்சி விளையாடும். அதன் குட்டியை நான் தூக்கி கொஞ்சுவதை முறைத்துப் பார்த்தது. நாம் தான் அப்படி கற்பனை பண்ணிக்கிறோம்னு நினைச்சேன். ஆனா அதன் பின் அந்த பூனை எங்க வீட்டுக்கு வரவே இல்லை. அந்த குட்டிப் பூனை பதினைந்து வருடங்கள் எங்கள் வீட்டில் இருந்து இறந்தது.
நபிகள் நாயகத்துக்கு பூனை ரொம்ப பிடிக்கும் என்பதற்கு ஒரு அழகான கதை சொல்லி இருக்கிறார்.
கதை வாசித்து முடிக்கும் போது எனக்குத் தோன்றியது யாருக்கான உணவு என்பது அவரவர் பெயர் அரிசியில் எழுதி இருக்கும் என்பது போல ஹஜ் பயணம் யார் யாருக்கு சாத்தியப்படும் என்பதும் நிர்ணயிக்கப்பட்டு இருக்கும் என்பது தான்.
மக்கத்தப்பா நிறைய பேரைச் சென்றடைய வேண்டும் என்பதற்காக ஆசிரியர் அதை விற்க வேண்டாம் என முடிவு செய்ததாகச் சொன்னார். இஸ்லாமிய மதத்தின் செழுமையை அறிந்து கொள்ள கண்டிப்பாக உதவும். நன்றி
08 August, 2025
சிறு கதைத் தொகுப்பின் பெயர் : இரத்தக்காவு.
ஆசிரியர் :செஞ்சி தமிழினியன்
விலை : ரூ 180/_
விதை நெல் பதிப்பகம்
முதல் பதிப்பு : டிசம்பர் 2024
இந்த தொகுப்பைப் பற்றி பேரா. வேல நெடுஞ்செழியன் " கதைகளின் வேர்களினூடே நிலவியல், வழிபாடு, நம்பிக்கைச் சடங்குகள், குழந்தைமை, அன்பின் மெல்லிய இழைகள் ஆகியவை நீரோட்டமாக சலசலக்கின்றன" என்கிறார்.
செஞ்சி தமிழினியன் கவிஞராகத் தொடங்கி சிறு கதை எழுதத் தொடங்கி இருக்கிறார். தற்போது நாவல் உலகிலும் காலெடுத்து வைக்க இருக்கிறார். "இரத்தக்காவு" இவரது மூன்றாவது சிறு கதைத் தொகுப்பு. ஏன் எழுதவில்லை எனக் கேட்க நாலு பேர் இருக்கும் வரை எழுதுவேன் என்கிறார்.
இதில் மொத்தம் பதினைந்து கதைகள். ஒவ்வொன்றின் கதைக் களமும் தனித்து நிற்கின்றது.?
முதல் கதை "மீட்கப்படும் வண்ணங்கள்." கதை நாயகிக்கு அவள் கொள்ளுப்பாட்டியின் பெயரான "பெருமாத்தா" வில் தொடங்கிதனக்குத் தானே வைத்துக் கொண்ட "காயத்ரி" யில் முடிகிறது கதை. இடையே அல்ப மனம் படைத்த சில ஆண்களைப் பற்றி அங்கங்கே சொல்கிறார்.
திருமணம் முடிந்த முதல் இரவில் "முன்ன பின்ன ஏதும் நடந்திருக்கிறதா எனக் கேட்கும் ஒரு அல்பம். அது மட்டுமல்லாம " அழகா வேற இருக்கிற. எல்லோரும் உன்னை நல்லவள்னு வேற சொல்றாங்க. அது தான் பயம்மா இருக்குது. " என்கிறான். பொறுக்க முடியாமல் அவனை விட்டுப் பிரிகிறாள்.
அடுத்து நாலு வயதில் குழந்தை உள்ள ஒருவனுக்கு இரண்டாம் தாரமா போகிறாள். அவன் முதல் மாமியார் " பார்த்து இருந்துக்கோமா. பச்சை உடம்புக்காரின்னு கூட பார்க்காம அடிச்சு கொன்னு தூக்கில மாட்டிட்டான்" என்கிறாள். அங்கிருந்தும் பிரிந்து வருகிறாள்.
இப்படி எந்த நேரமும் தற்காத்துக் கொள்ளவே சிந்தனையை செலவழிக்கும் பெண்களின் உலகம் எவ்வளவு சவாலானது என்று சொல்லி கதையை முடிக்கிறார்.
இன்னும் சில கதைகள் குறிப்பிடும் விதமாய் உள்ளன.
"நான் யாருக்கும் எந்த பாவமும் செய்யல. எல்லோருக்கும் நல்லது தான் செஞ்சேன் . எனக்கு ஏன் இந்த நிலைமை என அழும் பாரிஜாதம் ஆயா பற்றிக் கூறும் "அர்த்த வாசனை"
பெரும் பள்ளங்களில் விழுந்து இறந்தவர்களின் உடலை உறவினர்களிடம் ஒப்படைக்கும் ஒருவனைப் பற்றி "இரத்தக்காவு" கதை.
"சுடும் நிழல்" என்று ஒரு கதை. அப்பா எங்கே இருக்கிறீங்க சீக்கிரம் போங்க. வீடு திறந்து கிடக்குது" என்னும் முதல் வரியே வாழ்வில் ஒரு முறையேனும் பணமோ பொருளோ தொலைத்தவர்களுக்குத் தன்னைப் பொருத்திப் பார்க்கத் தோணும்.
ஒவ்வொரு சிறுகதையும் ஒவ்வொரு விதமாய் ஈர்க்கிறது.
அருமையான சிறு கதைத் தொகுப்பு.
26 July, 2025
DNA பட விமர்சனம்
#DNA பட விமர்சனம்.
OTT JIO Hotstar.
இயக்குநர் : நெல்சன் வெங்கடேசன்.
இசை : ஜிப்ரான்.
முக்கிய கதா பாத்திரங்கள் : அதர்வா, நிமிஷா சஞ்சயன்,
மற்றும் ரமேஷ் திலக், சரிதாவின் தங்கை விஜி சந்திரசேகர், பிக் பாஸ் டைட்டில் வின்னர் ரித்விகா, வில்லனாக வரும் முகமது ஸீஷன், போஸ் வெங்கட், சேத்தன், பாலாஜி சக்திவேல்.
கதை ஒரு முக்கியமான பிரச்னையை எடுத்து பேசுகிறது. முன் ஒரு காலத்தில் அரசு மருத்துவமனைகளில் இப்படி நடக்கிறது எனக் கேள்விப் பட்டு இருக்கிறோம். இங்கே தனியார் மருத்துவமனையில் நடப்பதாகக் காட்டி இருக்கிறார்கள்.
பிறந்த குழந்தைத் திருட்டு தான் அந்தப் பிரச்னை. அதைச் செய்வதாக ஒரு வயதான பெண்மணியைக் காட்டுகிறார்கள். கடத்துவதற்கு எளிதாக இரண்டு பை நிறைய தின்பண்டங்களை நிறைத்து விற்பதற்கு கொண்டு வருவதாகக் காட்டுகிறார்கள். ஒரு நாள் இல்லை ஒரு நாள் குழந்தைகள் அழுது காட்டிக் கொடுத்து விடாதா? ஒரு இடத்தில் குழந்தைக்கு ஏதோ சொட்டு மருந்து கொடுப்பது போல் காட்டி இருக்கிறார்கள். ஆனால் ஜன்னல் வழியாகத் தூக்கும் போது அது கொஞ்சமாவது சிணுங்குவது போல் காட்டி இருக்கலாம்.இது போல் பல இடங்களில் தவற விட்டிருப்பதற்கு படத்தின் நீளம் அதிகமாகி விடும் என்பது காரணமா?
ஆனாலும் மனதை ஒரு உலுக்கு உலுக்கித் தான் போகிறது. அதற்கு மனப்பிறழ்வை பார்டரில் நழுவ விட்ட பெண்ணாக , அதர்வாவின் மனைவியாக , துடுக்கான குடும்பப் பெண்ணாக நிமிஷா தன் எடையை வெகுவாய் குறைத்து , கலக்கி இருக்கிறார். அழகழகான புடவைகளில் பாந்தமாக வருகிறார்.
அதர்வா காதல் தோல்வியால் போதைப் பழக்கத்தில் சிக்கி சீரழிந்து குடும்பத்தாரால் வெறுக்கப்பட்டு , மிகுந்த முயற்சியோடு அந்த பழக்கத்திலிருந்து வெளி வந்து நிமிஷாவைத் திருமணம் செய்யும் ஆனந்தாக வரும் வரை நடிப்பதற்கு அவருக்கு வாய்ப்புகள் மிக அதிகம்.
பின் பாதி அடிதடி.
வில்லனாக வருபவர் ஒரு மோசமான முக அமைப்பு உடையவராகத் தான் இருக்க வேண்டுமா? சமீப காலமாக அப்படி ஒரு கட்டமைப்பு சினிமாவில் இருக்கிறதே என பல சந்தர்ப்பங்களில் கேட்டிருக்கிறோம். அது இயக்குநர் காதில் விழுந்து விட்டது போல. வில்லன் முகமது ஸீஷன் அழகாக இருக்கிறார். இருந்தாலும் மனசு வராமல் விருப்பமில்லாமல் தான் வில்லத் தொழிலில் இறங்குவது போல் காட்டுகிறார்கள்.
நிமிஷா வெகுளியாக பல இடங்களில் வந்தாலும் தன் குழந்தை மாறி விட்டதை கண்டுபிடித்து மற்றவர்கள் ஒத்துக் கொள்ளாத இடத்தினில் நடிப்பில் ஜொலிக்கிறார்.
எடிட்டிங்கில் கவனம் செலுத்தி வேண்டாதவைகளை வெட்டி இன்னும் கொஞ்சம் வேண்டியவைகளை சேர்த்திருந்தால் படம் வேற லெவலுக்கு போயிருக்கும்.
பார்ப்பதை தவற விடாதீர்கள்.
25 July, 2025
Human error என்று சொல்வது உண்டு் .
அந்த மனிதத் தவறுக்கு ஒவ்வொரு இடத்தில் ஒவ்வொரு கனம் இருக்கும். உதாரணமாக ஒரு நிறுவனத்தில் கணக்கெழுதுபவர் 300 க்குப் பதிலாக 3000 என்று எழுதி விட்டார் என்றால் அது human error. அதை நாள் இறுதியில் கணக்கைச் சரி பார்க்கும் போது கண்டுபிடித்து விடலாம். சரி செய்து விடலாம்.
அதுவே ஒரு வங்கித் தொழிலாளி மூன்று நூறு ரூபாய்த் தாள்கொடுப்பதற்குப் பதிலாக ஒன்றைக் கூடுதலாகக் கொடுத்து விட்டால் நாளின் இறுதியில் கணக்கைச் சரி செய்யும் பொழுது கையிலிருந்து போட வேண்டி வரும். நூறு ரூபாய்த் தாளுக்குப் பதிலாக ஐநூறு ரூபாய்த் தாள் என்றால் தவற் றின் கனம் இன்னும் கூடுதல் .
ஒரு நகைக் கடையில் வியாபாரம் முடிந்து மிச்சமிருக்கும் நகைகளை சரி பார்க்கும் போது ஒருஇடத்தில் வைக்க வேண்டிய பொருள் வேறொரு இடத்தில் வைத்து விட்டால் அது human error. ஒன்றில் குறையும் அதுவே மற்றொன்றில் கூடுதலாய் இருக்கும். தவறு கண்டு பிடிக்கப் பட்டு விட்டால் சரி செய்து விடலாம்.
கம்ப்யூட்டர் , பயன்பாட்டில் வரும் முன்பு எங்கள் அலுவலகத்தில் ஒவ்வொரு தொலைபேசி எண்ணுக்கும் ஒரு ஃபைல் வைத்திருப்போம். அவை நூறு நூறாக அடுக்கப்பட்டு இருக்கும். லட்சக்கணக்கில் இருக்கும். ஒவ்வொரு நாளின் மாலையிலும் வேலை முடிந்த கோப்புகளை அந்தக் கட்டுக்குள் சரியாகக் கொண்டு சேர்க்க வேண்டும். அதைத் தவறுதலாக வேறு கட்டில் வைத்து விட்டால் தேவைப்படும் நேரத்தில் அதை எடுப்பதற்குள் தாவு தீர்ந்து விடும்.
அதைப் போலவே கார் ஓட்டும் போது கவனக்குறைவாக ப்ரேக் பிடிக்க வேண்டிய இடத்தில் ஆக்ஸிலரேட்டரைக் கொடுத்து விட்டால் விபத்து நிகழ்ந்து விடும். அது நடக்கும் இடத்தில் ஒரு மனிதன் நின்று விட்டால் உயிர்ப்பலி நேர்ந்து விடும்.
ரயில்வே லெவல் கிராஸிங்கில் கதவு மூட வேண்டிய நேரத்தில் திறந்தே வைத்திருந்து விட்டால் அந்த மனிதத் தவறு , பல உயிரிழப்புகளுக்குக் காரணமாகும்.
விமானம் ஓட்டுபவர் செய்யும் ஒரு சிறு தவறு கூட பல உயிர்கள் போக காரணமாகிப் போகும்.
எங்கள் தொலைபேசி அலுவலகங்களில் , அல்லது கேபிள் சம்பந்தப்பட்ட வேலைகளிலோ, வயர்கள் அடித்து இணைக்கும் இடங்களிலோ சில சமயம் இந்த மனிதத் தவறுகள் நடக்கலாம். நமக்கு அந்தத் தவறைச் செய்து விட்டேன் என்று வெளிப்படையாகச் சொல்லும் திடம் வேண்டும். தவற்றுக்கான தண்டனையை ஏற்றுக் கொள்ளும் மனப் பக்குவம் வேண்டும்.
செய்தத் தவறைச் சொல்லி விட்டால் அதைச் சரி செய்வது சுலபமாக இருக்கும். அதுவே நாம் சொன்னால் நம்மைக் குறைவாக நினைப்பார்களே என்றோ தண்டனையின் கடுமையை நினைத்தோ செய்த தவற்றை மறைத்து விட்டால் அதைக் கண்டு பிடித்துச் சரி செய்யப் பல மணி நேரங்கள் ஆகி விடும். சில சமயம் கண்டு பிடிக்கவே முடியாமல் கூட போய் விடும்.
இப்பொழுது நான் சொல்ல வரும் தவற்றின் கனம் புரிந்திருக்கும். ஒவ்வொருவரும் அவர் தம் பணியை மிகுந்த கவனத்தோடு செய்யப் பழகி விட்டால் இழப்புகளை குறைத்து விடலாம். முக்கியமாக உயிரிழப்புகளை.
ஏதோ சொல்லத் தோணுச்சுது. சொல்லிட்டேன்.
17 July, 2025
# ஆண் சமையல்
# ஆண் சமையல்.
நான் நன்கு அறிந்த ஆண்களில் முதலாவது என் தந்தை. அந்தக் கால மனிதர். இப்போ இருந்திருந்தா 91 வயது இருக்கும். அம்மா வேலைக்குப் போகும் ஒரு சில பெண்களில் ஒருவராய் இருந்ததால், வீட்டில் வேலை செய்ய ஒரு பெண்மணி எப்பவும் இருப்பாங்க. அவங்க சமைச்சு கிட்சனில் வச்சுட்டு போறதை அம்மா கிளம்பறதுக்கு முன்னால டைனிங் டேபிள்ல எடுத்து வச்சுட்டு போகணும். அப்பா கல்லூரியில இருந்து மதியம் வீட்டுக்கு வந்து சாப்பிடுவாங்க. ஏதோ அவசரத்துல ஒண்ணை எடுத்து வைக்க மறந்தாச்சுன்னா அவ்வளவு தான். என்ன எடுத்து வைச்சிருக்காங்களோ அதை மட்டும் சாப்பிட்டுட்டு போயிடுவாங்க. சாப்பிட்ட தட்டிலேயே கை கழுவும் வழக்கம். கிட்சனுக்குள்ள ஆண் வருவதென்பது ரொம்ப மதிப்பில்லாத ஒரு விஷயம். அம்மா என்னிடம் சொல்வாங்க. "கைப்பிள்ள அழுதாலும் இடுப்புல இடுக்கிக்கிட்டுத் தான் பால் ஆத்தணும். " அந்தக் காலத்தில் பெண் சம்பாதித்தாலும் அடுப்படியின் அத்தனை பொறுப்பும் அவளுக்குரியது மட்டுமே.
அடுத்து நான் அறிந்த ஆண் என் கணவர். ரொம்ப காலம் வரை அடுப்படிக்குள் வருவது அவமானம் என நினைத்தவர் தான். நான் மகளுடன் ராஜஸ்தான் போகும் போது , ஒரு இடத்தில் சாப்பாடு கொண்டு வந்து கொடுக்க ஏற்பாடு செய்திருந்தேன். ஆனால் அதைத் தொடர்ந்து சாப்பிட்டால் வயிறு கெட்டுப் போகும் என்று போன் மூலமே எப்படி சமையல் செய்வது என்பதைக் கேட்டறிந்து செய்து பழகினார். சூப்பரா சமைச்சேன்னு சொல்லுவார். என் பிள்ளைகள் " அம்மாவுக்கு சமைச்சு கொடுங்கப்பா. அவங்களும் சூப்பர்னு சொல்லட்டும்" னு சொல்வாங்க. ஒரே ஒரு முறை செய்து கொடுத்தார். சூப்பராத் தான் இருந்தது. ஆனாலும் சமையல் பெண்ணின் வேலை. அத்தியாவசியம் என்றால் மட்டும் ஆண் இறங்கலாம் என்ற அளவில் மனப்பான்மை மாறி இருந்தது. இப்போ ஓய்வு பெற்ற பிறகு ரொம்பவே உதவி செய்கிறார். நான் போதும் உடம்பைக் கெடுத்துக் கொள்ளாதீர்கள் என்று சொல்லும் அளவுக்கு.
அடுத்த ஆண் மருமகன். அடுத்த தலைமுறை அல்லவா? வீட்டுக் காரியங்களில் ரொம்ப உதவி. விரும்பிச் செய்வார். அது ரொம்ப முக்கியம் அல்லவா? குடும்பம், மனைவி, மக்களுக்குத் தான் முதலிடம். மற்றவை எல்லாம் அதற்குப் பின் தான். அவங்க அம்மா ரொம்ப அழகா வளர்ந்திருக்காங்க. என் மகளிடம் சொல்வேன் " உன் மகனையும் இதே போல் அனுசரணையான பையனாக வளர்த்து விடு. உனக்கு வரும் மருமகள் உன்னைக் கொண்டாடுவாள் என்பேன்.
நாலாவதா ஒரு ஆண். என் பேரன். ஞாயிற்றுக் கிழமைகளில் எல்லோருக்கும் லெமன் ஜூஸ் போட்டுக் கொடுப்பான். அம்மா உடம்புக்கு சரியில்லைன்னா தேவையான வேலைகளைச் செய்து கொடுப்பான். பான் கேக், கேக், ஐஸ்கிரீம் என்ற வகைகளை செய்து பழகி இருக்கிறான். இன்னும் கொஞ்சம் வளர்ந்தால் முழு சமையலும் சொல்லிக் கொடுத்து விடலாம்.
தலைமுறை மாற மாற அடுப்படி வேலை என்பது ஆணுக்கானதல்ல என்ற மனப்பான்மை கொஞ்சம் கொஞ்சமாய் மறைந்து போவதைப் பார்க்கிறோம். நல்ல சகுனம் தான்.
அது பெண்ணுக்கானதல்ல என்ற நிலைக்குப் போய் விடக் கூடாது. எப்பவும் ஒரு பாலன்ஸ்டு நிலை தான் நிரந்தரமாய் நிற்கும். மற்றவை எல்லாம் மாறுதலுக்கு உட்பட்டவை.
07 July, 2025
# ரிதன்யா அவினாசி மரணம்
# "ரிதன்யா"
அவங்க அம்மா நாங்க அவளை ரித்துக் குட்டின்னு தான் கூப்பிடுவோம்னு சொன்னாங்க. நான் இன்று வரை மூத்த பெண்ணை ஜெனிம்மான்னும், இளையவளை சிந்து குட்டின்னும் தான் கூப்பிடுவேன். அப்படித் தான் அருமை அருமையா பிள்ளைகளை வளர்த்துறோம்.
ஆனால் நான் ரிதன்யாவைப் பற்றி எழுதி ஓய்ந்து விட்டேன். அதனால் அவளோடு தொடர்புடைய "கவினை" ப்பற்றித் தான் சொல்லப் போகிறேன்.
இத்தனைக்குப் பின்னும் கவினை " மாப்பிள்ளை" என்றே குறிப்பிடும் ரிதன்யாவின் தந்தை மேல் பரிதாபமும் மரியாதையுமே எழுகிறது.
நான் சொல்வது ஒரு சிலருக்குக் கோபம் வரலாம். மாட்டிக் கொண்டதால் கவின் ஒரு அயோக்கியனாகத் தெரிகிறான். அவனைப் போன்ற மன நிலையில் இன்னும் சில இளைஞர்கள் சமுதாயத்தில் இருக்கலாம். அந்த எண்ணிக்கைப் போகப் போக அதிகரிக்கக் கூடச் செய்யலாம். அப்படித் தான் காலம் போய்க் கொண்டிருக்கிறது. எச்சரிக்கும் பெரியவர்களை பூமர் என்று சொல்லி எளிதாகக் கடந்து போகிறோம்.
எங்கள் காலத்தில் கணவனைத் தன்னோடு இருத்திக் கொள்வதற்கு " பகலில் கணவனுக்குத் தாயாகவும் இரவில் தாசியாகவும் இரு" என்று சொல்வதுண்டு. ஆனால் அந்த காலத்தில் கூட தாசி போன்று நடக்க விரும்பிய மனைவியிடம் எதிர்பார்க்காத பல விஷயங்கள் இன்றைய இளைஞர்கள் மனைவியிடம் எதிர்பார்க்கிறார்கள். தான் இணையத்தின் மூலம் அறித்து கொண்ட அரை குறை அறிவைக் கொண்டு பரிசோதிக்க ஒரு பொம்மை கிடைத்ததென்று மகிழ்கிறார்கள்.
ஒன்று அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். உன்னைப் போலவே மனநிலையும் எதிர்பார்ப்பும் உள்ள பெண் உனக்கு ஈடு கொடுக்கலாம். ஆனால் அது அவளுக்கு பல அனுபவங்களுக்குப் பின் கிடைத்திருக்கும். அது உனக்கு ஓகேன்னா அப்படிப்பட்ட பெண்ணைத் திருமணம் செய்து கொள்.
அப்படி அல்லாமல் மனம் கூட கறைபடாத ரோஜாவைக் கொண்டு வந்து உனக்குப் பிடித்தபடி பயன்படுத்தி கசக்கி எறியாதே.
இப்போ ரிதன்யாவுக்கு வருவோம். எவ்வளவோ புத்திசாலியாக, திறமை மிகுந்தவளாக தெளிவாக இருந்த பெண் தன் கணவனிடம் ஒரு அப் நார்மாலிட்டியை உணர்ந்ததும் தன் தாயிடம் சொல்லி இருக்க வேண்டும். அதில் தயக்கம் என்றால் தன் தாயிடம் தயக்கமின்றி பேசக் கூடிய ஒரு தோழியிடம் சொல்லி பெற்றவர்களுக்குத் தெரிவித்திருக்க வேண்டும். பெரியவர்கள் பக்குவமாக கையாண்டு அந்த சித்திரவதையை முடிவுக்கு கொண்டு வந்திருக்கலாம். முதலில் உடல் ரீதியான உழைச்சலை முடிவுக்குக் கொண்டு வந்திருக்க வேண்டும்.
இரண்டாவது தான் இறப்பதற்கு ஒரு நாள் முன்பு தான் இந்த உடல் சித்திரவதையைத் தன்னிடம் சொன்னதாகத் தாய் சொல்கிறார். அதன் பின் சனிக்கிழமை கோவிலுக்குத் தனியாக பிள்ளையை
அனுப்பி இருக்கக் கூடாது.
மூன்றாவதாக கொஞ்ச நாள் முன்னதாகவே தன் தம்பியிடம் வெளிப்படையாகச் சொல்லி இருக்கிறாள். அவரும் ஆஸ்திரேலியா வந்து வேலை பார்க்கலாம் என்று சொல்லத் தன் resume அவருக்கு அனுப்பி இருக்கிறாள். ஆனால் இந்தப் பெண்கள் செய்யும் தவறு சொன்ன கையோட யாரிடமும் சொல்லி விடாதே என வாயை அடைத்து விடுவது.
பெட் ரூமில் பெண்ணின் மாமியார் காமரா வைத்திருந்ததாகச் சொல்வதெல்லாம் எனக்கு முழுமையான உண்மையாகத் தோன்றவில்லை.
கடைசி கடைசியாக ஒன்று பணம் என்பது தேவை தான். ஆனால அது ஒன்று மட்டுமே தேவையான ஒன்றல்ல. அந்தப் பகுதி மக்களின் பேச்சு காசு, பணம், வசதி என்பதைப பற்றி மட்டுமே சுற்றி வருகிறது. அது எல்லாவற்றையும் விட முக்கியமானது உயிர். மற்றவை போனால் கிடைக்கும். ஆனால் உயிர் போனால் போனது தான்.
இனியாவது சிந்தியுங்கள் தோழமைகளே!!
02 July, 2025
நாவலின் பெயர். : இடிந்த கோபுரம்.
ஆசிரியர். : கு. ராஜவேலு.
LKM Publications.
விலை : ரூ 80/-
முதல் பதிப்பு ஜூன் 2006.
கதை தன்னிலையில் "நான்" என்று சொல்லப்படுகிறது. திடீரென்று வீட்டு வாசலில் முழுவதும் மழையில் நனைந்த ஒரு இள மங்கை நிற்கிறாள். கட்டாயப்படுத்தி வீட்டில் தங்க வைத்தால் மறு நாள் விடியற்காலையிலேயே எழுந்து போய் கடலில் குதித்து தற்கொலை செய்யப் பார்க்கிறாள். கதையின் ஆரம்பமே ஆவலைத் தூண்டும் விதமாய் இருக்கிறது.
அந்தப் பெண்ணின் பெயர் பொற்கொடி. மடத்துக்குச் சென்ற தம்பி சேவற்கொடியோன் தான் திரும்பி வருவதாகத் தந்தி கொடுத்திருக்கிறான். கதை நிச்சயமாக நாம் எதிர்பார்க்காத திசையில் தான் பயணிக்கப் போகிறது என்ற நம்பிக்கையைத் தருகிறது.
சேவற்கொடியோனுக்கு பொற்கொடியை கல்லூரியில் பார்த்தது போல் இருக்கிறது. ஆனால் அவள் அது தான் இல்லை என மறுக்கிறாள். அவனுக்கு புண்ணிய கோடி என்ற ஒரு கல்லூரித் தோழன். அவனும் தானும் கல்லூரியில் பார்த்ததாக உறுதி செய்கிறான். ஆனால் பொற்கொடி தனக்கு அவர்கள் இருவரையும் தெரியாது என்று உறுதியாக மறுத்து விடுகிறாள்.
பொற்கொடி மேல் ஈடுபாடு வந்து அந்த "நான்" தன் மனத்தை வெளிப்படுத்தும் போது "நான் என்றும் உங்களுடைய தூய உள்ளம் படைத்த அடிமை. குடியின் பெருமைக்கு மாசு ஏற்படாமல் உங்களுக்கு குற்றேவல் செய்வேன்" என்கிறாள். இது பலருக்கு வாய்ப்பதில்லை. தனக்குப் பிடித்த ஒருவரின் குடும்பத்தில் தன்னால் பிரச்னை வரும் போலிருந்தால் முருமையாக விலகத் தான் தோன்றுகிறது. இந்த ஒரு இடத்தைத தவிர வேற எங்கிலும் மனத் தடுமாற்றம் இல்லை. பொற்கொடி அக் குடும்பத்தின் உறுப்பினர் போலத் தான் நடமாடி வருகிறாள். பின் அந்த நிகழ்வுக்கான அவசியம் புரியவில்லை.
"சில எண்ணங்கள் மாந்தரைப் பழி வாங்கி விடும். அதனால் தான் எண்ணங்களைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று பெரியோர்கள் கூறுகிறார்கள். அது முடியாதவர்கள் எதிர் மறை சிந்தனை உடையோரிடமிருந்து விலகியே இருக்க வேண்டும்.
இவர்கள் இல்லாமல் அறவாழி, மணவாளர், பாரதி என்று மூன்று கதாபாத்திரங்கள் உண்டு. மணவாளரின் மனைவி பாரதி. பாரதியின் கல்லூரிப் பேராசிரியர் அறவாழி. கயவன். இவரது பேச்சில் மயங்கி பாரதி தன் கணவரையும் கைக் குழந்தையையும் விட்டு அறவாழியின் பின் செல்கிறாள்.
அவள் நகைகள், பணத்தை பிடிங்கிக் கொண்டு தனிமையில் விடும்போது தான் அவன் கயமை எண்ணம் புரிந்து திருந்தி திரும்பி தன் மேன்மை மிகு கணவரிடமே வந்து சேர்கிறாள். அப் போது இவ்வாறு சொல்கிறாள். " கல்லூரியில் எங்களுக்கு விளங்காத பாடப் பகுதிகளை இப்படித் தான் சொல்லால் மூடி வைத்து மூடுவார். அவருக்கும் அது விளங்காத பகுதி என்பது எங்களுக்குத் தெரியும். அதே நிலையில் தான் இப்பவும் பேசினார். நான் ஏமாறத் தயாராக இல்லை"
கல்லூரியில் அறவாழி மதிப்பெண்ணில் கை வைத்து விடுவேன் என்று பாரதியை அச்சுறுத்தியதும் அல்லாமல் அவள் மூலம் பிற மாணவிகளையும் வரவழைத்து பாழ்படுத்தி விடுவார். அந்த வலையில் சிக்காமல் தான் தப்பித்த பொற்கொடி ஒரு மழை நாளில் வாசலில் வந்து நிற்பாள்.
எனக்கு கொஞ்ச வருடங்கள் முன்பு மதுரையில் ஒரு பேராசிரியர் இதே போல் மாணவிகளைப் பயன்படுத்தியதற்காக சிறை சென்றது ஞாபகம் வந்தது. கல்வித் துறையில் கயமை காலம் காலமாக இப்படி நடந்து கொண்டு தான் இருக்கிறது போலும்.
ரசித்த பகுதிகள்:
-> " நீரிலே நித்திலத்தின் ஒளிகாட்டி நீந்துகிற மீனைப் போல எண்ணற்ற பருந்துகள் எழிற் கோல வானிலே மிக எளிதாக மிதந்து கொண்டு இருந்தன"
-> " அங்கே எண்ணற்ற விண் மீன்கள் கார்வானை வைரம் பரப்பி வைத்த நீல விதானமாக எழில் செய்த வண்ணம் ஒளி வீசிக் கொண்டிருந்தன."
-> " இந்த உண்மை தான் குழந்தையைப் போல எவ்வளவு மென்மையானது. எவ்வளவு விரைவில் கூம்பி விடுகிறது. பின் எத்தனைச் சடுதியில் மலர்ந்தும் விடுகிறது."
இந்த ஆசிரியர் எழுதியதில் நான் வாசித்த முதல் நாவல். மனதைக் கவர்ந்தது.
01 July, 2025
58 வயதில் விவாகரத்துப் பெற்ற ஒரு பெண்ணைப் பற்றி சொல்றேன்னு நேற்று எழுதி இருந்தேன். அந்த கதை இது தான். முப்பது வருடங்களுக்கு முந்தைய கதை.
அப்போ நான் முருகன்குறிச்சியில் Customer Service Centre ல் பணி புரிந்து கொண்டு இருந்தேன். ஒரு வயதான பெண் லேன்ட் லைன் வாங்க வந்திருந்தாங்க. Application fill up பண்ணிக் கொடுத்தாங்க. அதில் கணவர் பெயர் என்ற காலம் எழுதாமல் இருந்தது. நான் அதை நிரப்பச் சொல்லும் போது "வேண்டாம்மா" என்றார்கள். நான் "இல்லையா" என்ற போது அதை நிரப்பாமலே விட்டிடலாம்னு சொன்னாங்க. நான் அதற்கு மேல் வற்புறுத்தவில்லை.
மதியம் மறுபடி வந்தாங்க. அப்போ கூட்டம் குறைவா இருந்தது. " காலையில கூட்டமா இருந்ததால சொல்லல. உன்னிடம் சொல்லணும் போல இருந்தது. அதான் வந்தேன்னாங்க. அப்போ நான் இப்படி வயதானவர்களின் pet ஆக இருந்தேன். என்னிடம் கொஞ்ச நேரம் பேசிட்டு போகலாம்னு வர்ரவங்க உண்டு. " நீ பேசுறது என் இறந்து போன பேத்தி பேசுற மாதிரியே இருக்குன்னு" கண் கலங்க சொல்லிட்டு போன வயதானவர் உண்டு. இன்னும் பலப்பல உணர்வு பூர்வமான அனுபவங்கள் உண்டு.
சரி விஷயத்துக்கு வருவோம். வந்த பெண்மணி ஒரு ஐந்து வரை உள்ள பள்ளியின் தலைமையாசிரியை. திருமணமாகி இருந்தது. குழந்தைகள் இல்லை. கணவர் நெல்லையில இருந்து தென்காசி போய் பணி புரிந்து வந்திருக்கிறார். இவருக்கு அங்கே ஒரு பெண்ணோடு தொடர்பு இருந்ததும், அவர்கள் கணவன் மனைவியாக வாழ்ந்து வருவதும் இவருக்குத் தெரிந்திருக்கிறது.
அவரை விட்டு பிரிந்து விட வேண்டும் என்று வேகம் வந்திருக்கிறது. தன் பள்ளி மாணவிகள் தன் மேல் மிகுந்த மரியாதை வைத்து தன்னை ஒரு ரோல் மாடலாக பார்க்கிறார்கள். தான் விவாகரத்து செய்தால் ஒரு தவறான முன்னுதாரணம் ஆகி விடுவோம் என்று தான் ஓய்வு பெறும் வரை பல்லைக் கடித்துக் கொண்டு பொருத்திருந்திருக்கிறார்கள்.
ஓய்வு பெற்றதும் விவாகரத்துக்கு விண்ணப்பித்து வாங்கி விட்டார்கள். "இவ்வளவு நாள் பொறுத்து விட்டீர்கள். இப்போ போய் ஏன்மா " னு நான் கேட்டேன். " அவர் எனக்குச் செய்தது மிகப் பெரிய துரோகம். என்னுடைய கடின உழைப்பில் சேர்த்த பணம் அவருக்குக் கிடைக்கக் கூடாது. It is my hard earned money.
சட்டப்படி அவரை விட்டு நான் பிரிந்தால் தான் இது நடக்கும். அதனால் தான் விவாகரத்து வாங்கினேன் என்றார்கள்.
இவ்வளவு பொறுமையாகவும் நிதானமாகவும் ஆனால் அதே சமயம் தன் தன்மானத்தைக் காக்கும் விதமாகவும் நடக்கும் பொறுமை இந்தக் கால பிள்ளைகளுக்கு உண்டா?
நம் வீட்டில் இருக்கும் வரை தேவதைகளாக வளர்த்து விடுகிறோம். திருமணமான தொடக்கத்தில் எல்லா வீடுகளிலும் பிரச்னை வரும். அதை நம் பிள்ளைகள் சொல்லும் போது உணர்ச்சி வசப்படாமல் " நாங்கள் இருக்கிறோம். என்ன நடந்தாலும் பயப்படாதே" என்ற தைர்யத்தை பெற்றவர்கள் கொடுக்க வேண்டும்.
அதுவே அவர்களை மரண முடிவிலிருந்து மாற்றி விடும். பெற்ற குழந்தைகள் ஒரு முடிவைத் தேட நாமே வழி வகுக்கக் கூடாது. எவ்வளவு தான் பேசினாலும் விதி என்பது எப்படியோ அப்படி நடந்து விடும்.
நாமும் சில காலம் வருந்தி விட்டு அடுத்த வேலையைப் பார்க்கப் போயிடுவோம். என்னவோ போங்க.
#அவினாசிப் பெண்ணின் மரண துயரம்.
போ.து.ம்.ங்.க
சமீபத்தில் பர்வீன் சுல்தானா பேசிய ஒரு வீடியோ பார்த்தேன். 57 வயதில் விவாகரத்துக் கேட்ட ஒரு பெண்ணைப் பற்றிப் பேசினார். நீதிபதி பல காரணங்களைச் சொல்லிக் கேட்கிறார். இந்தப் பெண் எந்த வித கெட்ட பழக்கங்களும் தன் கணவருக்கு இல்லைன்னு சொல்றாள். விவாகரத்துக்கு சொல்லும் காரணம் "24 மணி்நேரமும் அவருக்கு சமைத்துப் போடுவதையே சிந்தனையில் நிறைத்திருக்க வேண்டி இருக்கிறது. போதும்ங்க." என்பது தான். இதற்கு சில பெண்களே கூட "சமைக்கிறத தவிர ஒரு பெண்ணுக்கு வேறென்ன வேலைன்னு" கேட்கலாம்.
அவள் தனி உயிர். அவளுக்கென ஒரு வாழ்க்கை இருக்கிறது. அதை அனுபவிக்க அவளுக்கு கொஞ்சம் நேரம் ஒதுக்கிக் கொடுங்கள்.
இப்போ திருமணமான 78 நாளில் ஒரு பெண் " போதும்" என்பதை உணர்ந்து தற்கொலை தான் வழி என முடிவெடுத்திருக்கிறாள். ( எந்தப் பிரச்னைக்கும் தற்கொலை ஒரு தீர்வல்ல). போதும்ப்பா இந்த வாழ்க்கை என்னால முடியலைன்னு அவள் பேசிய ஒரு ஆடியோ வலம் வருகிறது. பறி கொடுத்த பின் புலம்பி என்ன பயன்.
எனக்குத் தெரிந்த ஒரு பெண்மணி ஓய்வு பெற்ற பின் விவாகரத்துக்கு நீதி மன்றம் நாடினார். அவரைப் பற்றி நாளை எழுதுகிறேன்.
அதனால் "போதும்" என்ற உணர்வு ஒரு பெண்ணுக்கு எதனால், யாரால் எப்பொழுது வரும் என்பதை வரையறை செய்ய முடியாது.
குட்டக் குட்ட குனிகிறாள் என்பதாலே ஒருவரை வலுவற்றவர் என நினைக்காதீர்கள். உங்கள் மேல் உள்ள பாசத்தாலோ, தன் பெற்றவர் மேல் உள்ள மரியாதையாலோ, சமுதாய அழுத்தத்தாலோ கூட குனிந்து இருக்கலாம். " போ.து.ம்" என்று தோணும் போது வெடித்துச் சிதறுவாள்.
27 June, 2025
# மாமன் தமிழ் திரைப்படம்
யூட்யூபில் பார்த்தேன்.
இயக்குநர் : பிரசாந்த் பாண்டியராஜ்
முக்கிய கதாபாத்திரங்கள்: சூரி,(இன்பா) ஐஸ்வர்ய லக்ஷ்மி, (ரேகா) ஸ்வாசிகா, அவர் கணவராக பாபா பாஸ்கர், ராஜ்கிரண், விஜி, பிரகீத் சிவன்.( சூரியின் அக்கா மகன்)
கிராமங்களில் தன் தம்பிக்கு தன் மேல் உள்ள பாசத்தை அவன் மனைவிக்குக் கூட விட்டுக் கொடுக்காத தீவிரத் தன்மையை பார்த்திருப்போம். மாமியாரோடும் நாத்தனாரோடும் போராடி தன் கணவனின் அன்பை சிறிதளவேனும் தன் பக்கம் திருப்ப ஒரு பெண் படும் சிரமம் சொல்லி மாளாது.
இங்கே அக்காவின் மகன், சிறுவன் தான் . அவன் தன் தாய் மாமனை விட்டு ஒரு நொடிப் பொழுதும் பிரிவதாயில்லை. தாய் மாமனான சூரிக்கு திருமணமான பின் இதனால் வரும் சிரமங்கள் தான் கதை.
ஒரு மருத்துவராய் இருந்தும், குடும்பத்தார் மேல் சூரிக்கு இருக்கும் பாசத்தைப் பார்த்தே மணக்கத் தயாராய் இருக்கும் பெண் , அந்தப் பாசம் தன்னிடமிருந்து சூரியைத் தள்ளி வைக்கும் போது எவ்வளவு கடுமையாக முடிவெடுக்கிறாள் என்பது நம்மை கலங்க வைக்கத்தான் செய்கிறது.
கடைசி அரை மணி நேரம் நம்மை உணர்ச்சிக் கொந்தளிப்பில் தத்தளிக்க விடுகிறார்கள். உறவுகளின் அவசியத்தை , வலியுறுத்தும் இத்தகைய படங்கள் தற்காலத்துக்கு மிகவும் அவசியம்.
ராஜ்கிரண், விஜி தம்பதிகள் மூலம் எப்படி வாழ வேண்டும் என்று சொல்லித் தருகிறார்கள். சண்டையே போடாமல் வாழ்வது மட்டுமே சிறந்ததல்ல. சண்டை போட்டாலும் கொஞ்ச நேரத்தில் இணையத் தெரிவது தான் வாழ்க்கை.
இடையே நடிகர் விமல் வந்து எங்களோடு ஜாலியா சுத்திகிட்டு இருந்த உன்னைய சீரியஸாக்கி விட்டுட்டாங்க என்கிறார். அது கதைக்கும் நிஜத்துக்கும் பொருத்தமாய் இருக்கிறது. அவர் சீரியஸாவே இருக்கட்டும் . அப்போ தான் நல்ல நல்ல படங்கள் கிடைக்கும்.
கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்.
19 June, 2025
OTT Amazon Prime
மொழி : மலையாளம்
படத்தின் பெயர் : மதுர மனோகர மோஹம்.
இயக்குநர் : ஸ்டெஃபி சேவியர்.
முக்கிய நடிகர்கள் : ஷரப் உதின், ரஜிஷா விஜயன். பிந்து பணிக்கர்.
ஒளிப்பதிவாளர் : சந்துரு செல்வராஜ்
காமெடி ஸோனர்.
பல உறுப்பினர்கள் கொண்ட அழகிய குடும்பம். அந்தக் குடும்பத்து பள்ளி மாணவி தன் நண்பனோடு பக்கில் வந்து இறங்கினாலே குடும்பம் பதறும். சோஷியல் இன்ஃப்ளூயன்ஸர்கள் பார்த்து வீடியோ எடுத்துப் போட்டால் என்ன செய்வது என்று அவள் அண்ணன் அஞ்சுவான்.
உண்மை தான். சமுதாயத்தைப் பாதிக்கும் வீடியோ எடுத்துப் போடுபவர்கள் அந்த அளவுக்கு நேர்மை அற்றுப் போய் விடக் கூடாது. பத்திரிகை தர்மம் பொல் இதற்கு ஒரு தர்மம் இழுக்க வேண்டும்.
ஆனால் அதே அண்ணன் தன் ஜாதிப் பெண்ணக்க் காதலிக்கும் போது எந்தப் பிரச்னையும் இல்லாது போகும். பஞ்சாயத்தில் ஒருவர் சரித்திர முக்கியத்துவம் ( 😀) வாய்ந்த ஒரு உண்மையைச் சொல்லுவார்.
" நம் குடும்பத்துப் பையன் வேற ஜாதிப் பெண்ணை மணந்தால் பிரச்னை இல்லை. அதுவே நம் ஜாதிப் பெண் வேற்று இனத்துப் பையனைத் திருமணம் செய்தால் நம் இனத்தைச் சேர்ந்தவர்களின் எண்ணிக்கை குறையும். அடே!! அது அப்படியா?
அந்த கூட்டத்தில் ஒரு தந்தை கேட்பார் " என் மூத்த பெண்ணை நம் இனத்துப் பையனுக்குத் தான் திருமணம் முடித்தேன். அவளுக்கு ஒரு சிக்கல் வந்தால் எத்தனை பேர் உடன் வந்து பையனைக் கேள்வி கேட்பீர்கள்" .
இதே கேள்வி எங்கள் ஊர் தைர்யத் தமிழச்சி ஒரு நிகழ்ச்சியில் கேட்டாள். "ஆணவக் கொலை செய்யும் இந்தப் பெற்றோர் தான் தன் ஜாதிப் பையனைத் திரிமணம் செய்த பெண்ணுக்கு ஒரு பிரச்னை வரும் போது பெண் அனுசரித்துத் தான் வாழ வேண்டும் என்று அறிவுரை சொல்கிறார்கள் என்று கோபமாக பேசியது நினைவுக்கு வருகிறது.
ஒரு இடத்தில் தன் தங்கையின் தவறான போக்கு கண்டுபிடிக்கப்பட அண்ணன் இடிந்து போல் படியில் அமர்ந்து மேலே பார்க்க காமரா இன்னொரு தங்கை தன் வெள்ளை நிறப் புதுப் பாவாடையை குடை போல் சுற்றி வட்டமிடுவதைக் காட்டும். அழகான காட்சி இது.
ஒரு ஆண் பல பெண்களை ஒரே நேரத்தில் காதலித்து , பின் வீட்டில் பார்க்கும் பெண்டைத் திருமணம் செய்வதாக்க் கதைகளில் வருவதுண்டு. நிஜத்திலும் கண்டதுண்டு. இதில் மாத்தி யோசித்திருக்கிறார்கள். அதுவும் நகைச்சுவை விரவி.
2023 இல் வந்த படம். இப்போது தான் OTT க்கு வந்திருக்கிறது. மனதை ரிலாக்ஸ் செய்ய பார்க்கலாம். நாம் செய்யும் தவறு கண் முன்னே காட்சியாக விரியும் போது. ஒரு சிலர் மாறவும் வாய்ப்பிருக்கிறது.
படம் பார்க்கும் போது எனக்கு வழக்கமாக வரும் சந்தேகம் எழுந்தது. தன் குடும்ப பெண்களைப் பற்றிய தவறான விஷயங்களக ஆண்கள் தம் நண்பர்களோடு பகிர்ந்து அதைச் சரி செய்ய பார்க்கிறார்களே அந்த நணபர்களுக்கு இவர்கள் வீட்டுப் பெண்கள் மேல் எந்த அளவுக்கு மரியாதை இருக்கும். எனக்குத் தெரியல. நீங்களாவது சொல்லுங்க.
Subscribe to:
Comments (Atom)
